Saturday, June 27, 2020

இறப்பதெப்படி?

இறப்பதெப்படி?
******************

இறப்பதெப்படி?

தூக்குப் போட்டுக் கொள்ளலாமா?

வேண்டாம். கழுத்து இறுகி தொண்டை எலும்பு உடைந்து மூச்சு திணறி கைகால்களை உதைத்துக்கொண்டு...
ஒரு கோழையால் அது முடியாது.

நிறைய பேர் செய்வது போல் ஓடுகிற இரயில் அடிபட்டு?

இரயில் வரும் நேரம் பார்த்து மிகச்சரியாய் குறுக்கே பாயவேண்டும். சினிமாவில் வருவது போல் தண்டவாளத்தில் தலைவைப்பது எல்லாம் வேலைக்காகாது. மின்னல் வேகத்தில் பாய்ந்து அதைவிட விரைவாக உடல் கிழிந்து தலை உடைந்து  நாலு மூலைக்கும் சிதறுமோ? இல்லை தூக்கி முழுசாக எறிந்து விடுமோ?
இதுவும் வேண்டாம்.

சினிமாவில் வருவது போல் விஷம் குடித்தால்?
அதுசரி அவர்களுக்கு மட்டும் விஷம் எங்கிருந்து கிடைக்கும்?

"அண்ணே ஒருபாட்டில் விஷம் கொடுண்ணே. காசு வந்ததும் திருப்பி கொடுக்கிறேன்"

-செருப்பால் அடிக்கமாட்டான்?

தண்ணிர் லாரிகளுக்கு முன் பாயலாமா?

நம் நேரம்-அவன்நேரமும் கூட- அலர்டா இருப்பான்.

"ஏன்டா சாவுகிராக்கி கொய்யாலே வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா? அய்ய மூஞ்சப்பாரு"
நாலுதலைமுறைகள் சந்தி சிரிப்பார்கள் அவன் நாவிற்கிடையில்.

சின்னவயசா இருக்குறப்ப அருக்காணி புருசன்கிட்ட சண்ட போட்டுகிட்டு ஒரு நெருப்புட்டி குச்சி எல்லாத்தையும் தண்ணியில கரைச்சி வச்சிருந்துச்சே அதுமாதிரி?
அதெப்படி நெருப்புகுச்சி மருந்த தின்னா செத்து போகலாமா?

பத்து வயதில் வந்த சந்தேகம்.

வெறும் வயிற்றில் அரளி விதைகளை நைசாக அரைத்து விழுங்கி விட்டால் குடலில் பசை போல ஒட்டிக்கொள்ளும்.
அப்படியே யாருக்கும் தெரியாமல்  எங்காவது படுத்து விட்டால் போதும் கொஞ்ச நேரம்  வயிற்றை பிராண்டும் அதை தாங்கி கொண்டால் பிறகு பரலோகம்தான்......

நான் ஏன் சாகவேண்டும்?

அதுசரி நான் இதுவரை  வாழ்ந்து என்ன கிழித்து விட்டேன்.... 

நான்கு வயதில் அப்பாவை முழுங்கினேன்.  பத்து வயதில்  நண்பர் களோடு சேர்ந்து பீடி குடிக்க ஆரம்பித்தேன் படிப்படியாக வளர்ந்து குடி சீட்டாட்டம்  பெண்கள் சகவாசம்

அம்மாவின் உழைப்பை சீட்டாடத்தில் விட்டேன். கொடுக்காவிட்டால் அம்மாவை இழுத்துப்போட்டு அடித்தேன்.அம்மா இருக்கும் வரை அம்மாவின் அருமை புரியவில்லை.

இன்று நான் அனாதை. கையிலே காசில்லை சீந்துவோர் யாருமில்லை.  
வயது நாற்பதை நெருங்கி விட்டது. கடைசி வரை அம்மாவின் ஆசையை பூர்த்தி செய்யவில்லை. 

