Tuesday, May 19, 2015

சங்கிலி

"சுந்தரி, இனிமே நீ அந்த சங்கிலியோட சுத்துறத பாத்தேன் தொலைச்சுடுவேன் தொலைச்சி. ச்சே...ச்சே கருமம் அந்த தெருப்பொறுக்கியோட கொஞ்சறதும் குலாவுறதும் எனக்கு சுத்தமா பிடிக்கல"

"அதுல என்னப்பா தப்பு? உங்களுக்கு பிடிக்கலன்னா போங்க, எனக்கு பிடிச்சிருக்கு"

"பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு எம்புத்திய...., அதிலும் நான் இல்லாத நேரம் பாத்து உன் பெட்ரூம் வரைக்கும் வந்துருக்கான் அந்த தெருபொறுக்கி நாய்"

"அப்பா அவன திட்டாதிங்க எனக்கு பொல்லாத கோபம் வரும்"

"ஓஹோ அந்த நாய்க்காக பெத்த அப்பனயே எதுத்து பேசுறியாமா?"

"அப்பா அவன் நாய்தான். ஆனா அவன் இல்லன்னா என்னால பாதுகாப்பா ஆபிஸ் போய்ட்டு வரமுடியாது. அதோட அவன் தெருவுல கிடக்கிறத எதுவும் திங்க மாட்டான். நம்ம வீட்ல கூட நான் தட்டுல போட்டாதான் திம்பான். அவன் வந்த வந்ததிலிருந்து திருட்டுபயம் கம்மியாடிச்சி"

அவள் சொல்வதை புரிந்து கொண்டதை போல் நன்றியுடன் வாலை ஆட்டினான் சங்கிலி.

"எப்படியாவது தொலைங்க.நான் ஆபிஸ் போறேன்"

கேட்டதை கொடுக்கும் தேவதை

எனக்கோ பெருங்கவலை.எத்தனை உழைத்தாலும் என்னால் பெரும்பொருள் சேர்க்க முடியவில்லையே என.

என் விருப்பத்தை கேட்டதை கொடுக்கும் தேவதையிடம் முறையிட்டு அழுது புலம்பி விட்டு அப்படியே உறங்கிப் போனேன்.

உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தவன் என் பக்கத்தில் மரவுரி கிடப்பதை கண்டேன்.

'செல்வத்தை வேண்டினால் மரவுரி கிடைக்கிறது. தேவதையின் மேல் கோபம் கொண்டேன்.

சிறிது நேரம் கழித்து தேவதையின் விருப்பம் இதுதான் போலும்
என மன நிம்மதியடைந்து மரவுரியை உடுத்திக்கொண்டு காட்டிற்கு கிளம்பினேன். அங்கே ஓர் ஆசிரமம் அமைத்து தவம் செய்ய ஆரம்பித்தேன்.

முதலில் காய் கனி உண்டவன் காலப்போக்கில் சருகுகளை உணவாக கொண்டேன். பின் வெறும் காற்றை மட்டும் உணவாக கொண்டேன். பின் காற்றில்லாமல் கூட வாழ பழகினேன்.

உள்ளத்தில் பேரானந்தம் கிட்டியது.

என் தவ வலிமையும் அதிகமாயிற்று.
இப்போது நான் கேட்டது எல்லாம் கிடைக்கும். ஆனால் எதுவுமே எனக்குத் தேவையில்லை.

என் முன் அந்த தேவதை தோன்றினாள்

தேவதை எனக்கு செல்வம் கொடுக்கவில்லை என்ற கோபம் இப்போது இல்லை.அதைவிட வலிமையான மனஅமைதி கிடைத்தது குறித்து மகிழ்ந்தேன்....

"இப்போது சொல் . செல்வம் வேண்டுமா?" - தேவதை கேட்டாள்.

"வேண்டாம் தாயே.அதை விட மனஅமைதி எனும் பெரும் செல்வம் கிடைத்திருக்கிறது"

தேவதை மறைந்தாள்

கனவுலகிலிருந்து நனவுலகுக்கு மீண்டேன்.

பக்கத்து வீட்டு குழந்தை அம்மாவிடம் இன்னொரு சாக்லேட் கேட்டு அடம்பிடித்தான்.

அம்மா பொறுமையாக அடம் பிடிக்கும் குழந்தையை கையிலெடுத்து சாக்லேட் கொடுக்காமல் குழந்தைக்கு பால்சோறு ஊட்டினாள்.

குழந்தை சோற்றை தட்டிவிட்டு அழுதான். அன்னை அழும் குழந்தையின் முதுகில் இரண்டு வைத்தாள்.

குழந்தை வாயை மூடிக்கொண்டு இல்லை இல்லை வாயைத்திறந்தபடி சாப்பிட ஆரம்பித்தான் பால்சோற்றை.

‪#‎நான்‬ படித்த கதையை கொஞ்சம் மாற்றி....

