Friday, November 14, 2014

திருட்டுக் கரும்பு ருசிக்குமா?

வயது 15.

அந்த வயல்களில் ஆனந்தமாய் சுற்றிக்கொண்டே வெகுதூரம் வந்துவிட்டேன். பக்கத்திலே மிகப்பெரிய இலுப்பை தோப்பு. சுற்றிலும் கரும்பும் நெல்லும் செழித்து வளர்ந்திருந்தன.

100 அடிக்கு ஒன்று என பெரிய பெரிய பாறை கிணறுகள். கரையில் நின்று கொண்டே காலால் தண்ணீரை தொடலாம்.

நான் எதற்கு இவ்வளவு தூரம் வந்தேன்?.

"டேய், நம்ம மாட்ட காணும்டா. போய் தேடிப்பாருடா."

மாமா கொடுத்த உத்தரவை சிரமேற்கொண்டு கடமையே கண்ணாக.....

கரும்புகள் செழித்து என்னை வா வா என கூப்பிட்டன,

ரொம்ப தூரம் நடந்த களைப்பு.

என்ன செய்யலாம்? ஒரு கரும்பை ஒடித்து தின்னலாமா?

அய்யோ தோட்டக்காரன் பார்த்துவிட்டால்?

அதையும் பார்த்து விடுவோம். என்னை என்ன செய்து விடமுடியும்?
(முதன்முதலாய் செய்த திருட்டு)

நல்ல கரும்பை தேடிப்பார்த்து ஒடித்து தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை ராக்கெட்டாக பாவித்து நடுகொல்லையில் விட்டெறிந்தேன்.

கரும்பை கடிக்கும் வேளையில் கரடி

"யார்ரா அவன் கரும்ப ஒடிச்சது?யார்ரா நீ"
-கரும்புக்கு சொந்தக்காரர்

திருடும் போது இருந்த தைரியம் மாட்டிக்கொள்ளும் போது இல்லை.

கொஞ்சம் நான் விழித்ததும், என் நதிமூலத்தை ஊகித்திருக்கவேண்டும்.

என் உடையும் என் உடலமைப்பும் அவரைகொஞ்சம் பவ்ய படுத்தின.

"தம்பி யாருங்க?"

இப்போது கொஞ்சம் விறைப்பாக நான்(நாம யாரு?நம்மகிட்டேயா?)

மாமா பெயரை சொன்னேன்

"ஐயோ,  அவங்க வீட்டு பிள்ளையா நீங்க. போங்க தம்பி. கரும்புபோதுமா?"

"போதும்."

"தம்பி நீங்க செல்லம்மா மகனா?"

"இல்ல. அரசி மகன்"

"சரி போங்க"

வீட்டுக்கு வந்தால்?

"டேய் திருட்டுப் பயலே நம்ப கொல்லையில இல்லாத கரும்பாடா. அங்க எதுக்கு போய் திருடுன? இரு உங்கம்மா கிட்ட சொன்னத்தான் சரிப்பட்டு வருவ"
-மாமா

அதற்குள் எப்படி சேதி வந்திருக்கும்.ஒருவேள தந்தி அடிச்சிருப்பானோ?

"அவன் என்ன பண்ணிட்டான்? டேய் இங்க இருக்குற காட்ல உனக்கு என்ன வேனுமோ எடுத்துக்க
நீ யாரையும் கேக்க வேணாம். எவனா இருந்தாலும் எங்கிட்ட வந்து பேச சொல்லு.புள்ள தம்மாத்தூண்டு கரும்பு ஒடிச்சதுக்கு பஞ்சாயத்து"
-மாமி

ஐ லவ் யூ மாமி.

ஆனா மாமி பொண்ணு தரேன்னுட்டு ஏமாத்திட்டாங்க.

-காலச்சக்கரத்தின் மீது ஏறி பயணம்.

No comments:

Post a Comment