வள்ளி ஓடி விட்டாள்
*****************
" என்னங்க என்னங்க எங்க இருக்கிங்க
இங்க பாருங்களேன் நம்ம வள்ளி ஓடிப்போயிட்டாங்க இத படிச்சிப் பாருங்களேன்" என்று கையில் ஒரு கடுதாசியுடன் அரக்க பரக்க ஓடி வந்தாள் சிவகாமி.
கணவர் முருகேசன் அதை வாங்கி படித்துப் பார்த்தார்.
' அன்புள்ள அப்பா அம்மாவுக்கு உங்கள் மகள் எழுதிக்கொள்வது. என் மனதுக்கு பிடித்தவருடன் போகிறேன் என்னைத் தேட வேண்டாம்.
இப்படிக்கு உங்கள் அன்பு மகள்'
" சிவகாமி, இது எங்க இருந்துச்சி?"
" அவ டேபிள்லதாங்க, இப்ப என்னங்க பண்றது?"
உடனடியாக கல்லூரிக்கு போன் போட்டார்
வள்ளி இன்று கல்லூரிக்கு வரவில்லை என்ற பதில் வந்தது.
அவள் தோழிகள் யாருக்கு போன் செய்தாலும்
நாங்க பாக்கலயே என்ற பதில்தான் வந்தது.
நம் வள்ளியா இப்படி செய்தது என்ற குழப்பமே இருவருக்கும்
வள்ளி அப்படி பட்ட பெண் இல்லையே, எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா பேசி முடிச்சிருக்கலாமே இந்த பொண்ணு ஏன் இப்படி பண்ணுச்சி என்று புலம்பித் தீர்த்தார்.
இப்ப எங்கன்னு தேடுவது? சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சா எத்தனை அசிங்கம் என்றாள் சிவகாமி
" உன் வேலைய பாருடி என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, நீ புலம்பாத"
" புலம்பாம என்னங்க பண்றது?"
" நாமளே கண்டு புடிச்சி முறையாக கல்யாணத்தை பண்ணி வச்சிடுவோம்"
" அய்யோ அவன் என்ன சாதியோ குலமோ?"
" என்னடி பெரிய சாதி குலமுன்னு பினாத்துற, என் பொண்ணுக்கு பிடிச்சிருந்தா அப்பறம் அதில் நாம யாரு"
வாசலில் யாரோ வரும் சப்தம்
வள்ளிதான் வந்தாள். அப்பா அம்மாவின் குழப்பமான முகத்தைப் பார்த்தவுடன்,
' கண்டு புடிச்சிட்டாங்களோ' என்ற எண்ணம் ஓடியது அவள் மனதில்
பூனை போல் மெதுவாக தன் அறைக்குள் நுழைய முயன்றவளை
அப்பாவின் குரல் தடுத்தது.
" வள்ளி"
நடுங்கிய குரலில்,
" அப்பா" என்றாள்
" எங்க போய்ட்டு வர?"
" காலேஜ்குப்பா"
" பொய்"
" நிசமாந்தான்பா"
" வள்ளி என்கிட்ட மறைக்காத, என்கிட்ட உண்மைய சொல்லு உன்ன மன்னிச்சுடுறேன்"
" அது வந்து......என் மேல கோப பட மாட்டிங்கல்ல"
" என்னன்னு சொல்லி தொலடி"- சிவகாமி
" நீ பேசாம இரு சிவகாமி"
" பொண்ணுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கிங்க"
" அது வந்து, சொல்லுவேன் என்ன திட்டக்கூடாது சரியா"
" சரி திட்டல"
" அத்தைய பாக்க போனேன்"
" அத்தையா....?" எகிறினார் முருகேசன்
" பாத்திங்களா கோப மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப கோப படுறிங்க"
" சரி அத்தைக்கு நமக்கும் ஆகாதுன்னு தெரியுமுல்ல?"
" நீங்க உங்க தங்கச்சிக்கிட்ட சண்ட போட்டுக்கிட்டா நான் எங்க அத்தைக்கிட்ட பேசமா இருக்கனுமா?"
" அப்ப இது என்ன?" கையிலிருந்த பேப்பரை காட்டினார்
அவள் விழுந்து விழுந்து சிரித்தபடி
" இதுக்குத்தான் கோபமா? இது எங்க காலேஜ்ல நாடகம் போடுறோம் அதுக்கான ஸ்கி்ரிப்ட்"
" நீ சொல்றத நம்பலாமா?"
" உங்க மேல சத்தியம்"
" சரி இது எத்தன நாள் நடக்குது?"
" எது?"
" அத்தைய போய் பாக்குறது?"
" ரொம்ப நாளா"
" சரி உங்க அத்த எப்படி இருக்கா?"
" அத்தைக்கு உடம்பு சரியில்ல, ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க"
" என்னாச்சி என் தங்கச்சிக்கு, சிவகாமி கிளம்பு, ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடலாம்"
அரக்க பரக்க கிளம்பினார் முருகேசன்.
No comments:
Post a Comment