ஜோல்னாப்பை கடவுள்


ஜோல்னாப் பை கடவுள்
--------------------------

"இன்னும் ஒரு டிக்கட் யாருப்பா எடுக்கல.டிக்கேட் டிக்கேட்"

என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜோல்னாபைக் காரனை சந்தேகமாகப் பார்த்தேன்.

'இவன் டிக்கட் எடுத்தமாதிரியே தெரியலயே'

"அலோ பிரதர் டிக்கட் எடுத்தாச்சா?"

"நான் டிக்கட் எடுக்கத்தேவையில்லை"

' ஓ...ஓசிக் கிராக்கியா?'

"நான் ஒன்றும் ஓசிக்கிராக்கி இல்லை" என்றான் அழுத்தந்திருத்தமாக

என் மனதில் நினைத்ததை எப்படி படித்தான்?

"என்னால் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளமுடியும்."

"உளவியியல் படித்துள்ளீரோ?"

"நானே கற்பிப்பவன்.கற்க அவசியமில்லை"

"சர்தான்.சார் யாருங்க?"

"உன்னையும் மண்ணையும் படைத்தவன்"

"அப்டின்னா?"

"கடவுள்"

"எந்த கடவுள்? ஏசுவா?அல்லாவா? பாடிகாட் முனிஸ்வரர்ரா?"

"சாத்தான் வந்து தன்னை சாத்தான் என்றால் நம்புகிறீர்கள்.கடவுளை நம்ப மறுக்கிறீர்கள்"

"சரிவுடு நம்பனும் அவ்ளதானே? நம்பிட்டேன்"

"நான் கடவுள் என்று நிருபிக்க என்ன செய்யவேண்டும்?"

"தாபாரு பளீர்னு வெயில் அடிக்குது. பொட்டு மேகம் கூட இல்ல. இப்ப மழை வரவை பாக்கலாம்"

அடுத்த நிமிடம் இருள் கவிந்து மழை கொட்ட தொடங்கியது.

ஷட்டர்கள் இறங்கி விடப்பட்டன

வைப்பர்கள் கண்ணாடியைத் தழுவி தழுவி தண்ணீரை வழித்தெறிந்தன.

"மந்திரவாதியோ?"

சிறிது அச்சத்துடன் பார்த்தேன் அவனை.

பேருந்து மழைத்தண்ணீரை வாரி இறைத்தபடி விரைந்து கொண்டிருந்தது.

"யோவ் டிக்கட் எடுத்தியா? டிக்கட்ட காமி"
-தூங்கிக் கொண்டிருந்த பரட்டைத்தலையை எழுப்பிக்கொண்டிருந்தார் கண்டக்டர்.

என் பக்கத்தில் இருந்த ஜோல்னாபை காரனை/ரை பயமுடன் பார்த்தேன்.

"வெளியே போவோமா" என்று கேட்டார்

அவர் சொல்வதை புரிந்து கொள்வதற்குள் நாங்கள் இருவரும் பேருந்திற்கு வெளியே நின்றோம்.

பேருந்து நிற்காமல் போய்க்கொண்டே இருந்தது.

"இப்ப எதுக்கு கடவுளே என்னை வெளியே தூக்கி கிட்டு வந்தே?"

"சும்மாதான். என்னை கடவுள்னு நம்புறியா?"

"நம்பித்தானே ஆகனும்."

"நல்லது"

"எல்லாம் சரி நீ கடவுள்தானே.ஏன் இந்த சனங்கள கொத்து கொத்தா கொல்ற? இப்ப பாரு நேபாள்ல பூகம்பம். நல்லவன்லாம் திடீர் திடிர்னு சாகுறான்"

"எல்லோரையும் அப்படியே வைத்தால் பூமி தாங்காது மகனே"

"இம்மாம் பேசுறியே.என்னை ஏன் இந்த பாடு படுத்துற?"

"ஏன் நீ சந்தோசமா இல்லையா?"

"கிழிஞ்சுது.நான் படுற பாடு எனக்குத்தானே தெரியும்"

"உன் பிரச்னை என்ன? பணமா?"

"யோவ் குடும்பஸ்தனுக்கு எத்தனை பணம் இருந்தாலும் பிரச்னை தீராது."

"அது நீங்களாகவே தேடிக்கொள்வது"

"யோவ் ஒன்னு செய்வோமா நாம இரண்டு பேரும் தொழிலை மாற்றிக்கொள்வோமா?"

"என்ன சொல்கிறாய்?"

"இன்னைக்கு தேதி 1 அடுத்த ஒன்னாம்தேதி வரைக்கும் என்னைப்போல உருமாறி என் குடும்பத்தை கவனி.நான் ஒரு மாசத்துக்கு உலகத்தை கவனிச்சுக்கிறேன்"

"சரி. பேச்சு மாற மாட்டியே. இம்மாம் பெரிய உலகத்தையே நிர்வாகம் பண்றேன். உன் சின்னஞ்சிறிய குடும்பத்தையா என்னால் நிர்வாகம் பண்ண முடியாது. என் சக்தி முழுவதும் உனக்கு அளிக்கிறேன்"

அடுத்த வினாடி கடவுள் என் உரு எடுத்து இருந்தார்.