" டேய் கொமாரு ஒரு கல்யாணத்தை பண்ணிக்கிடா"

காதில் வாங்க வில்லையே. ஒரு வேளை அம்மா பேச்சை கேட்டிருந்தால் வாழ்க்கை மாறி இருக்கலாம்

எங்கு போவது என்று புரியாமல் நடக்கின்றேன் இந்த இரயில் பாதைகளுக்கிடையில்

சரேலென என்னை இரண்டு கரங்கள் இழுத்து விட்டன. நான் தண்டவாளத்துக்கு அப்பால்  போய் விழுந்தேன் உடலெங்கும் சி்ராய்ப்பு

என்ன ஏதென்று நிதானிப்பதற்குள் ஒரு பாசஞ்சர் கடந்து போனது.

" இந்நேரம் செத்து போயிருப்பய்யா"

 என்னை காப்பாற்றுவதாக நினைத்து இழுத்துப் போட்டவள் சொன்னாள்

அவளைப் பார்த்தேன்  அழகான முகம் ஆனால் ஏனோ முகமெல்லாம் சோகம் அப்பி கிடந்தது. கழுத்தில் தாலி இல்லை. வயது முப்பதுக்கு மேல் இருக்கலாம்.

" என்னை ஏன் காப்பாத்தினே?"

" சரி இரு அடுத்த இரயில்ல தள்ளி விடுறேன்"

நான் புன்னகைத்தேன்

" சரி வா  போகலாம்"

" எங்க?'

" என் கடைக்கு வாய்யா ஒரு டீ போட்டுத் தரேன் குடிச்சிட்டு போ"

" எங்கிட்ட காசு இல்ல"

" அட காசு வேனாம் உன்ன பாத்தா பாவமா இருக்கு, இனிமே சாக நினைக்காதே சாக நினைக்கனுமுன்னா நானெல்லாம் எப்பவோ செத்து போயிருக்கனும்"

மெதுவாக எழுந்து அவளைப் பின் தொடர்ந்தேன்.

அவள் ரோட்டோர டீக்கடை ஒன்றில் நுழைந்தாள். நான் அழுக்கு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன்.

ஒரு டீயை போட்டு என்னிடம் கொடுத்தாள்.

' ம்..... டீ நல்லாத்தான் போடுறாள்'

" இப்ப சொல்லு உனக்கு என்னதான் பிரச்னை?"

என் கதையை சொன்னேன்

" நீயெல்லாம் ஒரு ஆம்பள த்தூ, பொழைக்க ஆயிரம் வழி இருக்குய்யா, நான் ஏன் உசுரோட இருக்கேன்? இந்தா இதுங்க இரண்டுங்களுக்காத்தான்"

அவள் கை காட்டிய இடத்தில் மணலில் இரண்டு பெண் குழந்தைகள் புழுதியை பூசியபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

" அவன் இதுங்க இரண்ட கொடுத்துட்டு ரயில்ல அடிப்பட்டு செத்து போய்ட்டான், என்ன பண்றது? வயிறு இருக்கே  ஆனா ஒன்னுய்யயா   என்ன மாதிரி பொண்ணுங்க இந்த உசுர காப்பாத்துறத விட  மானத்த காப்பாத்துறது பெரிய விசயம்.  டீ குடிக்க வரியான்னு கேக்குற மாதிரி படுக்க வரியான்னு கேக்குறானுங்க"

நான் எதுவும் சொல்லாமல் வெளியே கிளம்பினேன்

" எங்கய்யா போற?"

" எங்காவது, எனக்குன்னு ஒரு வேல கிடைக்காமலா போயிடும்?"

அவள் என் கையைப் பிடித்தாள்

" நீ இங்கயே இருந்துடுயா எனக்குத் தொணையா"

" உன்னோட பேரென்ன?"

" காவேரி"

" இங்க பாரு காவேரி, நான் கேடு கெட்டவன். என்னால் உனக்கு எந்த பிரயோஜனமும் இருக்காது"

" இந்த உலகத்துல யாருமே கெட்டவங்க இல்லைய்யா பொறக்கும் போது.  இன்னைக்கு  நீ  புதுசா பொறந்திருக்க உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்குய்யா"

மறு பேச்சி பேசாமல் நீ தள்ளு இனிமே நான் டீ போடுறேன் என்றேன்

"உனக்கு டீ போடத்தெரியுமாய்யா?"

"என் வாழ்க்கையில் முழுசா கத்துக்கிட்ட வேல இது ஒன்னுதான்"

காவேரி க்ளுக்கென்று சிரித்தபடி  என் இடுப்பில் குத்தி  விட்டு உள்ளே போனாள்.


1 comment: