Saturday, June 27, 2020

நல்லறமும் இல்லறமும்

#சிறுகதை

நல்லறமும் இல்லறமும்

வசந்திக்கு தன் கணவன்  சுந்தரம் யாருடனோ மொபைல் போனில் பேசுவது
தெளிவாக கேட்டது. ஆனால் மறுமுனையில் என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

"இல்ல காவேரி நான் சொல்றது கேளு"

"-------------"

"உண்மைதான். நீ எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்க இல்லங்கல்ல? நம்ம நட்பு நீடிக்கனுமுன்னு ஆசைபடுறேன். இதுவரைக்கும் நல்லவனா வாழ்ந்துட்டேன். அத்தோட  இந்த விசயம் என் பொண்டாடிக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். அவளுக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது."

"-----------------------"

"காவேரி நான் சொல்றத புரிஞ்சிக்க, இதுவரைக்கும் என் பொண்டாட்டிக்கு துரோகம் செஞ்சதில்லை, ப்ளீஸ் என்ன விட்டுடேன்"

சரேலென்று இடை புகுந்தாள் வசந்தி.

"எவ அவ காவேரி? இன்னைக்கு இரண்டுல ஒன்னு தெரிஞ்சாகனும். எத்தன நாளா நடக்குது இந்த கூத்து? ச்சே உங்களுக்கு அசிங்கமா இல்ல....."

"வசந்தி ஒரு நிமிசம்....."

"பேசாதிங்க, பேரன் பேத்தி எடுத்த வயசில.... மருமகன் மருமகளுக்குலாம் தெரிஞ்சா காரி துப்ப மாட்டாங்க?"

சுந்தரம் ஒரு கணம் ஆடிப்போனார்.

"கத்தாத வசந்தி... விசயம் தெரியாம பேசாத...,"

"இன்னும் என்ன விசயம் தெரியனும்... இப்பவே என் புள்ளைங்கள கூப்புடுறேன்"

சுந்தரம் அழுது விடுவார் போலிருந்தது.

"ப்ளீஸ் வசந்தி என்ன பேசவிடேன்"

"என்ன சொல்லப் போறிங்க?"

சுந்தரம் ஒன்றும் பேசாமல் நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

வசந்தி மெதுவாக அவர் அருகே வந்து அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.

சுந்தரம் இப்போது மேலும் குழம்பினார்.

'என்ன செய்கிறாள் இவள்?,அந்த கத்து கத்தியவள் இப்போது வாஞ்சையோடு முத்தமிடுகிறாள்"

வசந்தி கணவனின் தலையை மெல்ல வருடியபடி,

"பயந்துட்டிங்களா? இத்தனை வருட தாம்பத்தியத்தில் இவ்வளவுதானா என்னை புரிந்து கொண்டது? ஆனால் உங்களை நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன். உங்களால் தவறு செய்ய முடியாது.  என்ன பிரச்னை?"

"காவேரி என்னுடைய புதிய நண்பன், பல கஸ்டமர்களை எனக்கு  கொடுத்துருக்கான், அதுக்கு நானும் நிறைய கமிசன் கொடுத்திருக்கேன்,நாளைக்கு அவனுக்கு பர்த் டே. அதான் பார்ட்டி கொடுக்க கூப்பிடுறான், உனக்குத்தான் தெரியுமே நான் குடிக்க மாட்டேன்னு, அதான் நாசூக்கா தவிர்த்தா விடாப்பிடியா  கம்பல் பண்றான். இல்லன்னா நம்ம பிஸ்னஸ முறிச்சிக்கலாங்குறான்"

"ம்"

"அதான்... அதுக்குள்ள நீ கத்தி கலாட்டா பண்ணிட்ட நான் பயந்தே போய்ட்டேன்"

"சும்மா கொஞ்சம் விளையாடி பார்த்தேன். உங்க மேல எனக்கு சந்தேகம் வருமா?,அப்பறம் அந்த மாதிரி நட்பு நமக்கு வேண்டாம், கழட்டி விட்றுங்க போகட்டும்' என்றபடி தன் கணவனை கட்டிக் கொண்டாள் வசந்தி.

No comments:

Post a Comment