Sunday, June 28, 2020

ஸஸேமீரா

ஸஸேமிரா
~~~~~~~

நந்தன் என்று ஓர் அரசன். அவனுக்கு மதிநுட்பம் வாய்ந்த சுதன் என்றொரு மந்திரி.  சுதனின் மதிநுட்பத்தால் நந்தன் தன் எல்லைகளை விரிவு படுத்தி சிறப்பாக ஆட்சி செய்து வந்தான்.

நந்தனின் பட்டமகிஷி பானுமதி.  
பானுமதி யாராலும் வர்ணிக்க முடியாத அளவிற்கு கொள்ளை அழகு வாய்ந்தவள்.
இவர்களின் பட்டத்து இளவரசன் ஜெயபாலன்.

நந்தன் தன் மகாராணியின் மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருந்தான். அரசனுக்கு தன் மகாராணியை ஓவியம் வரைய நினைத்தான் இதற்காக நாட்டில் தலைசிறந்த ஓவியனை வரவழைத்து ஓவியம் வரையச் சொன்னான்.

ஓவியனும் மிகச் சிறப்பாக ஓவியத்தை வரைந்து முடித்தான். அரசன் அளாவிலா மகிழ்ச்சி கொண்டான்.ஓவியம் அத்தனை தத்ரூபமாக அமைந்திருந்தது.

ஆனால் நாட்டின் ராஜகுரு ஓவியனைப் பார்த்து இந்த ஓவியத்தில் ஒரு பிழை உள்ளது என்றார்.

அரசன் கேட்டான்,

"அப்படி என்ன பிழை உள்ளது ராஜகுருவே?"

"மகாராணியின் தொடையில் எள்ளளவு மச்சம் ஒன்று உண்டு.அது ஓவியத்தில் இல்லை" என்றார் ராஜகுரு.

அந்த நிமிடம் முதல் அரசனின் நிம்மதி பறி போயிற்று.

'மகாராணியின் மச்சம் ராஜகுருவுக்கு எப்படி தெரிந்தது?'

உடனே மந்திரி சுதனை அழைத்து,
இந்த ராஜகுருவை சிரச்சேதம் செய்து விடுங்கள் எனக் கட்டளை இட்டான்.

சுதனுக்கும் ராஜகுரு ஒரு உத்தமமான மனிதர் என்று தெரியும். இருந்தாலும் அரசனின் கட்டளை ஆயிற்றே.

ராஜகுருவோ, 

"என்னைப் போய் அரசன் சந்தேகப் பட்டானே, பானுமதி என் மகள் போல் அல்லவா?" என்று அழுது புலம்பினார்.

"ராஜகுருவை தன் வீட்டில் மறைத்து வைத்து விட்டு, 
அரசனிடம்
ராஜகுருவை சிரச்சேதம் செய்து நானே என் கையால் புதைத்து விட்டேன்" என்றான்.

அரசனும் மந்திரி மேல் உள்ள நம்பிக்கையால் சரியென்றான் இருந்தாலும் அரசனுக்கு உள்ளூர வருத்தம் ராஜகுருவை இழந்தது.

இது இப்படி இருக்க, ராஜகுமாரன் ஜெயபாலன் வேட்டைக்கு கிளம்பினான் அப்போது மந்திரியின் குமாரன் ராஜகுமாரனை தடுத்து  சகுனம் சரியில்லை இப்போது வேட்டைக்கு போவது தங்களுக்கு ஆபத்து என்றான்.

ராஜகுமாரனோ மந்திரிகுமாரனின் பேச்சை கேட்காமல் வேட்டைக்கு கிளம்பினான்.

காட்டில் பல மிருகங்களையும் பறவைகளையும் வேட்டையாடினான்.

பொழுதான சமயம் புலி ஒன்று இவனை துரத்தியது. புலிக்கு பயந்து  பதற்றத்தில் கையில் இருந்த வில் அம்புகளை போட்டு விட்டு ஒரு மரத்தின் மேல் ஏறிக் கொண்டான். மரத்தின் மேல் அவனுக்கு இன்னோர் ஆபத்து காத்திருந்து.

மேலே கரடி ஒன்று உட்கார்ந்து இருந்தது.

மேலே கரடி, கீழே புலி

செய்வதறியாது திகைத்தான்.
 அப்போது, ராஜகுமாரன் கரடியைப் பார்த்து சொன்னான் 

"என்னை மரணபயம் ஆட்டுவிக்குறது தயவு செய்து என்னை புலியிடமிருந்து காப்பாற்று எனக்கு அடைக்கலம் தா"

கரடி சொன்னது,
"ராஜகுமாரனே பயப்படவேண்டாம், நான் உனக்கு அடைக்கலம் தருகிறேன். வாருங்கள். அடைக்கலம் புகுந்தவர்களை காப்பாற்றுவதே மரபு."

கீழே புலி,
எப்படியும் இவன்  கீழறங்கித்தானே ஆக வேண்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தது.

நேரமோ இருட்டிக் கொண்டே வந்து இரவும் ஆனது.

அப்போது, கரடி சொன்னது,

"ராஜகுமாரனே என் மடியில் படுத்து உறங்குங்கள்.இப்போது அந்த புலி போகிற மாதிரி தெரியவில்லை. எப்படியும் காலையில் போய்விடும் அதன்பிறகு நாம் கீழே இறங்கலாம்"

ராஜகுமாரனும் கரடியின் மடியில் படுத்துக் கொண்டான்.

அப்போது புலி கரடியைப் பார்த்து சொன்னது.

"ஏ கரடியே நாம் ஓரினம் இவன் மானுடன் எப்படி பார்த்தாலும் நமக்கு இவன் பொது எதிரி. இவனால் இந்தக் காடே நாசம் அடையும். அவனை கீழே தள்ளி விடு நான் உன்னை விட்டு விடுகிறேன்"

அதற்கு கரடி,

"புலியே,இப்போதைக்கு இவன் என்னிடம் அடைக்கலம் புகுந்தான்.அடைக்கலம் புகுந்தவர்களை காப்பதே சாஸ்திரம்.நான் இவனுக்கு வாக்கு கொடுத்து விட்டேன் உயிரை காப்பதாய்,நான் சத்தியத்தை மீறுவதாக இல்லை" என்றது.

சற்று நேரம் கழித்து  கரடி ராஜகுமாரனை எழுப்பி,

"ராஜகுமாரா, நான் கீழே விழுந்து விடாமல் நீ  பார்த்துக் கொள் நான் சற்று நேரம் உறங்கிக் கொள்கிறேன்" என்று உறங்கி விட்டது.

அப்போது புலி, ராஜகுமாரனைப் பார்த்து,

"ராஜகுமாரா, கரடி ஏன் உனக்கு அடைக்கலம் தந்தது என்று நீ யோசிக்கவில்லையா? நான் போனபிறகு உன்னை கொன்று சாப்பிடத்தான். பேசாமல் கரடியை கீழே தள்ளி விடு. நான் உன்னை விட்டு விடுகிறேன்" என்றது.

ராஜகுமாரனும் தனக்கு அடைக்கலம் தந்தது கரடி என்று கிஞ்சித்தும் யோசிக்காமல் நன்றி மறந்து கரடியை கீழே தள்ளி விட்டான்.

கரடியின் நல்ல நேரம் கீழே விழ இருந்த கரடியை ஒரு கிளை தடுத்து விட்டது. உடனே கரடி ஒரு முனிவராக மாறினார்.

ஆம் முனிவர்தான் கரடியின் உருவில் இருந்தார்.

முனிவர் ராஜகுமாரனைப் பார்த்து சொல்கிறார்.

"நன்றி இல்லாத கீழ் மகனே, பயப்படாதே உன்னைப் போல் நான் செய்ய மாட்டேன்.ஆனால் நீ செய்த பாவத்தின் பலனை அனுபவிக்க வேண்டும். நான் உன்னை சபிக்கிறேன். நீ உன் சுய நினைவு மறந்து சித்தபிரமை பிடித்து அலைய வேண்டும்
உனக்கு 'ஸஸேமிரா' என்ற வார்த்தையை தவிர வேறொன்றும் நினைவில் இருக்காது.  எப்பொழுதும் அதே வார்த்தையை மட்டும் சொல்லிக் கொண்டு இருப்பாய்"

பயந்து போன ராஜகுமாரன், முனிவரின் காலில் விழுந்து வணங்கி தன்னை மன்னிக்க வேண்டினான்.சாப விமோசனமும் வேண்டினான்.

அதற்கு முனிவர்,
"சாபம் கொடுத்தது கொடுத்தது கொடுத்ததுதான்.இருந்தாலும் உனக்கு ஒரு பரிகாரம் சொல்கிறேன். என்று நீ இந்த ஸஸேமிரா என்ற வார்த்தையின் பொருளை ஒரு தர்மாத்மாவின் வாயால் கேட்டு உணர்கிறாயோ அன்று நீ சுயநினைவை அடைவாய்" என்றார்.

அதற்குள் விடிந்து விட்டது. புலியும் போய் விட்டது.

அங்கே அரண்மனையில் மகனை காணாமல் ராணி அழுது புலம்பினாள்.

அரசனும் மந்திரியும் படைகளுடன் வந்து ராஜகுமாரனைத் தேடி கண்டு பிடித்து அழைத்து சென்றனர்.

அரசன் தன் மகனுக்கு  உலகின் அத்தனை வைத்தியர்களையும் அழைத்து சிகிச்சை அளித்தான்.ஆயினும் குணம் ஆகவில்லை.

அப்போது அரசன் சொன்னான் மந்திரியிடம்,
"ராஜகுரு இப்போதிருந்தால் ஏதாவது உதவி செய்வார்.ஆராயாமல் அவசரப் பட்டு நான் அவரை கொன்று விட்டேன்"
என்றான்.

மந்திரி,

"அரசே கவலைப் படாதீர்கள்,நான் ஏதாவது வழி கிடைக்குமா என்று ஆலோசிக்கிறேன்" என்று கூறி விட்டு தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த ராஜகுருவிடம் கலந்து ஆலோசிக்கிறான்.

மறுநாள் ராஜகுருவின் ஆலோசனைப் படி மந்திரி அரசனிடம் சொல்கிறான்,

"அரசே என் வீட்டில் ஓர் இளம் பெண் இருக்கிறாள், தன்னை வந்து இளவரசன் பார்த்தால் ஏதாவது வழி சொல்கிறேன் என்கிறாள்,இதையும்தான் முயற்சித்து பார்ப்போமே" 

அதற்கு அரசனும் சம்மதிக்க, ராஜகுமாரன் மந்திரியின் வீட்டில் உட்கார வைக்கப் படுகிறான்.அவன் எதிரே ஒரு திரைச்சீலை. மறுபுறம் ராஜகுரு.

ராஜகுமாரன், எப்போதும் போல் 'ஸஸேமிரா' என்ற வார்த்தையை முனுமுனுக்கிறான்.

அதை கேட்ட ராஜகுரு அம்பிகையை தியானித்து அந்த வார்த்தையின் அர்த்தங்களை கேட்டார்.

அம்பிகையும் அந்த ஸ ஸே மிரா என்ற நான்கு எழுத்துக்களுக்கான நான்கு சுலோகங்களை அவர் காதில் உச்சரித்தாள்.

ராஜகுரு அந்த வார்த்தையின் முதல் எழுத்தான ஸ என்ற எழுத்தின் அர்த்ததை சொல்ல தொடங்கினார்


"ஸத் குணங்களை நம்பிக் கொண்டிருக்கும் ஒருவனை ஏமாற்றுவதில் என்ன புத்திசாலித் தனம் உள்ளது மார்பில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவனை கொல்வதில் என்ன வீரம் உள்ளது"

அடுத்து ராஜகுமாரன் ஸேமிரா என்றான். காரணம் அவனுக்கு ஸ என்ற எழுத்தின் அர்த்தம் தெரிந்து விட்டது.

ராஜகுரு சொல்கிறார்,

ஸே

"கங்கையில் குளித்தால் பிரம்மஹத்தி தோசம் போய்விடுகிறது.ஆனால் உற்ற நண்பனுக்கு துரோகம்  செய்பவனுடைய பாவம் விலகுவதில்லை.பாவத்தின் தன்மையை பொறுத்து தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும்"

அடுத்து 'மிரா ' என்றான் ராஜகுமாரன்.

'மி'

ராஜகுரு சொல்கிறார்:

"மித்திர (நண்பன்)துரோகி, நன்றியில்லாத மனிதன், நம்பிக்கை துரோகி இம்மூவரும் சந்திர சூரியர் இருக்கும் வரை நரகத்தில் கிடப்பர்.

அடுத்து, ரா என்றான்.

ராஜகுரு சொல்கிறார்,

'ரா'

ராஜனே உன் மகனின் நலத்தை உண்மையில் நீ விரும்பினால் அறிஞர்களை போற்று.அவர்களுக்கு பரிசுகளை கொடு 

என்று நான்கு சுலோகங்களை சொல்லி முடித்தார்.

ராஜகுமாரன் சுயநினைவுக்கு வந்து காட்டில் நடந்த விபரங்களை சொல்கிறான்.

அப்போது அரசன் சொல்கிறான்,

"அழகிய பெண்ணே நீ யார்? காட்டில் நடந்த விபரங்கள் உனக்கு எப்படி தெரியும் " 

திரைச்சீலையின் மறைவில் இருந்த ராஜகுரு பெண் குரல் விடுத்து, 

"எனக்கு நான் வணங்கும் அம்பிகை தேவி அருள் செய்கிறாள்.அவள் எனக்கு எல்லா விசயங்களையும் அறிய செய்கிறாள். அதுபோலவே  மகாராணியின் தொடையில் இருந்த மச்சம் என்னுடைய ஞான திருஷ்டியால் கண்டு கொண்டேன்.அதைதான் நான் சொன்னேன் என்கிறார்.வ

அரசன் திரைச்சீலையைப் பிடித்து இழுக்கிறான்  ராஜகுரு வெளிப் படுகிறார்.

மந்திரி சுதனும் ராஜகுருவை தான் மறைத்து வைத்த ரகசியங்களை சொல்கிறான்.

அரசன்  ராஜகுருவின் கால்களில் விழுந்து தன்னை மன்னித்து அருளுமாறு மண்றாடுகிறான். ராஜகுரு அரசனை மன்னித்து ஆசிர்வதிக்கிறார்.

குறிப்பு: இந்தக் கதை விக்கிரமாதித்தன் கதைகளில் வருவதாக சொல்லப் படுகிறது

Saturday, June 27, 2020

இறப்பதெப்படி?

இறப்பதெப்படி?
******************

இறப்பதெப்படி?

தூக்குப் போட்டுக் கொள்ளலாமா?

வேண்டாம். கழுத்து இறுகி தொண்டை எலும்பு உடைந்து மூச்சு திணறி கைகால்களை உதைத்துக்கொண்டு...
ஒரு கோழையால் அது முடியாது.

நிறைய பேர் செய்வது போல் ஓடுகிற இரயில் அடிபட்டு?

இரயில் வரும் நேரம் பார்த்து மிகச்சரியாய் குறுக்கே பாயவேண்டும். சினிமாவில் வருவது போல் தண்டவாளத்தில் தலைவைப்பது எல்லாம் வேலைக்காகாது. மின்னல் வேகத்தில் பாய்ந்து அதைவிட விரைவாக உடல் கிழிந்து தலை உடைந்து  நாலு மூலைக்கும் சிதறுமோ? இல்லை தூக்கி முழுசாக எறிந்து விடுமோ?
இதுவும் வேண்டாம்.

சினிமாவில் வருவது போல் விஷம் குடித்தால்?
அதுசரி அவர்களுக்கு மட்டும் விஷம் எங்கிருந்து கிடைக்கும்?

"அண்ணே ஒருபாட்டில் விஷம் கொடுண்ணே. காசு வந்ததும் திருப்பி கொடுக்கிறேன்"

-செருப்பால் அடிக்கமாட்டான்?

தண்ணிர் லாரிகளுக்கு முன் பாயலாமா?

நம் நேரம்-அவன்நேரமும் கூட- அலர்டா இருப்பான்.

"ஏன்டா சாவுகிராக்கி கொய்யாலே வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா? அய்ய மூஞ்சப்பாரு"
நாலுதலைமுறைகள் சந்தி சிரிப்பார்கள் அவன் நாவிற்கிடையில்.

சின்னவயசா இருக்குறப்ப அருக்காணி புருசன்கிட்ட சண்ட போட்டுகிட்டு ஒரு நெருப்புட்டி குச்சி எல்லாத்தையும் தண்ணியில கரைச்சி வச்சிருந்துச்சே அதுமாதிரி?
அதெப்படி நெருப்புகுச்சி மருந்த தின்னா செத்து போகலாமா?

பத்து வயதில் வந்த சந்தேகம்.

வெறும் வயிற்றில் அரளி விதைகளை நைசாக அரைத்து விழுங்கி விட்டால் குடலில் பசை போல ஒட்டிக்கொள்ளும்.
அப்படியே யாருக்கும் தெரியாமல்  எங்காவது படுத்து விட்டால் போதும் கொஞ்ச நேரம்  வயிற்றை பிராண்டும் அதை தாங்கி கொண்டால் பிறகு பரலோகம்தான்......

நான் ஏன் சாகவேண்டும்?

அதுசரி நான் இதுவரை  வாழ்ந்து என்ன கிழித்து விட்டேன்.... 

நான்கு வயதில் அப்பாவை முழுங்கினேன்.  பத்து வயதில்  நண்பர் களோடு சேர்ந்து பீடி குடிக்க ஆரம்பித்தேன் படிப்படியாக வளர்ந்து குடி சீட்டாட்டம்  பெண்கள் சகவாசம்

அம்மாவின் உழைப்பை சீட்டாடத்தில் விட்டேன். கொடுக்காவிட்டால் அம்மாவை இழுத்துப்போட்டு அடித்தேன்.அம்மா இருக்கும் வரை அம்மாவின் அருமை புரியவில்லை.

இன்று நான் அனாதை. கையிலே காசில்லை சீந்துவோர் யாருமில்லை.  
வயது நாற்பதை நெருங்கி விட்டது. கடைசி வரை அம்மாவின் ஆசையை பூர்த்தி செய்யவில்லை. 

" டேய் கொமாரு ஒரு கல்யாணத்தை பண்ணிக்கிடா"

காதில் வாங்க வில்லையே. ஒரு வேளை அம்மா பேச்சை கேட்டிருந்தால் வாழ்க்கை மாறி இருக்கலாம்

எங்கு போவது என்று புரியாமல் நடக்கின்றேன் இந்த இரயில் பாதைகளுக்கிடையில்

சரேலென என்னை இரண்டு கரங்கள் இழுத்து விட்டன. நான் தண்டவாளத்துக்கு அப்பால்  போய் விழுந்தேன் உடலெங்கும் சி்ராய்ப்பு

என்ன ஏதென்று நிதானிப்பதற்குள் ஒரு பாசஞ்சர் கடந்து போனது.

" இந்நேரம் செத்து போயிருப்பய்யா"

 என்னை காப்பாற்றுவதாக நினைத்து இழுத்துப் போட்டவள் சொன்னாள்

அவளைப் பார்த்தேன்  அழகான முகம் ஆனால் ஏனோ முகமெல்லாம் சோகம் அப்பி கிடந்தது. கழுத்தில் தாலி இல்லை. வயது முப்பதுக்கு மேல் இருக்கலாம்.

" என்னை ஏன் காப்பாத்தினே?"

" சரி இரு அடுத்த இரயில்ல தள்ளி விடுறேன்"

நான் புன்னகைத்தேன்

" சரி வா  போகலாம்"

" எங்க?'

" என் கடைக்கு வாய்யா ஒரு டீ போட்டுத் தரேன் குடிச்சிட்டு போ"

" எங்கிட்ட காசு இல்ல"

" அட காசு வேனாம் உன்ன பாத்தா பாவமா இருக்கு, இனிமே சாக நினைக்காதே சாக நினைக்கனுமுன்னா நானெல்லாம் எப்பவோ செத்து போயிருக்கனும்"

மெதுவாக எழுந்து அவளைப் பின் தொடர்ந்தேன்.

அவள் ரோட்டோர டீக்கடை ஒன்றில் நுழைந்தாள். நான் அழுக்கு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன்.

ஒரு டீயை போட்டு என்னிடம் கொடுத்தாள்.

' ம்..... டீ நல்லாத்தான் போடுறாள்'

" இப்ப சொல்லு உனக்கு என்னதான் பிரச்னை?"

என் கதையை சொன்னேன்

" நீயெல்லாம் ஒரு ஆம்பள த்தூ, பொழைக்க ஆயிரம் வழி இருக்குய்யா, நான் ஏன் உசுரோட இருக்கேன்? இந்தா இதுங்க இரண்டுங்களுக்காத்தான்"

அவள் கை காட்டிய இடத்தில் மணலில் இரண்டு பெண் குழந்தைகள் புழுதியை பூசியபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

" அவன் இதுங்க இரண்ட கொடுத்துட்டு ரயில்ல அடிப்பட்டு செத்து போய்ட்டான், என்ன பண்றது? வயிறு இருக்கே  ஆனா ஒன்னுய்யயா   என்ன மாதிரி பொண்ணுங்க இந்த உசுர காப்பாத்துறத விட  மானத்த காப்பாத்துறது பெரிய விசயம்.  டீ குடிக்க வரியான்னு கேக்குற மாதிரி படுக்க வரியான்னு கேக்குறானுங்க"

நான் எதுவும் சொல்லாமல் வெளியே கிளம்பினேன்

" எங்கய்யா போற?"

" எங்காவது, எனக்குன்னு ஒரு வேல கிடைக்காமலா போயிடும்?"

அவள் என் கையைப் பிடித்தாள்

" நீ இங்கயே இருந்துடுயா எனக்குத் தொணையா"

" உன்னோட பேரென்ன?"

" காவேரி"

" இங்க பாரு காவேரி, நான் கேடு கெட்டவன். என்னால் உனக்கு எந்த பிரயோஜனமும் இருக்காது"

" இந்த உலகத்துல யாருமே கெட்டவங்க இல்லைய்யா பொறக்கும் போது.  இன்னைக்கு  நீ  புதுசா பொறந்திருக்க உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்குய்யா"

மறு பேச்சி பேசாமல் நீ தள்ளு இனிமே நான் டீ போடுறேன் என்றேன்

"உனக்கு டீ போடத்தெரியுமாய்யா?"

"என் வாழ்க்கையில் முழுசா கத்துக்கிட்ட வேல இது ஒன்னுதான்"

காவேரி க்ளுக்கென்று சிரித்தபடி  என் இடுப்பில் குத்தி  விட்டு உள்ளே போனாள்.


நல்லறமும் இல்லறமும்

#சிறுகதை

நல்லறமும் இல்லறமும்

வசந்திக்கு தன் கணவன்  சுந்தரம் யாருடனோ மொபைல் போனில் பேசுவது
தெளிவாக கேட்டது. ஆனால் மறுமுனையில் என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

"இல்ல காவேரி நான் சொல்றது கேளு"

"-------------"

"உண்மைதான். நீ எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்க இல்லங்கல்ல? நம்ம நட்பு நீடிக்கனுமுன்னு ஆசைபடுறேன். இதுவரைக்கும் நல்லவனா வாழ்ந்துட்டேன். அத்தோட  இந்த விசயம் என் பொண்டாடிக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். அவளுக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது."

"-----------------------"

"காவேரி நான் சொல்றத புரிஞ்சிக்க, இதுவரைக்கும் என் பொண்டாட்டிக்கு துரோகம் செஞ்சதில்லை, ப்ளீஸ் என்ன விட்டுடேன்"

சரேலென்று இடை புகுந்தாள் வசந்தி.

"எவ அவ காவேரி? இன்னைக்கு இரண்டுல ஒன்னு தெரிஞ்சாகனும். எத்தன நாளா நடக்குது இந்த கூத்து? ச்சே உங்களுக்கு அசிங்கமா இல்ல....."

"வசந்தி ஒரு நிமிசம்....."

"பேசாதிங்க, பேரன் பேத்தி எடுத்த வயசில.... மருமகன் மருமகளுக்குலாம் தெரிஞ்சா காரி துப்ப மாட்டாங்க?"

சுந்தரம் ஒரு கணம் ஆடிப்போனார்.

