Saturday, June 27, 2020

நடிகன்



நடிகன்

நான் மனோ- மனோகர்

மிகப்பெரிய இடத்துப்பிள்ளை, இப்போது நடுத்தெருவில்.
அதற்கு காரணம் நான்தான்.

ஒழுங்காக படித்து முடித்துவிட்டு அப்பாவிற்கு உதவியாக அப்பாவின் வியாபாரங்களை கவனித்திருக்கலாம். 

நண்பர்களை சேர்த்துக்கொண்டு ஊர் சுற்றிக்கொண்டு குடி கும்மாளம் என்று இருந்தால் எந்த தகப்பனுக்குத்தான் பிடிக்கும்?

அவரும் எவ்வளவோ சொல்லி சொல்லி பார்த்தார் நான் திருந்தவில்லை. 
கடைசியில் பெல்ட் எடுத்து விளாசி விட்டார்.

நான் கோபித்துக்கொண்டு வெளியே வந்து விட்டேன்.

எதுவும் பிடிக்கவில்லை. என்னையே பிடிக்கவில்லை. பக்கத்தில் இருந்த பூங்காவில் அமர்ந்தேன்.

சாவதற்கும் தைரியமில்லை. சின்ன வயசிலியே அம்மாவை இழந்தவன். ஒருவேளை அம்மா இருந்திருந்தால் ஒழுங்காக வளர்த்திருப்பாளோ என்னவோ?

"ஹலோ சார்"

திரும்பிப்பார்த்தேன்.

ஒரு நாப்பது நாப்பத்தஞ்சு வயசு மனிதர் என்னருகில் நின்றிருந்தார்.

என்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்தேன்.

"வணக்கம், நான் பிலிம் டைரக்டர்.நல்ல ஹிரோ தேடிக்கிட்டு இருக்கேன்.நீங்க என் படத்துல நடிக்க முடியுமா?"

"என்ன சொல்றிங்க சார்?"

"நிஜமாத்தான் சொல்றேன்.நான் உங்கள போலவேத்தான் என் படத்துக்கு ஒரு ஹீரோ தேடிக்கிட்டு இருந்தேன். ஒன்னும் யோசிக்க வேணாம் வாங்க என் கூட"

இவரை நம்புவதா வேண்டாமா? எனக்குள் குழப்பம்.

என்கையில சுத்தமாக  காசு இல்ல. அதனால இழப்பதற்கு ஒன்றுமில்லை. இப்ப இருக்கும் மனநிலைக்கு ஒரு மாற்றுச்சூழல் வேண்டும். சரி போய்த்தான் பார்ப்போம்.

அடுத்த ஒருமணி நேரத்தில் ஒரு பிரமாண்ட மாளிகையின் முன் கார் நின்றது.

"வாங்க உள்ள இதான் நம்ம குடிசை"

பின் தொடர்ந்தேன்.

ஹாலில் உட்கார வைத்தவர், "இங்க உக்காருங்க. டீவி பாத்துக்கிட்டு இருங்க. கொஞ்ச நேரத்துல குளிச்சிட்டு வரேன்"

அவர் போனவுடன், மின்னல் போல் அவள் என்னெதிரில் காப்பி கோப்பைகளுடன்.

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தேன். அழகென்றால் அப்படி ஓர் அழகு.
தேவதைகளை பற்றி படித்திருக்கிறேன்.

இப்போது இதோ என்னெதிரில்.

"காப்பி எடுத்துங்குங்க"

"தாங்க்ஸ்"

"உங்க பேரு?"

"மனோ....மனோகர்"

"அப்பா உங்கள பெரிய ஹீரோவா ஆக்குறேன் சொல்லியிருப்பாரே?"

"ஆமாம்"

"நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும். அப்பாவுக்கு கொஞ்சநாளா மனநிலை சரி இல்லை."

நான் கொஞ்சம் மிரண்டேன்.

"பயப்படாதிங்க மனோ.நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் ஆகாது. அவர் ரொம்ப வருசம் அஸிடென்ட் டைரக்டராகவே காலத்தை ஓட்டியவர். அவருக்கு தன்னால் ஒரு டைரக்டரா ஆக முடியலயேன்னு வருத்தம்.ஆனா ரொம்ப திறமை உள்ளவர்.யாரும் அவர் திறமையை புரிஞ்சிக்கல.அந்த ஏக்கத்திலியே அவர் மனநிலை பாதிச்சிடிச்சி. இப்படித்தான் போற வர பசங்கள உங்கள ஹீரோ ஆக்குறேன் கொண்டு வருவார்.நடிக்க சொல்லி கேட்பார்.மறுநாள் நீங்க யாருன்னு கேட்பார்"

"ஐயோ. அப்ப நான் போயிடட்டுமா?"

