Friday, June 26, 2020

கருப்பசாமி கோவில்

அடர்ந்த கருவேலங்காட்டிற்கு நடுவில்  இருப்பது தான் கருப்பசாமி கோவில்

அடர்ந்த மரங்களுக்கு இடையில்  மண்சிலையாக இருந்த கருப்ப சாமி பூசாரி குணசேகரன் தயவால் காற்றடிக்க ஆரம்பித்ததும்  மிகப்பெரிய கோவிலாக வளர்ந்து இன்று கருப்பசாமி மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்.  இத்தனையும்  கோவிலுக்கு  பூசாரியாக  குணசேகரன் வந்தபிறகுதான்.  தன் அப்பா வழியில் அப்பாவிற்கு பிறகு கோவிலின் பூசாரியாக உருவெடுத்தார்.

சும்மா ஒன்றுக்கும் இரண்டுக்கும் தட்டேந்திக்கொண்டிருந்தவருக்கு   கொஞ்சம் இவர் பக்கம் காற்றடிக்க யாரோ சிலருக்கு குறி சொல்லப்போய் அது பலித்து விட கருப்பசாமியை பின்னுக்குத்தள்ளி இவர் ஹீரோவாகிப்போனார். 

தமிழகத்தின் சில அரசியல் பிரமுகர் முதல் உள்ளூர் பிரமுகர்கள் அதிகாரிகள் , காவல்துறை என  மிக செல்வாக்கை பெற்றிருந்தார்.
 
தொலைந்த பொருளை கண்டுபிடிக்கவும் காரியம் கை கூடவும்  துரோகம் இழைத்தவனை வஞ்சம் தீர்க்க  என நிறைய பேர் வருவார்கள்.  செவ்வாய் கிழமை ஆகிவிட்டால் கோவிலுக்கே பேருந்துகள் விடுமளவுக்கு கூட்டம் கூடும்.   கூட்டத்திற்கிடையில்  நுழைந்து  பிடிகாசுகளை அள்ளி கொடுப்பார். அதை வாங்க கூட்டம் முண்டியடிக்கும்.

அந்த காசுகளை வாங்கி வீட்டில் வைத்தால் பணம் பெருகும் என்று நம்பிக்கை.  

ஒரு நாள் காலையில் அபிசேகம் செய்ய கோவிலைத்திறந்த பூசாரி குணசேகரனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் களவாடப் பட்டிருந்தது.  கோவிலின் வெங்கல சிலை காணவில்லை. 

உடனே தாமதிக்காமல்  தனது பைக்கில் கிளம்பினார் காவல்துறைக்கு புகார் கொடுக்க.

கொஞ்ச தூரம் சென்றிருப்பார். எதிரே  புல்லட் ஒன்று வந்தது. வந்தவர் போலிஸ் இன்பெக்டர்.   

இருவரும் அரக்க பரக்க கீழறங்கினர். 

"உங்கள பாக்கத்தான் ஓடியாரேன் இன்ஸ்பெக்டர். இன்னைக்கு................"

பூசாரி சொல்லி முடிப்பதற்குள் இன்ஸ்பெக்டர் இடைமறித்தார்.

" பூசாரி, ரொம்ப அர்ஜெண்ட்.
 ராத்திரி ஸ்டேசன்ல முகமூடி திருடனுங்க  நுழைஞ்சி  இரண்டு காண்ஸ்டபிள கட்டி போட்டுட்டு பெட்டிய உடைச்சி  இரண்டு லட்ச ரூபா பணம்,  FIR  புத்தகம்  வெளிய  நிப்பாட்டி வச்சிருந்த    பைக் எல்லாத்தையும்  தூக்கிட்டு போய்ட்டானுங்க  அது யாருன்னு நீங்கதான் கண்டுபிடிக்கனும் "

பூசாரி தலையில் கைவைத்தபடி உட்கார்ந்து விட்டார்.

No comments:

Post a Comment