"கத்தாத வசந்தி... விசயம் தெரியாம பேசாத...,"

"இன்னும் என்ன விசயம் தெரியனும்... இப்பவே என் புள்ளைங்கள கூப்புடுறேன்"

சுந்தரம் அழுது விடுவார் போலிருந்தது.

"ப்ளீஸ் வசந்தி என்ன பேசவிடேன்"

"என்ன சொல்லப் போறிங்க?"

சுந்தரம் ஒன்றும் பேசாமல் நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

வசந்தி மெதுவாக அவர் அருகே வந்து அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.

சுந்தரம் இப்போது மேலும் குழம்பினார்.

'என்ன செய்கிறாள் இவள்?,அந்த கத்து கத்தியவள் இப்போது வாஞ்சையோடு முத்தமிடுகிறாள்"

வசந்தி கணவனின் தலையை மெல்ல வருடியபடி,

"பயந்துட்டிங்களா? இத்தனை வருட தாம்பத்தியத்தில் இவ்வளவுதானா என்னை புரிந்து கொண்டது? ஆனால் உங்களை நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன். உங்களால் தவறு செய்ய முடியாது.  என்ன பிரச்னை?"

"காவேரி என்னுடைய புதிய நண்பன், பல கஸ்டமர்களை எனக்கு  கொடுத்துருக்கான், அதுக்கு நானும் நிறைய கமிசன் கொடுத்திருக்கேன்,நாளைக்கு அவனுக்கு பர்த் டே. அதான் பார்ட்டி கொடுக்க கூப்பிடுறான், உனக்குத்தான் தெரியுமே நான் குடிக்க மாட்டேன்னு, அதான் நாசூக்கா தவிர்த்தா விடாப்பிடியா  கம்பல் பண்றான். இல்லன்னா நம்ம பிஸ்னஸ முறிச்சிக்கலாங்குறான்"

"ம்"

"அதான்... அதுக்குள்ள நீ கத்தி கலாட்டா பண்ணிட்ட நான் பயந்தே போய்ட்டேன்"

"சும்மா கொஞ்சம் விளையாடி பார்த்தேன். உங்க மேல எனக்கு சந்தேகம் வருமா?,அப்பறம் அந்த மாதிரி நட்பு நமக்கு வேண்டாம், கழட்டி விட்றுங்க போகட்டும்' என்றபடி தன் கணவனை கட்டிக் கொண்டாள் வசந்தி.

வள்ளி ஓடி விட்டாள்

வள்ளி ஓடி விட்டாள்
*****************

" என்னங்க என்னங்க எங்க இருக்கிங்க
இங்க பாருங்களேன் நம்ம வள்ளி ஓடிப்போயிட்டாங்க இத படிச்சிப் பாருங்களேன்" என்று கையில் ஒரு கடுதாசியுடன் அரக்க பரக்க ஓடி வந்தாள் சிவகாமி.

கணவர்  முருகேசன் அதை வாங்கி படித்துப் பார்த்தார்.

' அன்புள்ள அப்பா அம்மாவுக்கு உங்கள் மகள் எழுதிக்கொள்வது. என் மனதுக்கு பிடித்தவருடன் போகிறேன் என்னைத் தேட வேண்டாம்.
இப்படிக்கு உங்கள் அன்பு மகள்'

" சிவகாமி, இது எங்க இருந்துச்சி?"

" அவ டேபிள்லதாங்க, இப்ப என்னங்க பண்றது?"

உடனடியாக கல்லூரிக்கு போன் போட்டார்

வள்ளி இன்று கல்லூரிக்கு வரவில்லை என்ற பதில் வந்தது.

அவள் தோழிகள் யாருக்கு போன் செய்தாலும் 
நாங்க பாக்கலயே என்ற பதில்தான் வந்தது.

நம் வள்ளியா இப்படி செய்தது என்ற குழப்பமே இருவருக்கும்

வள்ளி அப்படி பட்ட பெண் இல்லையே, எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா பேசி முடிச்சிருக்கலாமே இந்த பொண்ணு ஏன் இப்படி பண்ணுச்சி என்று புலம்பித் தீர்த்தார்.

இப்ப எங்கன்னு தேடுவது? சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சா எத்தனை அசிங்கம் என்றாள் சிவகாமி

" உன் வேலைய பாருடி என்  பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, நீ புலம்பாத" 

" புலம்பாம என்னங்க பண்றது?"

" நாமளே கண்டு புடிச்சி  முறையாக கல்யாணத்தை பண்ணி வச்சிடுவோம்"

" அய்யோ அவன் என்ன சாதியோ குலமோ?"

" என்னடி பெரிய சாதி குலமுன்னு பினாத்துற, என் பொண்ணுக்கு  பிடிச்சிருந்தா அப்பறம் அதில் நாம யாரு"

வாசலில் யாரோ வரும் சப்தம்

வள்ளிதான்  வந்தாள். அப்பா அம்மாவின் குழப்பமான முகத்தைப் பார்த்தவுடன்,

' கண்டு புடிச்சிட்டாங்களோ' என்ற எண்ணம் ஓடியது அவள் மனதில்
 பூனை போல் மெதுவாக தன் அறைக்குள் நுழைய முயன்றவளை

அப்பாவின் குரல் தடுத்தது.

" வள்ளி"

நடுங்கிய குரலில்,

" அப்பா" என்றாள்

" எங்க போய்ட்டு வர?"

" காலேஜ்குப்பா"

" பொய்"

" நிசமாந்தான்பா"

" வள்ளி என்கிட்ட மறைக்காத, என்கிட்ட உண்மைய சொல்லு உன்ன மன்னிச்சுடுறேன்"

" அது வந்து......என் மேல கோப  பட மாட்டிங்கல்ல"

" என்னன்னு சொல்லி தொலடி"- சிவகாமி

" நீ  பேசாம இரு சிவகாமி"

" பொண்ணுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கிங்க"

" அது வந்து,   சொல்லுவேன் என்ன திட்டக்கூடாது சரியா"

" சரி திட்டல"

" அத்தைய பாக்க போனேன்"

" அத்தையா....?" எகிறினார் முருகேசன்

" பாத்திங்களா கோப மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப  கோப படுறிங்க"

" சரி அத்தைக்கு நமக்கும்  ஆகாதுன்னு தெரியுமுல்ல?"

" நீங்க உங்க தங்கச்சிக்கிட்ட சண்ட போட்டுக்கிட்டா நான்  எங்க அத்தைக்கிட்ட பேசமா இருக்கனுமா?"

" அப்ப இது என்ன?" கையிலிருந்த பேப்பரை காட்டினார் 

 அவள் விழுந்து விழுந்து சிரித்தபடி

" இதுக்குத்தான் கோபமா? இது எங்க காலேஜ்ல நாடகம் போடுறோம் அதுக்கான ஸ்கி்ரிப்ட்"

" நீ சொல்றத நம்பலாமா?"

" உங்க மேல சத்தியம்"

" சரி இது எத்தன நாள் நடக்குது?"

" எது?"

" அத்தைய போய் பாக்குறது?"

" ரொம்ப நாளா"

" சரி உங்க அத்த எப்படி இருக்கா?"

" அத்தைக்கு உடம்பு சரியில்ல, ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க"

" என்னாச்சி என் தங்கச்சிக்கு, சிவகாமி கிளம்பு, ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடலாம்"

அரக்க பரக்க கிளம்பினார் முருகேசன்.

ghost

ghost

நண்பர்களுடன் செகண்ட் ஷோ பார்த்து விட்டு விசில் அடித்தபடியே  தன் அறைக்கு திரும்பிய பரத்  தன்னை யாரோ பின் தொடர்வது போல் உணர்ந்தான்.

மெதுவாக தலையை திருப்பிப் பார்த்தான்.
ஏதோ நிழலாடுவது போல் இருந்தது.

கொஞ்சம்  தைரியத்தை வரவழைத்துக் கொண்டு  நடந்தான்.

திரும்பவும் யாரோ பின் தொடர்வது போல் இருந்தது .

மெதுவாக திரும்பிப் பார்த்தான்.

தெருநாய் ஒன்று   வந்து கொண்டிருந்தது.

" ச்சே இதுக்கா பயந்தோம்"
தன்னைத்தானே தேற்றியபடி அறைக் கதவைத் திறந்தான்.  பேண்ட்டை கழட்டி  லுங்கிக்கு மாறிய பரத் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து லாவகமாக புகையை
 இழுத்தபடி மொபைலை எடுத்தான் 

அது சார்ஜ் முழுவதும் தீர்ந்து  எப்பவோ உயிரை விட்டிருந்தது

சார்ஜரில் மொபைலுக்கு கனைக்சன் கொடுக்கும் போதுதானா மின்சாரம் போக வேண்டும்.

அப்போதுதான் கவனித்தான்.

ஏதோ கரக் மொரக் என்ற சப்தம்

மேஜை டிராயரில் இருந்த பென்சில் டார்ச்சை எடுத்து அடித்துப் பார்த்தான்
ஒரு எலி பழைய புத்தகங்களை பிராண்டிக் கொண்டிருந்தது.
விளக்கு வெளிச்சத்தைக் கண்டதும்
பயந்து போன எலி  கண்ட படி ஓடத் துவங்கியது.
எலி ஓடும் பாதையில் டார்ச்சை திருப்பிய பரத்  டார்ச்சை கையிலிருந்து தவற விட்டான்.

கீழே விழுந்த டார்ச் விழுந்த வேகத்தில்
இங்குமங்கும் உருண்டது.

டார்ச்சை எடுக்கத் திரும்பிய பரத் அந்த சிறிய வெளிச்சத்தில்  ஒருப் பெண்ணின் முகத்தைப் பார்த்தான்.

'அறையை உள்ளே பூட்டி விட்டுத்தானே வந்தேன். அப்படியென்றால்?.........'

- தொடரும் 

பேய்க்கதை மன்னன்  எழுத்தாளர் ஏகாம்பரம் அடுத்த நாள்  பத்திரிகைக்கு கொடுக்க வேண்டிய கதையை எழுதி முடித்ததும் மின்சாரம் துண்டித்து போனது.

அப்போது தன்னைத்தவிர இன்னொரு ஆள் அறையில் இருப்பது போல் உணர்ந்தார்.

கைகால்கள் தந்தியடிக்க  முகமெல்லாம் வியர்த்துப்போய்  இருட்டில்  மொபைலைத் தேடினார்.

அப்போது இரண்டு கைகள் பின்னாலிருந்து  அவர் உடலைப்பற்றி இழுத்து அணைத்தது.

ஏகாம்பரம்  பயந்து நடுங்கியபடி குழறிய வார்த்தைகளில்

" ஏய் நீ யாரு?  கதவ பூட்டித்தானே வச்சேன் எப்படி உள்ள வந்த,உனக்கு என்ன வேணும்?" என்றார்.

கலகலவென்று சிரித்த அந்த உருவம்

" எனக்கு உன் உயிர்தான் வேண்டும் " என்றது.

" ச்சே நீதானா? நான் பயந்தே போய்ட்டேன்,  ஊரிலிருந்து எப்ப வந்த?"என்றார் சிரித்தபடி.

" இப்பத்தான் வந்தேன், வந்த நேரம். கரண்டு போயிடுச்சி. மெதுவா சாவிய போட்டு திறந்தேன்.  கொஞ்சம் உங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கலாமுன்னு பாத்தேன். இப்படி நடுங்குறிங்க"

' இதுக்கு அந்த பேயே வந்திருக்கலாம்'

'' என்ன வாய்க்குள்ள முனகுறிங்க"

" ஒன்னுமில்லம்மா. வெளிய சொல்லிடாத பொண்டாடிக்கு பயந்தவன்னு காரி துப்புவாங்க"

திருமணங்கள்

திருமணங்கள் விஞ்ஞானக்கூடத்தில் நிச்சயக்கப் படுகின்றன.
****************************""
வருடம் 2116

அவன் அந்த விஸ்தாரமான கட்டிடத்தின் வரவேற்பறையில் காத்திருந்தான்.

திரு.ax7543891 என்று வரவேற்பாளினி ஒலிபெருக்கியில் அழைத்ததும் அவன், அவள் முன் நின்றான்.

"உங்கள் பெயர்?"

"ax7543891"

"இனம்?"

"மனித இனம்".