"உடனே போயிடாதிங்க.அப்பறம் அவர கண்ட்ரோல் பண்ணவே முடியாது. கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிடுவார். இன்னைக்கு மட்டும் இங்க இருந்துட்டு நாளைக்கு போயிடுங்களேன்.ப்ளிஸ் எனக்காக"

புன்னகைத்தாள்

அந்த புன்னகையில் சுருண்டு போனேன்.

அவர் குளித்து முடித்து தலையை துவட்டியபடி வந்தார்.

"என்ன மனோ காப்பி சாப்பிட்டிங்களா?"

" சாப்பிட்டேன் சார்"

"சரி நான் வரேன் மனோ. அப்பா கூட பேசிக்கிட்டு இருங்க."
- கிளம்பினாள்.

"உங்க பேரு?"

"சுதா"

உள்ளே போய் மறைந்து போனாள்.

"சரி மனோ இப்ப உங்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறேன்.நான் சொல்ற சீனுக்கு நடிச்சி காமிங்க பாப்போம்"

'சரிதான் அவ சொன்னது'

"நீங்க சிச்சுவேசன் சொல்லுங்க சார். பிச்சி உதறிடுவோம்"

நானும் அவர் போக்கிலியே போனேன்.

"இப்ப பாருங்க மனோ. நம்ம ஹீரோ -அதாவது நீங்க- கடத்தல்காரங்க கிட்ட மாட்டிக்கிறிங்க. அப்ப ஒரு வசனம் பேசுறிங்க. 

'அய்யா என்ன விட்றுங்க. என்ன ஒன்னும் பண்ணிடாதிங்க.எனக்கு பயமா இருக்கு. நீங்க எவ்வளவு பணம் கேட்டாலும் எங்கப்பா கிட்ட வாங்கி கொடுத்துடுரேங்க ப்ளிஸ்... ப்ளிஸ் அப்படின்னு சொல்லுவேன்னு நினைசசிங்களாடான்னு' சொல்லிட்டு சும்மா வில்லன்கள பின்னி எடுக்குறிங்க."

அவர் சொன்னபடியே நடித்து காண்பித்தேன்.

"வெரிகுட். பிரமாதம்"

"அடுத்து லவ் சீன். இதுல கதாநாயகியா நடிப்பது யாரு தெரியுமா?, என் பொண்ணு சுதா"

"அவர் சொல்வது நடக்காது என்று தெரிந்திருந்தும். அதை கேட்டதும் வானத்தில் ஜிவ்வென்று பறந்தேன்"

சுதா வந்தாள். சில காதல் வசனங்களை பேச சொன்னார். சில நடன அசைவுகள். 

எல்லோம் ஓகே மனோ.அடுத்த மாசம் நம்ம படத்த ஆரம்பிச்சிடலாம்.

சாப்பிட்டு படுத்தேன். என் நினைவுகள் சுதாவையே சுற்றிச்  சுற்றி. 

கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தால் சுதா.

"என்னங்க சுதா?"

"அப்பா நம்மள வச்சி பேச சொன்ன வசனமெல்லாம் பொய்தான். ஆனாலும் அது உண்மையாக இருக்கக்கூடாதான்னு தோணுது."

அவள் கண்களை பார்த்தேன்.

வெட்கம் நிறைய.

குட்நைட் மனோ. தூங்குங்க காலையில பேசலாம். 

போய் விட்டாள், என் தூக்கத்தை பறித்துக்கொண்டு.

அவளை நினைத்துக் கொண்டே தூங்கிப் போனேன்.
காலையில் கதவை தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தேன்
கதவை திறந்தால் சுதா.

"மனோ. அப்பா தூங்குறார் நீங்க கிளம்புங்க. நாம அப்பறம் மீட் பண்ணலாம்"

'மனமில்லாமல் வெளியே வந்தேன்.
இனி எங்கு போவது? சரி வீட்டுக்கு போகலாம்'

வீட்டை அடைந்தேன்.

"ராஸ்கல். உன்னால எனக்கு இருபத்தைந்து லட்ச ரூபா லாஸ். யாரு உன்ன கடத்தி வச்சிருந்தாங்க? "

அப்பா எகிறினார்

"கடத்துனாங்களா? டாட், நைட் ஒரு லூஸ் கிட்ட மாட்டிக்கிட்டேன்"

போடா முட்டாள். இங்க வா. "

LED யில் ஒரு பென்ட்ரைவை செருகி ஆன் செய்தார். அதில்  நான் நடித்து காட்டிய வசனங்கள் ஓடிக்கொண்டிருந்து. அழகாக எடிட் செய்யப்பட்டிருந்தது கடைசி வசனம் மட்டும் வெட்டப்பட்டு.

நான் அழகாக ஏமாற்றப்பட்டிருக்கிறேன். 

உடனே சுதா வீட்டிற்கு போனேன். வீடு பூட்டிக்கிடந்தது.
கேட்டில் TO LET வாசகம்

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

அவர்கள் நடிப்புக்கு 25 லட்ச ரூபாய் குறைவுதான்.

No comments:

Post a Comment