"திருமணத்திற்காக பெண் வேண்டி விண்ணப்பத்திருந்தீர்கள் அல்லவா?"

"ஆமாம்"

"நீங்கள் விண்ணப்பித்திருந்தது மனித இனத்தில் ஒரு பெண் வேண்டி அல்லவா?"

"ஆமாம்"

"மன்னிக்கவும் திரு. ax. மனித இனத்தி்ல் பெண்கள் அருகி விட்டது உங்களுக்கு தெரியாதா? நீங்கள் அதற்கு இன்னும் பதினைந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். இதோ இந்த குழந்தைதான்.இவளுக்கு இப்போது வயது 12.இவள் வளர்ந்து என்று நீங்கள் திருமணம் செய்வது? அத்தோடு இவள் உங்களை நிராகரித்து விட்டால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது.
உங்களுக்கேற்ற இயந்திரப் பெண் தயாராக இருக்கிறாள்.
 என்னைப்போலவே"

அவன் தவிர்க்க முடியாமல் புன்னகை ஒன்றை உதிர்த்தான்.

"என்ன சம்மதமா?"

"சம்மதம்"

"மருத்துவச்சான்றிதழ் இருக்கிறதா?"

"இருக்கிறது".

"மன்னிக்கவும், சற்று காத்திருங்கள்"
என்று சொல்லிவிட்டு ஓரு சார்ஜர் வயரை எடுத்து தன் இடுப்பின் வலது பக்கத்தில் சொருகினாள்.

"பேட்டரி மாற்றவேண்டும் என நினைக்கிறேன்.இப்படி அடிக்கடி சார்ஜர் இறங்கி விடுகிறது"

அவன் ஒரு புன்முறுவல் ஒன்றை உதிர்த்தான்.

அடுத்து அவளின் ஆட்காட்டி விரலை இடவலமாக அசைத்தாள்.அதிலிருந்து செவ்வக வடிவில் 16 அங்குல அளவிற்கு திரை ஒன்று அவள் எதிரில் தோன்றியது...

அடுத்து அவள் முன் தோன்றிய எழுத்து வடிவ பிம்பத்தில் அவன் பெயரை தட்டினாள்..

திரையில் அவனைப் பற்றிய விபரங்கள் வந்து விழுந்தன..

பெயர்: ax7543891..

வயது: 27

தொழில்: விவசாயம்

தேவை:மணப்பெண்

எல்லாவற்றையும் என்டர் கொடுத்து ஒருபட்டனை தட்டினாள்.

"உங்கள் அதிர்ஷ்டம் திரு ax7543891அவர்களே.உங்களுக்கேற்ற மணப்பெண் தயாராகி விட்டாள். நீங்கள் இப்போதே இங்கேயே மணம் முடித்து அவளை அழைத்துச் செல்லலாம்"

"மிக்க நன்றி"

"சரி வாருங்கள் விஞ்ஞானக் கூடத்திற்கு செல்வோம்"

அவர்கள் இருவரும் அந்த விஞ்ஞானக் கூடத்திற்கு முன் நின்று தங்கள் அடையாள அட்டையை காட்டியதும் கதவுகள் பக்கவாட்டில் திறந்து அவர்களுக்கு வழிகாட்டின.

அங்கு ஓர் அறையில் கிடத்தப்பட்டிருந்த ஒருப் பெண்ணின் உடல் மிக அழகு படுத்தப்பட்டு சார்ஜர் ஏறிக்கொண்டிருந்தது. அவள் அழகாக இருந்தாள்.

இப்போது வரவேற்பறை பெண் மணமகளின் பின்னால் போய் அவள் முதுகின் மீது கை வைத்து ஓரிடத்தில் அழுத்தினாள். சார்ஜர் முழுவதும் ஏறியதற்கான குறியீடு காட்டியது.

"நல்லது. திரு. ax7543891 இவள் பெயர் ov5032678. இவள் இன்றிலிருந்து உங்கள் மனைவி. இவளை நீங்கள் அழைத்துச் செல்லலாம். இவள் எல்லா விதத்திலும் உங்களுக்கு உதவியாக இருப்பாள். இனிமையாக பாடுவாள். நடனம் ஆடுவாள். உலகத்தின் அத்தனை மொழிகளையும் இவள் உள் வாங்கியிருக்கிறாள். இவளுக்கு தெரியாத விசயங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு நிறைய கற்றுக்் கொடுத்திருக்கிறோம். மனைவிக்குரிய  அத்தனை கடமைகளையும் செய்வாள் குழந்தை பெற்றுக்கொள்வதை தவிர.

 எதாவது பிரச்னை என்றால் இவளை இங்கே அழைத்து வாருங்கள். நமது கணனி பொறியாளர் சரிசெய்து கொடுப்பார் ஒருவருடம் வரை இலவசமாக சரிசெய்து தருவோம். ஆனால் இவளை துன்புறுத்தினாலோ, அடித்தாலோ எங்களுக்கு உடனடியாக செய்தி வந்துவிடும்.வாழ்க வளமுடன்"

"மிக்க நன்றி...."

"என் பெயர் kj0000000. என்னை நீங்கள் kj என்றே அழைக்கலாம்"

அடுத்து kj மணப்பெண்ணைப் பார்த்து செல்வி.ov இவரை பிடித்திருக்கிறதா.இவரை மணந்து கொள்ள சம்மதமா?"

"எனக்கு சம்மதம்"

"சரி இருவரும் உங்கள் விரல் ரேகைகளை பதிந்து விட்டு நீங்கள் செல்லலாம். வாழ்த்துகள் இருவருக்கும்"

அவன் தன் புத்தம்புது மனைவியின் தோள்மீது கைப்போட்டபடி அவளை தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றான்.

ஈர்ப்பு

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு............

ஈர்ப்பு

ஒரு மாலை வேளையில் ஓர் உணவகத்தில்தான் அந்த இளம்பெண்ணை  சந்தித்தேன்.  ஏதாவது சாப்பிடலாம்  என்று  நினைத்து சர்வரை அழைக்க நினைத்த போது  என் எதிரில் இரண்டு குழந்தைகளுடன் ஓர் இளவயது பெண்  வந்து  உட்கார்ந்தாள். 

" வணக்கம் சார்"

" வணக்கம்மா"  

" என்னத் தெரியுதா சார்?"

" எனக்குத் தெரியலம்மா"

" முதல்ல இத பிடிங்க" என்றபடி ஒரு பூங்கொத்தை  நீட்டினாள்.

" இது எதுக்கும்மா?"

" முதல்ல பிடிங்க, அப்பறம் இன்னைக்கு என்னோட  ட்ரீட்"

" சாப்பிடுறேன். ஆனா காரணம் இல்லாத எப்படி?"

" முதல்ல சாப்பிடுங்க, அப்பறம் சொல்றேன்"

" சாப்பிட்டே ஆகனுமா?"

" ஆமாம், உங்கப்  பொண்ணு வாங்கி கொடுத்தா  சாப்பிட மாட்டிங்களா?"

"  கண்டிப்பா, இந்த குழந்தைங்க?"

" என் குழந்தைங்கதான். இவ சாருமதி, பையன் ஆனந்த்.இவங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க"

குழந்தைகளை ஆசிர்வதித்தேன்

" என்னோட பேரு கூட ஆனந்த கிருஷ்ணன் தான்"

" தெரியும் சார் உங்க பேர் தான் வச்சிருக்கேன்"

" என் பேர் எப்படி தெரியும்மா உனக்கு?"

" எனக்குத் தெரியும். சரி என்ன  ஞாபகம் இருக்கா உங்களுக்கு?"

" சொன்னாதானே தெரியும்"

'" உங்களுக்கு ரொம்ப மறதி சார்"

" வயசாடுச்சிம்மா"

" சார் உங்களுக்கு அப்படி ஒன்னும் வயசான மாதிரி தெரியலயே. என்னோட பெயர் கலைமதி

" சரி எனக்கு எதுக்கு  ட்ரீட்  கொடுக்க ஆசை படுற கலைமதி?"

" யோசிங்க. இப்ப சாப்பிடுங்க"

அனைவருக்கும் உணவு வரவே சாப்பிட்டோம்"

" என்ன யோசிச்சிங்களா?"

" ஞாபகம் வரலயே கலை"

"  நல்லவங்க அவங்க செஞ்ச நல்லத உடனே மறந்துடுவாங்க. சரி நானே சொல்றேன். நான் இப்ப ஒரு டாக்டர். குறிப்பாக சொல்லனுமுன்னா மகப்பேறு மருத்துவர்.  அன்பான கணவர் , பிஸ்னஸ் பண்றார். நல்ல மாமனார் மாமியார். இந்த ஊரிலயே ரொம்ப பெரிய  குடும்பம்"

" ரொம்ப சந்தோசம்மா"

" இத்தனையும் நீங்க சொன்ன சின்ன அறிவுரை"

" நானா, எப்ப?"

" இதே இடத்துல"

" இதே இடத்துலயா?"

" அப்ப நான் +2 படிச்சிக்கிட்டு இருந்தேன் அந்த வயசுக்கே உள்ள சேட்டைகள்,  அடாவடி இதெல்லாம் எங்கிட்ட இருந்துச்சி. அதோட அந்த வயசுக்கே உள்ள  பொய்யான ஈர்ப்பை காதல்னு நம்பிக்கிட்டு இருந்தேன். அப்ப தான் நீங்க மண்டையில உரைக்கிற மாதிரி புத்தி சொன்னிங்க"

" இப்ப  எனக்கு ஞாபகம் வருது கலை,  ஒரு பையன் கூட ஸ்கூல் யூனிபார்ம்ல சாப்பிட வந்த,  அந்த பையன்   கை கழுவ போன சமயத்துல  உன்ன  நல்லா திட்டி விட்டேன்."

"  யப்பா திட்டா அது ? நல்லா வெளுத்து வாங்கிட்டிங்க என்ன"

" இல்லம்மா, அறியா வயசுல ஏற்படுற ஈர்ப்பை காதல்னு நம்பி  ஏமாந்து போற புள்ளைங்க நிறைய, அதான் வந்த கோபத்துல நல்லா திட்டினேன். நான் கூட அப்பறம் ரொம்ப வருத்தப்பட்டேன். அதோட அன்னைக்கு நீங்க இரண்டு பெரும் பண்ண சேட்டைகள், அளவு கடந்த நெருக்கம் எனக்கு கோபத்த வரவச்சிடுச்சி.  அதுக்காக வருத்தப்படுறேன்"

" இல்லப்பா.... உங்கள அப்பான்னு கூப்பிடலாம்தானே?

" தாராளமா"

" அன்னைக்கு ரொம்ப அழுதேன். அப்பறம் யோசிச்சு பாத்தேன்.  யாரோ முன்னபின்ன தெரியாதவங்க ஏன் நம்மை திட்டனுமுன்னு.  அப்பறம் காதலை  மூட்டை கட்டி வச்சிட்டு தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன்"

" அந்த பையன்?"

" சொன்னதும் புரிஞ்சிக்கிட்டு விலகிட்டார்"

" விலகிட்டார்? ரொம்ப நல்ல பையன் போலிருக்கு"

" அதனாலதான்  நான் அவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"

" ஓ...!

" எனக்கு வேலை கிடைச்சப்ப, அவர்  அவங்கப்பாவோட வியாபாரத்தை கவனிச்சிக்கிட்டு இருந்தார். இதோ இதே  இடத்துலதான் என் காதலை அவர்கிட்ட சொன்னேன்"

" ரொம்ப சந்தோசப்  பட்டார். இரண்டு வீட்டலயும்  சம்மதிச்சி கல்யாணமும் பண்ணிக்கிட்டோம்  இப்ப நான்  சிட்டியில பேமஸ் டாக்டர்."

" ரொம்ப சந்தோசம்மா"

" அப்பா, நீங்க எங்க வீட்டுக்கு வரணும் ஒருநாளைக்கு"

" கண்டிப்பா வரேன் மா"

கலைமதி கொடுத்த விசிட்டிங்  கார்டை வாங்கிக் கொண்டு  வாழ்த்தி விட்டு விடைபெற்றேன்.

கொலையும் செய்வாள் பத்மினி


கொலையும் செய்வாள் பத்மினி
*********************

"எத்தன நாளைக்கு இப்படி நாம திருட்டுத்தனமா சந்திக்கிறது கௌதம்?"

"வெயிட் வெயிட். கூடிய சீக்கிரம் இதுக்கு முடிவு கட்டிடலாம் அனிதா. என் பொண்டாட்டி ஒரு டூவீலர் வேனுமுன்னு கேட்டுக்கிட்டு இருக்கா. இப்ப ஒரு ஆக்டிவா மாட்டியிருக்கு. நாலு மாசத்துல மூனு பேர காலி பண்ணிட்டு இரண்டு கை மாறியிருக்கு"

"எனக்கு புரியல கௌதம்.என்ன சொல்லவர?"

"அந்த வண்டிய வாங்குனவன் எவனும் உயிரோட இல்ல. கிட்டதட்ட எமன். ரொம்ப சல்லிசா விலைக்கு வருது. புது வண்டி. இந்த வண்டிய காட்டுனா எம்பொண்டாட்டி பத்மினி வானாங்க மாட்டா"

"வாவ்...! செம்ம ஐடியா"

"ம் அதான், புரியுதா இப்ப. வண்டிய பத்மினி பேருல வாங்க போறேன். இராசி இல்லாத வண்டின்னு அவ கிட்ட சொல்லமாட்டேன். அந்த வண்டி ராசிப் படி கூடிய சீக்கிரம்.... இல்லன்னாலும் நானே பிரேக் வயர கட் பண்ணிடுறேன். அப்பறம் அவ மூலமா கிடைக்குற இன்சூரன்ஸ் பணம், சர்விஸ் பணம் எல்லாம் நமக்குத்தான். ஓகேவா?"

"சூப்பர்"

"சரி ஏதாவது கொடுத்துட்டுப்போ"

"ம்ம்ம்மா"

*******************

கவனமாக பத்மினியின் பெயரில் வண்டியை வாங்கினான் கௌதம்

"என்ன பப்பி வண்டி பிடிச்சிருக்கா?"

"எப்படிங்க வண்டி புதுசா இருக்கு,விலை இவ்வளவு கம்மியா இருக்கு?"

"ஓனர் வெளிநாடு போறான் பப்பி அதான் வந்த விலைக்கு விக்கிறான்"

"நான் ரொம்ப லக்கிங்க"

"நானும்தான்"

****************

"ஏங்க வண்டியில ஏதோ சத்தம் வருது. நீங்க ஆபிஸ் போற வழியிலதான ஹோன்டா ஷோரூம். அப்படியே சர்விஸ் விட்டுட்டு சாயந்தரம் எடுத்தாந்துடுங்க"

மறுத்தால் சந்தேகம் வரும் என்று நினைத்த கௌதம் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். வழியில் எதிர்பட்ட அனிதா வழிமறித்து ஏறிக்கொண்டாள்.

"என்ன கௌதம் இந்த வண்டி?"

"அந்த சனியன் சர்விஸ் விட சொல்றா
மறுத்தா சந்தேகம் வரும்"

"ம்"என்றபடி கௌதமை கட்டிபிடித்த அனிதா அவன் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்

"என்ன அனி?"

என்றபடி திரும்ப முயன்றவன் அப்போது தான் கவனித்தான்
இரும்பு ஷீட்களை ஏற்றி வந்த ட்ரெயிலரை.

வேகமா பிரேக் அடிக்க முயன்று அது தோல்வியில் முடிந்து இரண்டு பேரையும் சேர்த்து ஆக்டிவா வோடு தூக்கி எறிந்தது அந்த ட்ரெயிலர் எமன்.

அதே நேரம்.

'ஏன்டா இராசி இல்லாத வண்டிய வாங்கி என்னையாட கொல்லப்பாக்குற?'

என்று முனகினாள்  பிரேக் வயரை பிடுங்கி விட்ட பத்மினி.

வடு

வடு
*********

"ச்சந்த்ரூஊஊஊஊஊஊஊஊ"

இத்தனை ஜனசந்தடியில் எனக்கு அந்த  குரல் தெளிவாக கேட்டது. அவள் ஒருத்திதானே என்னை இப்படி அழைத்தவள்.
இப்போது எங்கிருக்கிறாளோ? எப்படியிருக்கிறாளோ?
அவளுக்கும் என்னைப்போல் ஓரிரு நரை விழுந்திருக்குமல்லவா?  
அவளுக்கும் என்னைப் போல் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்குமல்லவா?

சென்னையில்  அலுவலக வேலையாக வந்தவன்  வேலையை முடித்து விட்டு நடைபோட்டவனை அந்தக்குரல் என்னவோ செய்தது. 

"ச்சந்த்ருஊஊஊஊ"

இப்போது குரல் மிக அருகில் தெளிவாக கேட்டது.

திரும்பிப் பார்த்தேன்.  வெண்ணிலா?  அவளேதான் எத்தனை வயதானால் என்ன? அந்தக் கன்னத்தில் உள்ள பிறை போன்ற வெட்டுக்காயத்தின் தழும்பு மறக்க முடியுமா?
*************

"இங்கப் பாருங்க உங்க பையன் என்ன பண்ணி வச்சிருக்கான்னு,புள்ளையா வளக்குறிங்க?"
எதிர்வீட்டு வெண்ணிலாவின் அம்மா  அப்பாவிடம் சண்டை பிடித்துக் கொண்டிருந்தாள்.

கன்னத்தில் ரத்தம் வடிய வெண்ணிலா அழுது கொண்டிருந்தாள். அப்பா வெளு வெளுவென்று வெளுத்து விட்டார். 

"இனிமே கிட்டிப்புல் விளையாடுவியா விளையாடுவியா?"

நான் வாங்கிய அடி கூட வலிக்கவில்லை எனக்கு. வெண்ணிலா அழுததுதான் எனக்கு வலித்தது.

அப்பாவே தன் சைக்கிளில் அவளை உட்கார வைத்து டாக்டரிடம் அழைத்துச்சென்றார்,
நான்கு தையல் போட்டார்களாம்.

மறுநாள் பள்ளிக்கு வரவில்லை அவள். இரண்டு நாள் கழித்து மெதுவாக என் வீட்டுக்கு வந்தாள்.

அம்மாதான் விசாரித்தாள். 

"இப்ப தேவலாமாடி"

"தேவலாம்  அத்த"

என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.

"சாரிடி நிலா"

"பரவால்லடா. வேனுமுன்னா செஞ்ச? நீதான் பாவம் என்னால உங்கப்பாகிட்ட அடி வாங்குன"

"பச்"

"டேய் ச்சந்த்ருஊஊ  உன் கணக்கு நோட்ட குடுறா, விட்டுப்போன கணக்குலாம் எழுதிக்கிட்டுத் தரேன்"

"ஏன்டி நிலா அவன்தான் உன் கன்னத்த பேத்தான்ல? அப்பறம் ஏன்டி அவன் கூட பேசுற? அப்பறம் உங்கம்மா திட்டுவா"

"போங்க அத்த. அம்மாவுக்கு வேற வேல இல்லை. வேனுமுன்னு யாராவது செய்வாங்களா?"

வெண்ணிலாவின்  குடும்பம் எங்கள் எதிர் வீட்டில் குடிவரும் போது நான் நான்காவது படித்தேன்.
 அவளும் நான்காம் வகுப்பு. அதிலிருந்து எங்கள் நட்பு வளர்ந்தது. இப்படியே எங்கள் நட்பு வளர்ந்தது பத்தாம் வகுப்பு வரை.  

ஒருநாள் அவளின் அப்பாவுக்கு வேலை மாற்றலாகி   வேறு ஊர் போக கிளம்பிக் கொண்டிருந்தார்கள். 

வெண்ணிலா அழுது கொண்டே விடை பெற்றாள்.

"என்ன மறந்துடாதடா ச்சந்த்ருஊஊ"

****************

அதன் பிறகு இதோ என் எதிரில் மூச்சு வாங்க நின்று கொண்டிருக்கிறாள்.
அவளைப் பார்த்தால் யாரும் நாற்பது வயது பெண்மணி என்று  சொல்ல மாட்டார்கள்.
மிக அழகாகவே இருந்தாள்.

நான் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் நெற்றி வகிட்டுக் குங்குமம் 
அவள் திருமணமானவள் என பறைச்சாற்றியது.

"ச்ந்த்ருஊஊஊஊ"

என் நினைவுகளை கலைத்தது அவளின் குரல்.

"என்னடா அப்படி பாக்குற.யப்பா எத்தனை வருசம் ஆச்சு உன்னைப் பாத்து"

"சரி இத்தன வருசம் கழிச்சி எப்படி என்ன நாந்தான்னு கண்டு புடிச்ச?"

"அது சஸ்பென்ஸ். அந்த ரகசியத்தை சொல்லமாட்டேன். 

ஆனா உன்னோட நடை இன்னும் மாறவே இல்லை. கொஞ்சம் சாஞ்சி சாஞ்சி நடக்குறது. தூரத்துலருந்து நீதானான்னு சந்தேகமா இருந்துச்சி. நீ திரும்புனப்ப கண்பார்ம் பண்ணிக்கிட்டேன்"

"---------------"

"ச்சந்த்ருஊஊஊஊ"

"சொல்லுடி"

"நான் பழையமாதிரியே கூப்புடுலமாமுல்ல?"

"தாராளமா. எல்லாரும் ரொம்ப மரியாத குடுத்து குடுத்து ரொம்ப கெட்டு போய்ட்டேன். நீயாவது அப்படி கூப்புடு"

"நீ மாறவே இல்லடா. ஒன்னு சொல்லட்டா?"

"சொல்லு"

" நாப்பது வயசிலும் ஹேண்ட்சம்மாத்தான் இருக்க.அப்படியே மணவறையில உக்கார வச்சா மாப்ளதான்"

"ச்சீ....போடி"

"நிசமாப்பா"

"சரி, நீ எப்டி இருக்க? எத்தன பிள்ளைங்க? உன் லைப் எப்டி இருக்கு?

"ம் நல்லாருக்கேன். இரண்டு பெண்கள். பெரியவள கட்டிக்குடுத்தாச்சி,உனக்கு?"

"இரண்டு பசங்க.படிக்கிறாங்க"

"ஒன்னு சொல்லட்டா ச்சந்த்ருஊஊ?"

"என்ன சொல்லப்போற"

"இதுக்கு மேல என் பர்சனல் லைப் பத்தி கேக்காத. நானும் கேக்கல"

"சரி கேக்கல"

"நம் இந்தியப் பெற்றோர்கள் என்ன நினைக்கிறாங்க தெரியுமா?  மகள் கண்ணுக்கு லட்சணமா இரண்டு புள்ளைய பெத்துட்டு, நல்லது கெட்டதுக்கு பட்டுப் புடவை கட்டிக்கிட்டு நகைகளை அள்ளிப் போட்டுக் கிட்டா அவ சந்தோசமா இருக்கான்னு முடிவு கட்டிடுறாங்க"

நான் அவளையே பார்த்தேன்.

"கமான் ச்ந்த்ருஊஊஊ , இன்னைக்கு என்னோட செலவுலாம் உன்னோடதுதான். பணம் நிறைய வச்சுருக்கியா?"

"ஏய் உனக்கு இல்லாததா? என்ன வேணும்?"

"நீ வா உனக்கு நிறைய செலவு வைக்குறேன்.முதல்ல வயித்துக்கு"

உயர்தர ஹோட்டலில் ஒரு மசால் தோசையும் காப்பியும் சாப்பிட்டு விட்டு காச கொடுறா என்று அதிகாரம் செய்தாள்.

"அடுத்து என்னவோ?"

"வா, சொல்றேன்"

பேன்சி ஸ்டோர் ஒன்றில் நுழைந்து கைநிறைய வளையல்கள், பொட்டு கண்மை நகபாலிஷ் என்று வாங்கித்தள்ளினாள்.

"அடுத்து?"

"வா சொல்றேன்"

பிரமாண்டமான துணிக்கடையில் நுழைந்து  சிம்பிளாக காட்டன் புடவை ஒன்றை எடுத்தாள். 

அடுத்து நகைக் கடையில் நுழைந்து  ஒரு வெள்ளி மோதிரம் வாங்கிக் கொண்டாள்.

"அடுத்து என்னவோ?"

"ஐஸ்க்ரிம்"

ஐஸ்கிரிமை அவள் சாப்பிடும் போது யாரும் பார்த்தால் இவளுக்கு ஒரு மருமகன் இருக்கிறான் என்று சொல்லமாட்டார்கள். ஒரு குழந்தையைப் போல ருசித்தாள்.

"பீச்சுக்கு போலாமா?"

உடனே ஒரு டாக்சி பிடித்தேன்.

கடற்கரையில் ஒருக் குழந்தையைப் போல  அலைகளோடு விளையாடினாள். என் மீது தண்ணீரை வாரி இறைத்தாள். கடலை வாங்கி கொறித்தாள். பழங்கதைகளை பேசினாள். எழுந்தாள்

"சரி நேரமாச்சி போலாம்"

"எங்க?"

"நேரா கோயம்பேட்ல என்ன பஸ் ஏத்தி விடுற"

"எந்த ஊருக்கு?"

"அது சொல்லமாட்டேன்,திருச்சி பஸ்ல ஏத்தி விடு.போதும்.

கோயம்பேடு வந்து திருச்சி பேருந்தில் உட்கார வைத்து தண்ணீர் பாட்டிலும் சில பிஸ்கட் பாக்கட்டும் சில வார இதழ்களும் வாங்கிக் கொடுத்தேன்.

பேருந்து புறப்படும் போது  கையசைத்தாள்.நானும் கையை அசைத்தேன். பேருந்து திரும்பும் போது ஒரு பேப்பர் மடிப்பு அவள் கையில் இருந்து கீழே விழுந்தது.

'அன்புள்ள  சந்த்ரு இன்னைக்கு  ரொம்ப சந்தோசமா இருந்தேன். என் பால்ய காலத்தை மீட்டு கொடுத்ததிற்கு மிக்க நன்றி. இதுவே நம் கடைசி சந்திப்பாக இருக்கட்டும்.உன்னை வாழ்க்கையில் திரும்ப சந்திப்போமா என்று நினைத்தேன்.உன்னை சந்தித்து விட்டேன்.அது போதும் எனக்கு.

உன் குழந்தைகளுக்கு என் ஆசிகள்.என் நினைவை இ்த்தோடு அழித்து விடு.உன் மனைவியை எப்போதும் போல் சந்தோசமாக வைத்துக் கொள்.நாம் இனிமேல் எப்போதும் சந்திக்க வேண்டாம்.அது இருவருக்குமே நல்லதல்ல.  நான் எங்கு இருக்கிறேன் என் மொபைல் நம்பர் என்ன, நான் பேஸ்புக்கில் இருக்கிறேனா   என்று தேட முயற்சிக்க வேண்டாம் பை.

இப்படிக்கு, உன் தோழி நிலா'.

பேருந்து என் கண்களில் இருந்து மறைந்து போனது.
*****************

பேருந்தில் பயணித்த வெண்ணிலா தன் மொபைல் எடுத்து பேஸ்புக்கை திறந்து அதில் சந்திரசேகரன் சுப்ரமணியன் என்ற பேஸ் புக் பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளையும் அறியாமல் சந்திரசேகரனின் புரபைல் பிக்சரை அவளது விரல்கள் ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது. அவள் உதடுகள் 
'சந்த்ரூஊஊஊஊஊ' என்று முணுமுணுத்தன.

முற்றும்.

*எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு சந்த்ரூவும் எல்லா ஆண்களுக்குள்ளும் ஒரு வெண்ணிலாவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இரத்தத்தின் நிறம் கருப்பு

இரத்தத்தின் நிறம் கருப்பு
****************************

See all notifications

'விஷ்னு commented on your post'

அபர்ணா சிரித்தபடி  தன் பேஸ்புக் பக்கத்தை திறந்தாள்.

எல்லாம் கமெண்ட்டும் ஒரே மாதிரியாய்.  

'வாவ்'

'நைஸ்'

'செம'

எல்லா கமெண்டையும் படித்துவிட்டு,

மெஸேஜ் பக்கத்தை திறந்தாள்.

அங்கேயும் வழக்கம் போல்

'ஹாய்'

'i love you sellam'

'varalama?'

'நீங்க எப்ப ஃபிரி?'

விஷ்னு மட்டும்  ஆய் செல்லம் உன் மேனிக்கு சோப்பாக நான் மாற வேண்டும் என்று கவிதை பாடி வைத்திருந்தான்.

இங்கே விஷ்னுவைப் பற்றி சொல்லியாக வேண்டும்.

பேஸ்புக்கில் பெண்களுடன் கடலை போடவேண்டியது.மடங்குகிற பெண்களை முடித்து விட்டு அடுத்தப் பெண்ணை தொடரவேண்டியது.வயது ஒரு பொருட்டில்லை அவனுக்கு தினம் ஒருப் பெண் வேண்டும்.  அவ்வளவுதான்.  கேட்டால் காமத்திற்கு வயதில்லை என்பான். கொஞ்சம் அழகும்  நிறைய வசதியும்  வைத்து பெண்களை வளைத்தான்.

இதோ நம் நாயகி அபர்ணா அவனுக்கு,
'இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே அன்பே'  என்று பதில் அனுப்பினாள் 

அவளை புகழ்ந்து வந்த அத்தனை கமெண்ட்களுக்கும் பொறுப்பாய் யாருடைய  மனம் கோணாமல் பதில் எழுதினாள்.

'உங்க நிஜப்பெயரே அபர்ணாதானா?  உங்கள நேரா பாக்கனுமே என்று வழிந்தான் சோப்பாக மாற துடித்த  விஷ்னு.

'ம் பாக்கலாமே' என்று பதில் அனுப்பினாள் அபர்ணா.

'ஐயோ தெய்வமே எப்பங்க?'

'சண்டே'

'எங்க? எத்தன மணிக்கு?'

'நுங்கம் பாக்கம் இரயில்வே ஸ்டேசன். காலை 5மணிக்கு'

'ஐயோ நீங்க சுடுக்காட்டுக்கு வரச்சொன்னாலும் வருவேங்க, ஆனா ஏன் காலையில  அதுவும் இரயில்வே ஸ்டேசன்ல?'

'நான் சண்டே ஊருக்கு கிளம்புறேன்.  அப்படியே உங்கள பாத்துட்டு கிளம்பலாமுன்னு'

'அப்ப நீங்க இருக்குறது நுங்கம் பாக்கமா?'

'ம்.சந்தோசம்தானே?

'இல்ல அபர்ணா'

'என்னாச்சி? நாந்தான் வரேன்னு சொன்னேனே'

'அந்த சண்டே வர இன்னும் நாலு நாள் இருக்கு'

'அதுக்கு?'

'அட்வான்ஸா முத்தம்'

'போடா'

'சரி  சரி கோச்சுக்காத அபர்ணா.என் போட்டோவ நீ பாத்திருக்க. உன் போட்டோவ நான் பாக்கலயே. எப்படி அடையாளம் கண்டு பிடிக்கிறது?'

'மஞ்சள் சுடில வரேன்,நல்லா கேளு.  கூட யாரையும் அழைச்சிட்டு வராத. தனியா வா'

'ம் சரி அபர்ணா.

நான்கு நாட்கள் கழித்து நுங்கம் பாக்கம் இரயில் நிலையத்தில் அந்த ஞாயிற்றுக் கிழமை காலை  மணி நான்கு ஐம்பதுக்கே   தனியாக கிடந்த இருக்கை ஓன்றில் அவளுக்காக காத்திருந்தான்.

இன்னும் விடியாத காலையில் ஐன நடமாட்டம் அதிகமில்லை.  மசமசவன்று கொஞ்சம் இருட்டாக வேறு இருந்தது.

மிகச்சரியாக  ஐந்துமணிக்கு நீல ஜீன்ஸ்  டீ சர்ட் அணிந்து இரயில் நிலையத்திற்குள் நுழைந்தாள் அபர்ணா.

நேராக விஷ்னு இருக்குமிடம் அறிந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்து அவன் பின்னால் கைபோட்டபடி அவன் வாயை கெட்டியாக  பொத்தியவள் அவன் என்ன ஏதென்று சுதாரிப்பதற்குள் மறுகையில் வைத்திருந்த கூர்மையான கத்தியை அவன் வயிற்றில் இறக்கினாள்.  

ஒருமுறை திமிறியவனை  கத்தவிடாமல்  வாயை கெட்டியாக மூடி கத்தியை இன்னொருமுறை இறக்கினாள்.

கொஞ்சம் கொஞ்சமாக அவன் சுவாசம் அடங்கியதும் கத்தியிலிருந்த இரத்தத்தை அவன் அணிந்திருந்த கருப்பு சட்டையில் துடைத்து விட்டு  கத்தியை பைக்குள் வைத்தவள் மறக்காமல் விஷ்னுவின்  மொபைலை எடுத்துக்கொண்டு சாவகாசமாக  அங்கிருந்து புறப்பட்டாள்.

இன்னும் சற்று நேரத்தில்

இன்னும் சற்று நேரத்தில்
உலகம் அழியப்போவது போல
ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி ஓடிக்கொண்டிருந்தனர்

பலூன் காரன் கையில் இருந்த ஊதிய பலூன்கள்
அவிழ்த்து விட்டால் பறந்துவிடுவோம் என்பது போல் ஆர்ப்பரித்தன

பலூனையே முறைத்தபடி
இருந்தது
காய்கறிக் கடையில் வெண்டைக்காயின்
முனை ஒடித்து போட்டபடி 
பேரம்பேசிய தாயின் இடுப்பில் இருந்த
குழந்தை ஒன்று.

சாராய நெடியில் நாளைய உலகம் நம் கையில் என்பது போல் பிதற்றினர் இருவர்

தேநீர் கடையின் வாசலில்
தேநீரை உறிஞ்சியபடி  சிலர்

இத்தனைபேர் மத்தியில்
நின்றபடி,

"ஏ அயோக்கியனே திரும்பிப் பார்"என்றேன்

நாலைந்து பேர் திரும்பிப் பார்த்தனர்.

"ஏ குடிகாரா" என்றேன்.

இரண்டு குடிமகன்களும் திரும்பிப் பார்த்தனர்.

"ஏ திருட்டுப் பயலே"
 என்றேன்

ஏழெட்டு பேர் ஏக காலத்தில்
திரும்பினர்.

"ஏ மனிதனே திரும்பிப் பார்"
என்றேன்.

ஒருவரும் திரும்பிப் பார்க்க வில்லை

ஊதிய பலூனின் நூலை
கையில் பிடித்தபடி
 அம்மாவின் இடுப்பில் இருந்த குழந்தை என்னைப் பார்த்து புன்னகைத்தது

நடிகன்



நடிகன்

நான் மனோ- மனோகர்

மிகப்பெரிய இடத்துப்பிள்ளை, இப்போது நடுத்தெருவில்.
அதற்கு காரணம் நான்தான்.

ஒழுங்காக படித்து முடித்துவிட்டு அப்பாவிற்கு உதவியாக அப்பாவின் வியாபாரங்களை கவனித்திருக்கலாம். 

நண்பர்களை சேர்த்துக்கொண்டு ஊர் சுற்றிக்கொண்டு குடி கும்மாளம் என்று இருந்தால் எந்த தகப்பனுக்குத்தான் பிடிக்கும்?

அவரும் எவ்வளவோ சொல்லி சொல்லி பார்த்தார் நான் திருந்தவில்லை. 
கடைசியில் பெல்ட் எடுத்து விளாசி விட்டார்.

நான் கோபித்துக்கொண்டு வெளியே வந்து விட்டேன்.

எதுவும் பிடிக்கவில்லை. என்னையே பிடிக்கவில்லை. பக்கத்தில் இருந்த பூங்காவில் அமர்ந்தேன்.

சாவதற்கும் தைரியமில்லை. சின்ன வயசிலியே அம்மாவை இழந்தவன். ஒருவேளை அம்மா இருந்திருந்தால் ஒழுங்காக வளர்த்திருப்பாளோ என்னவோ?

"ஹலோ சார்"

திரும்பிப்பார்த்தேன்.

ஒரு நாப்பது நாப்பத்தஞ்சு வயசு மனிதர் என்னருகில் நின்றிருந்தார்.

என்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்தேன்.

"வணக்கம், நான் பிலிம் டைரக்டர்.நல்ல ஹிரோ தேடிக்கிட்டு இருக்கேன்.நீங்க என் படத்துல நடிக்க முடியுமா?"

"என்ன சொல்றிங்க சார்?"

"நிஜமாத்தான் சொல்றேன்.நான் உங்கள போலவேத்தான் என் படத்துக்கு ஒரு ஹீரோ தேடிக்கிட்டு இருந்தேன். ஒன்னும் யோசிக்க வேணாம் வாங்க என் கூட"

இவரை நம்புவதா வேண்டாமா? எனக்குள் குழப்பம்.

என்கையில சுத்தமாக  காசு இல்ல. அதனால இழப்பதற்கு ஒன்றுமில்லை. இப்ப இருக்கும் மனநிலைக்கு ஒரு மாற்றுச்சூழல் வேண்டும். சரி போய்த்தான் பார்ப்போம்.

அடுத்த ஒருமணி நேரத்தில் ஒரு பிரமாண்ட மாளிகையின் முன் கார் நின்றது.

"வாங்க உள்ள இதான் நம்ம குடிசை"

பின் தொடர்ந்தேன்.

ஹாலில் உட்கார வைத்தவர், "இங்க உக்காருங்க. டீவி பாத்துக்கிட்டு இருங்க. கொஞ்ச நேரத்துல குளிச்சிட்டு வரேன்"

அவர் போனவுடன், மின்னல் போல் அவள் என்னெதிரில் காப்பி கோப்பைகளுடன்.

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தேன். அழகென்றால் அப்படி ஓர் அழகு.
தேவதைகளை பற்றி படித்திருக்கிறேன்.

இப்போது இதோ என்னெதிரில்.

"காப்பி எடுத்துங்குங்க"

"தாங்க்ஸ்"

"உங்க பேரு?"

"மனோ....மனோகர்"

"அப்பா உங்கள பெரிய ஹீரோவா ஆக்குறேன் சொல்லியிருப்பாரே?"

"ஆமாம்"

"நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும். அப்பாவுக்கு கொஞ்சநாளா மனநிலை சரி இல்லை."

நான் கொஞ்சம் மிரண்டேன்.

"பயப்படாதிங்க மனோ.நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் ஆகாது. அவர் ரொம்ப வருசம் அஸிடென்ட் டைரக்டராகவே காலத்தை ஓட்டியவர். அவருக்கு தன்னால் ஒரு டைரக்டரா ஆக முடியலயேன்னு வருத்தம்.ஆனா ரொம்ப திறமை உள்ளவர்.யாரும் அவர் திறமையை புரிஞ்சிக்கல.அந்த ஏக்கத்திலியே அவர் மனநிலை பாதிச்சிடிச்சி. இப்படித்தான் போற வர பசங்கள உங்கள ஹீரோ ஆக்குறேன் கொண்டு வருவார்.நடிக்க சொல்லி கேட்பார்.மறுநாள் நீங்க யாருன்னு கேட்பார்"

"ஐயோ. அப்ப நான் போயிடட்டுமா?"

"உடனே போயிடாதிங்க.அப்பறம் அவர கண்ட்ரோல் பண்ணவே முடியாது. கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிடுவார். இன்னைக்கு மட்டும் இங்க இருந்துட்டு நாளைக்கு போயிடுங்களேன்.ப்ளிஸ் எனக்காக"

புன்னகைத்தாள்

அந்த புன்னகையில் சுருண்டு போனேன்.

அவர் குளித்து முடித்து தலையை துவட்டியபடி வந்தார்.

"என்ன மனோ காப்பி சாப்பிட்டிங்களா?"

" சாப்பிட்டேன் சார்"

"சரி நான் வரேன் மனோ. அப்பா கூட பேசிக்கிட்டு இருங்க."
- கிளம்பினாள்.

"உங்க பேரு?"

"சுதா"

உள்ளே போய் மறைந்து போனாள்.

"சரி மனோ இப்ப உங்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறேன்.நான் சொல்ற சீனுக்கு நடிச்சி காமிங்க பாப்போம்"

'சரிதான் அவ சொன்னது'

"நீங்க சிச்சுவேசன் சொல்லுங்க சார். பிச்சி உதறிடுவோம்"

நானும் அவர் போக்கிலியே போனேன்.

"இப்ப பாருங்க மனோ. நம்ம ஹீரோ -அதாவது நீங்க- கடத்தல்காரங்க கிட்ட மாட்டிக்கிறிங்க. அப்ப ஒரு வசனம் பேசுறிங்க. 

'அய்யா என்ன விட்றுங்க. என்ன ஒன்னும் பண்ணிடாதிங்க.எனக்கு பயமா இருக்கு. நீங்க எவ்வளவு பணம் கேட்டாலும் எங்கப்பா கிட்ட வாங்கி கொடுத்துடுரேங்க ப்ளிஸ்... ப்ளிஸ் அப்படின்னு சொல்லுவேன்னு நினைசசிங்களாடான்னு' சொல்லிட்டு சும்மா வில்லன்கள பின்னி எடுக்குறிங்க."

அவர் சொன்னபடியே நடித்து காண்பித்தேன்.

"வெரிகுட். பிரமாதம்"

"அடுத்து லவ் சீன். இதுல கதாநாயகியா நடிப்பது யாரு தெரியுமா?, என் பொண்ணு சுதா"

"அவர் சொல்வது நடக்காது என்று தெரிந்திருந்தும். அதை கேட்டதும் வானத்தில் ஜிவ்வென்று பறந்தேன்"

சுதா வந்தாள். சில காதல் வசனங்களை பேச சொன்னார். சில நடன அசைவுகள். 

எல்லோம் ஓகே மனோ.அடுத்த மாசம் நம்ம படத்த ஆரம்பிச்சிடலாம்.

சாப்பிட்டு படுத்தேன். என் நினைவுகள் சுதாவையே சுற்றிச்  சுற்றி. 

கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தால் சுதா.

"என்னங்க சுதா?"

"அப்பா நம்மள வச்சி பேச சொன்ன வசனமெல்லாம் பொய்தான். ஆனாலும் அது உண்மையாக இருக்கக்கூடாதான்னு தோணுது."

அவள் கண்களை பார்த்தேன்.

வெட்கம் நிறைய.

குட்நைட் மனோ. தூங்குங்க காலையில பேசலாம். 

போய் விட்டாள், என் தூக்கத்தை பறித்துக்கொண்டு.

அவளை நினைத்துக் கொண்டே தூங்கிப் போனேன்.
காலையில் கதவை தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தேன்
கதவை திறந்தால் சுதா.

"மனோ. அப்பா தூங்குறார் நீங்க கிளம்புங்க. நாம அப்பறம் மீட் பண்ணலாம்"

'மனமில்லாமல் வெளியே வந்தேன்.
இனி எங்கு போவது? சரி வீட்டுக்கு போகலாம்'

வீட்டை அடைந்தேன்.

"ராஸ்கல். உன்னால எனக்கு இருபத்தைந்து லட்ச ரூபா லாஸ். யாரு உன்ன கடத்தி வச்சிருந்தாங்க? "

அப்பா எகிறினார்

"கடத்துனாங்களா? டாட், நைட் ஒரு லூஸ் கிட்ட மாட்டிக்கிட்டேன்"

போடா முட்டாள். இங்க வா. "

LED யில் ஒரு பென்ட்ரைவை செருகி ஆன் செய்தார். அதில்  நான் நடித்து காட்டிய வசனங்கள் ஓடிக்கொண்டிருந்து. அழகாக எடிட் செய்யப்பட்டிருந்தது கடைசி வசனம் மட்டும் வெட்டப்பட்டு.

நான் அழகாக ஏமாற்றப்பட்டிருக்கிறேன். 

உடனே சுதா வீட்டிற்கு போனேன். வீடு பூட்டிக்கிடந்தது.
கேட்டில் TO LET வாசகம்

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

அவர்கள் நடிப்புக்கு 25 லட்ச ரூபாய் குறைவுதான்.

அவளும் நானும்



அவளும் நானும்
***************
வயது 38

"அங்கிள் உங்கள அந்த ஆன்ட்டி கூப்பிடுறாங்க"

-- ஒரு சிறுமியின் குரல்.

"யாரு?"

திரும்பிப் பார்த்தால்
தாமரை.
*****************
வயது 7

"ஏன்டா மாப்ள இன்னும் படுக்கைய நனைக்கிற பழக்கம் போகலயாடா"

மாமி தன் பெண்களுக்கு முன்னால் கேட்கும் போது நாக்கைப் பிடுங்கி கொள்ளலாம் போல இருக்கும்
அதுவும் இந்த தாமரை நமுட்டு சிரிப்பு சிரிப்பாள்.

தாமரை பெரிய மாமா பெண். மாமாவிற்கு இரண்டு பெண்கள். 
தாமரை என்னுடன் பேச மாட்டாள். எதுவாக இருந்தாலும் தன் தங்கையிடம் கொடுத்து விடுவாள் கடன்காரி.

விடுமுறை மாமா வீட்டில்தான் கழியும். கினற்றுக்கு குளிக்கப் போனோம். அது பெரிய பாறைக்கிணறு. எனக்கு இறங்க பயம். அவள் நன்றாக நீச்சல் அடித்தாள். எனக்கு நீச்சல் தெரியாது. அப்பவும் நமுட்டு சிரிப்பு சிரித்து விட்டு எனக்காக பம்பு செட்டை போட்டு விட்டாள்.

வயது11

தாமரைக்கு இப்போது முன் இரண்டு பற்கள் நீண்டு அவலட்சனமாய் இருந்தாலும் அவள் லட்சனமாகவே இருந்தாள்

தாமரையின் ஊரில் பெரிய பள்ளிக்கூடம் இல்லாததால் எங்கள் வீட்டில் தங்கி படித்தாள். இங்கே நான் அவளை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிப்பேன். நான்தான் கிளாஸ் லீடர் வகுப்பில் முதல் இரண்டு இடங்களை தக்க வைத்து கொண்டு இருந்தேன். ஆறாம் வகுப்பு முழுவதும் கணேசன் என்ற என் பெயர் பரவியது.

வகுப்பில் புளியங்காய் மாங்காய் இலந்தைப்  பழம் வைத்துக்கொண்டு ரகசியமாக தின்பார்கள்.அதில் இரண்டு குள்ளச்சியும் ஒரு கட்டச்சியும் கூட்டு களவாணிகள்.
என் வேலை அவர்களை ஆசிரியரிடம் போட்டு கொடுப்பது.
பின்ன என்னா நமக்கு குடுக்காம திங்குறாளுங்க.

தாமரை படிப்பில் அத்தனை சுட்டி இல்லை

சில காலம் அவளை பிரிந்திட்டேன்.

வயது 19 

இப்போது சின்ன மாமாவிற்கு கல்யாணம் நடந்து சின்ன மாமி வந்துட்டாங்க.
நான் அவங்களுக்கு செல்லப் பிள்ளை. சிறுவயதிலிருந்தே தூக்கி வளர்த்தவர். சின்ன மாமிக்கு தெரியாத விசயங்கள் ஒன்றுமே இல்லை என்பது என் நம்பிக்கை.நகரத்தில் வளர்ந்தவர். எல்லோரும் ஒரே சொந்தம்.

நான் எப்போதும் சின்ன மாமியுடன் தான் இருப்பேன். 
மாமி வயலில் வேலை செய்து கொண்டிருந்தாங்க. நான் வரப்பில் நின்று படி அவங்க கிட்ட பேசிக்கொண்டு இருந்தேன்.
திடிரென்று கரும்பு தோட்டத்தில் இருந்து யாரோ வரும் சத்தம்.

வந்தவள் தாமரை.

கையில் பூக்கூடையுடன் ஒரு தேவதை போல வந்தாள் 
பருவத்தின் அத்தனை அழகையும் தன்னுள் அடக்கிய படி. பல வருடங்களுக்குப்பின் இன்றுதான் பார்க்கிறேன்.

என்னைப்பார்த்ததும் தலையை குனிந்து கொண்டாள். கண்களில் மின்னல் . இதழில் சிறு புன்னகை. 

புன்னகைக்கிறாளா? நமுட்டு சிரிப்பு சிரிக்கிறாளா?
கடன்காரி பேசினால் என்ன முத்தா உதிர்ந்து விடும்.

'ஆ! எங்க போச்சி பல்லு?'

வாய்க்காலில் தண்ணீர் சலசலத்து கொண்டு ஓடியது. ஒற்றை வரப்பில் பூமி அதிராமல் நடந்தவள் லேசாக திரும்பி பார்த்து விட்டு ஒரு கனகாம்பரம் பூவை வாய்க்கால் தண்ணீரில் போட்டாள். தண்ணீர் நான் இருக்கும் திசை நோக்கி வந்ததால், இப்போது பூ என்னை நோக்கி.....

குனிந்து பூவை எடுத்துக்கொண்டேன்.

திரும்பிப் பார்த்தால், அவள் வலமாக திரும்பி கரும்புத் தோட்டத்தில்  மறைந்து போனாள்.

எல்லாம் முடிந்தது ஒரு நிமிடத்தில்

"அத்தே எங்க பல்ல காணும் ?"

"டேய் இப்ப அவ வளந்துட்டாடா. நல்ல சதை போட்டிருக்கு. அவ பல்லுக்கு கம்பி கட்டியிருந்தா
அதான் பல்ல காணும். உனக்கு பிடிச்சிருக்கா? கட்டிக்கிறியா?"

"ஐயோ...! போங்க அத்தே. கிண்டல் பண்றிங்க."

"கிண்டல் இல்லடா. என்ன நீங்க இரண்டு பேரும் ஒரே வயசா போயிட்டிங்க. இல்ல நானே பெரியவர் கிட்ட சொல்லி முடிச்சுருவேன்"

"என்ன அத்தே இப்படி சொல்றிங்க? அப்ப உங்க பொண்ணு எனக்கில்லையா?"

"அய்யோ என் மருமவனே. அவளையும் சேத்து கட்டிக்க, இப்ப என்ன கெட்டுப் போச்சி?"

அதன் பிறகு தாமரை கல்யாணம் செய்து போய் விட்டாள்.
*********************
வயது 38

தாமரையை நோக்கிப் போனேன்.

"எங்களலாம் மறந்துட்டிங்களா?"

முதன் முதலாக என்னிடம் சகஜமாக பேசுகிறாள்.

என் மனைவி குழந்தைகளைப் பற்றி விசாரித்துக்கொண்டேப் போனாள்.
அவளுக்கு மூன்று பெண்கள். அதில் ஒரு பெண்ணுக்கு சற்றுமுன்தான் திருமணம் முடிந்தது.

நான் வந்தது அவளுடைய பெண்ணின் திருமணத்திற்குத்தான்.

பெண்ணையும் மாப்பிள்ளையையும் வரவழைத்தாள்.

"பிள்ளைங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க"

எனக்கு கட்டளையிட்டாள்.

ஆசிர்வதித்தேன்.
ஒரு நிமிடம் தாமரையை உற்றுப்  பார்த்தேன்.

தலையில் ஓரிரு நரைமுடிகள். ஒட்டிய கன்னம்.முன்நீட்டிய பற்கள். இருப்பினும் அவள் எனக்கு அழகாகவே தெரிந்தாள்.
அவள் இப்போது மாமியார். ஐந்தாவது படிக்கும் என் மகன் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

நான் என்னை ஒரு நிமிடம் உள் வாங்கினேன். 
38 வயது எனக்குள் எந்த மாற்றத்தையும் கொண்டு வர வில்லை. 
38 வயது ஆண் இன்னமும் அப்பாதான்.
38வயது பெண் மாமியாராகி விட்டாள்.

Friday, June 26, 2020

கருப்பசாமி கோவில்

அடர்ந்த கருவேலங்காட்டிற்கு நடுவில்  இருப்பது தான் கருப்பசாமி கோவில்

அடர்ந்த மரங்களுக்கு இடையில்  மண்சிலையாக இருந்த கருப்ப சாமி பூசாரி குணசேகரன் தயவால் காற்றடிக்க ஆரம்பித்ததும்  மிகப்பெரிய கோவிலாக வளர்ந்து இன்று கருப்பசாமி மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்.  இத்தனையும்  கோவிலுக்கு  பூசாரியாக  குணசேகரன் வந்தபிறகுதான்.  தன் அப்பா வழியில் அப்பாவிற்கு பிறகு கோவிலின் பூசாரியாக உருவெடுத்தார்.

சும்மா ஒன்றுக்கும் இரண்டுக்கும் தட்டேந்திக்கொண்டிருந்தவருக்கு   கொஞ்சம் இவர் பக்கம் காற்றடிக்க யாரோ சிலருக்கு குறி சொல்லப்போய் அது பலித்து விட கருப்பசாமியை பின்னுக்குத்தள்ளி இவர் ஹீரோவாகிப்போனார். 

தமிழகத்தின் சில அரசியல் பிரமுகர் முதல் உள்ளூர் பிரமுகர்கள் அதிகாரிகள் , காவல்துறை என  மிக செல்வாக்கை பெற்றிருந்தார்.
 
தொலைந்த பொருளை கண்டுபிடிக்கவும் காரியம் கை கூடவும்  துரோகம் இழைத்தவனை வஞ்சம் தீர்க்க  என நிறைய பேர் வருவார்கள்.  செவ்வாய் கிழமை ஆகிவிட்டால் கோவிலுக்கே பேருந்துகள் விடுமளவுக்கு கூட்டம் கூடும்.   கூட்டத்திற்கிடையில்  நுழைந்து  பிடிகாசுகளை அள்ளி கொடுப்பார். அதை வாங்க கூட்டம் முண்டியடிக்கும்.

அந்த காசுகளை வாங்கி வீட்டில் வைத்தால் பணம் பெருகும் என்று நம்பிக்கை.  

ஒரு நாள் காலையில் அபிசேகம் செய்ய கோவிலைத்திறந்த பூசாரி குணசேகரனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் களவாடப் பட்டிருந்தது.  கோவிலின் வெங்கல சிலை காணவில்லை. 

உடனே தாமதிக்காமல்  தனது பைக்கில் கிளம்பினார் காவல்துறைக்கு புகார் கொடுக்க.

கொஞ்ச தூரம் சென்றிருப்பார். எதிரே  புல்லட் ஒன்று வந்தது. வந்தவர் போலிஸ் இன்பெக்டர்.   

இருவரும் அரக்க பரக்க கீழறங்கினர். 

"உங்கள பாக்கத்தான் ஓடியாரேன் இன்ஸ்பெக்டர். இன்னைக்கு................"

பூசாரி சொல்லி முடிப்பதற்குள் இன்ஸ்பெக்டர் இடைமறித்தார்.

" பூசாரி, ரொம்ப அர்ஜெண்ட்.
 ராத்திரி ஸ்டேசன்ல முகமூடி திருடனுங்க  நுழைஞ்சி  இரண்டு காண்ஸ்டபிள கட்டி போட்டுட்டு பெட்டிய உடைச்சி  இரண்டு லட்ச ரூபா பணம்,  FIR  புத்தகம்  வெளிய  நிப்பாட்டி வச்சிருந்த    பைக் எல்லாத்தையும்  தூக்கிட்டு போய்ட்டானுங்க  அது யாருன்னு நீங்கதான் கண்டுபிடிக்கனும் "

பூசாரி தலையில் கைவைத்தபடி உட்கார்ந்து விட்டார்.

ஆதவன்

ஆதவன்

ஆதவன் என்ற பெயரைக் கேட்டாலே போதும் நான் நீ என்று சம்பளம் எல்லாம் வேண்டாம் அவர் படத்தில் தலைக் காட்டினால் போதும் என்ற முன்னனி நடிக நடிகைகள் இன்று அவரைப் பார்த்தாலே நழுவுகிறார்கள்.

கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் லைட்பாயாக, உதவி டைரக்டராக அதற்குப் பின் அசோசியட் டைரக்டர் என்று வளர்ந்து  மெதுவாக எப்படியோ ஒரு தயாரிப்பாளரைப் பிடித்து முதன்முதலாக ஒருப் படத்தை இயக்கினார். 

சண்டைக்காட்சிகள் இல்லாமல், குத்தாட்டம் இல்லாமல் இயல்பான பாடல்காட்சிகளுடன் மிகக் குறைந்த செலவில் படம் வெளிவந்தது.

படம் வசூலை வாரிகுவித்ததோடு அல்லாமல் அவார்ட்களை அள்ளித்தந்தது.

எல்லாம் மூன்று படங்கள் வரைதான். நாலாவதாக சொந்தப்பட முயற்சியில் படுதோல்வி. ஒருவாரம் கூட நிற்கவில்லை.இரண்டாம் நாளே காலைக் காட்சி போடலாமா என்று ஆலோசித்தனர் தியேட்டர்க்காரர்கள்

"ஆதவன் அவன் அவ்வளவுதாய்யா. நான் சொல்லல.  கலை கலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தா இன்டஸ்ட்ரில நிக்க முடியாது தெரியுமோ.அங்கங்க மசாலா தூவனும்".  -அனுபவஸ்தர் ஒருவர்.

அடுத்து ஒரு தயாரிப்பாளர் உதவியில் படம் எடுத்தார். படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.

தயாரிப்பாளர் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டார்.

'ஆதவன் படத்துக்கு போவோமா கூட்டமே இருக்காது ' என்று காதலர்கள் பேசிக்கொள்ளுமளவிற்கு போய்விட்டது.

வீட்டில் மனைவி முகங்கொடுத்து பேசுவதில்லை. பிள்ளைகள் கிட்டே வர பயந்தார்கள். இனி யாரிடமும் உதவி டைரக்டர் என்று போய் நிற்க முடியாது.

என்ன செய்யலாம்?
இருப்பதை எல்லாம் விற்று பழைய கடன்களை அடைத்தார். ஓரிருவரை வைத்துக்கொண்டு மற்றவர்களை செட்டில் செய்து அனுப்பி வைத்தார்.

கையிலிருப்பதை கூட்டிக் கழித்துப் பார்த்தார். இதோட சரி.ஒன்னு இதுல நிலைச்சி இருக்கனும் இல்ல.எங்கேயாவது போய் டீ கிளாஸ் கழுவினாலும் சரி என்று முடிவெடுத்தார்.

மளமளவென்று புதுசா நடிக நடிகையை தேர்வு செய்தார். புது இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தார். பாடல்களுக்கு இவர் சொன்ன மெட்டுக்களில் பாடல்கள் தயார் செய்தார்.  என்ன படம் என்ன கதை என்று யாருக்கும் புரியவில்லை.  படம் கொஞ்சம் வளர்ந்தது. ஒளிப்பதிவாளர் பாதியில் கழண்டு கொண்டார்.

"என்னய்யா படம் எடுக்குறான்.ஒரு இழவும் புரியல"

ஒருவழியாக படம் முடிவடைந்தது.
 கதை எங்கே என்று தேடுமளவிற்கு  இருந்தது.

கதை இல்லாவிட்டாலும் பரவாயில்ல ஒரு கோர்வை வேண்டாமா?. குரங்கு மாதிரி ஹீரோ கோட்டான் மாதிரி ஹீரோயின். கலைப்படமா மசாலாப்படமா ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. பாதியிலியே வினியோகஸ்தர்கள் எழுந்து விட்டனர்.

மெதுவாக சென்னையில் மட்டும் ஒரு தியேட்டரை வாடகைக்குப் பிடித்து காலை காட்சி மட்டும் திரையிட்டார். 
முதல் காட்சி பத்து பேர் கூட தேறாது.  அடுத்த காட்சி போடலாமா வேனாமா? ,ஆலோசித்தார் தியேட்டர்க் காரர்.

அடுத்த நாள் காலைக் காட்சி  கொஞ்சம் சுமாரானக் கூட்டம்   

கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அடுத்தடுத்து கூட்டம் திமுதிமுவென.

'என்னமா படம் எடுத்திருக்கான்யா.சூப்பர்ல?'

பத்திரிக்கைகள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தன.  மளமளவென்று தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் படம் பிய்த்துக்கொண்டு போனது.

இப்போது ஆதவனுக்கே ரசிகனின் மனநிலை புரியவில்லை.

"நான்தான் சொன்னேன்ல உண்மையான கலைஞனுக்கு அழிவு கிடையாதுய்யா ஆதவன் திரும்ப எழுந்து வருவான்னு சொன்னேன்ல இந்தா வந்துட்டான் பாத்தியா?"  

-தூற்றிய கூட்டம் துதி பாடியது.