"யோவ் கடவுளே ஒரு ரெக்வஸ்ட்."

"என்ன?"

"என பொண்டாடி பத்ரம்யா"

"ஹாஹாஹாஹா"

பெரிதாக சிரித்தார்.

"சரி இப்போது நீதான் கடவுள் என்னை உன் வீட்டில் கொண்டு போய் விடு. ஒருமாதம் கழித்து இதே இடத்தில் சந்திப்போம்"

அவரை என் வீட்டில் கொண்டுபோய் விட்டு விட்டு கடவுள் தொழிலை பார்க்க போனேன்.

சரியாக ஒருமாதம் கழித்து மீண்டும் அதே இடத்தில் நாங்கள் சந்தித்தோம்.

"யப்பா என்ன ஆளவிடு. உன் குடும்பத்தை என்னால கவனிக்க முடியாது.நான் கடவுளாவே இருக்குறேன். உன் கால தொட்டு கும்புடனும்யா. எப்டியா குடும்பத்த சமாளிக்கிற?

"ஹாஹாஹாஹா"

பணக்காரர்கள் ஏன் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள்?

ஏழைகள் பணத்திற்காக உழைக்கிறார்கள்.
பணக்காரர்கள் பணத்தை
தங்களுக்காக உழைக்க வைக்கின்றனர்.
ஒருவர் பணத்தை கையாளும் விதத்தில்தான் அவரின் வெற்றியும் தோல்வியும் அடங்கியிருக்கிறது.

பணக்காரர்கள் மாதா மாதம் செலவு வைக்கும் பொருளை
வாங்க முக்கியத்துவம் கொடுக்காமல் வரவை தரும் சொத்து மற்றும் பிற லாபகரமான விசயங்களில் முதலீடு செய்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

அந்த முதலீடானது இரவும் பகலும் உழைத்து தொடர்ச்சியான வருமானத்தை லாபமாக தந்து கொண்டே இருக்கிறது.

போதுமான சேமிப்பும் நிறைவான முதலீடும் இருக்கும்போதே
செலவினங்களை வாங்க முற்படுகின்றனர்.

பணக்காரர்கள் பணக்காரர்களாய் இருப்பதில் வியப்பேதும் இல்லை.

# ஒரு தனியார் நிதி நிர்வாகத்தின் அறிக்கையொன்றிலிருந்து

Tuesday, March 10, 2015

கண்கள்

எனை குத்திக் கிழிக்கும்
உன் குறுவாட்களை
உறையிலிடேன்
உன்னோடு
நான் பேசவேண்டும்.

என்னை உரசிப் பார்க்காதே
உன்னையும் பற்றிக்கொள்(ல்)வேன்.

உதிர்ந்து போகிறேன்
உன்மடியில் விழவே...!

Thursday, February 26, 2015


உனக்கென்ன?
புன்னகைத்து விட்டாய்,

உதிர்ந்து போவது
நானல்லவோ?

Sunday, February 22, 2015

பிறைநிலா

தாம்பரத்திலிருந்து கிளம்ப தயாராக இருந்த 21G பேருந்தில் கடைசியாக மிச்சமிருந்த ஓரிருக்கையில் ஓடி வந்து அமர்ந்து கொண்டான் அரவிந்த்

அமர்ந்தவுடன்  மொபலில் முகநூலில் மேய்ந்தான். இனி பாரிஸ் கார்னர் போகும்வரை இந்த முகநூல்தான் அவன் பொழுதுபோக்கு.

பாரிஸ்கார்னரில் ஏதோ ஓர் அலுவலகத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை செய்யும் அழகான திருமணம் ஆகாத வாலிபன்.

பேருந்து  கிளம்பியபின் அவசரஅவசரமாக ஓடிவந்து ஏறினாள் அவள்.

அவன் பக்கத்தில் ஓர் இருக்கை மட்டும் காலியாக இருந்ததைப் பார்த்தாள்.

'எப்படி பாரிஸ் கார்னர் வரை நின்றுகொண்டு வருவது?'

இதுவரை அவள் எந்த ஓர் ஆணின் பக்கத்திலும் உட்கார்ந்ததில்லை.

'இவனை நம்பி உட்காரலாமா?'

"சார் நான் உட்காரலாமா?"

யாருக்கோ உள்பெட்டியில் தகவல் அனுப்பிக்கொண்டிருந்தவன் கொஞ்சமும் தலை நிமிராமல்,

"எனக்கு ஆட்சேபனை இல்லை" என்றான்.

அமர்ந்தவுடனே உள்பெட்டியில் தமிழ்ப்பிரியன்

  ஆறேழு மாதங்களாக அவள் முகம் தெரியாமல் முகநூலில் அவள் எழுதும் கவிதைகளில் லயித்து துரத்தி துரத்தி காதலிப்பவன். தினமும் அவள் உண்மைப்பெயர் அறிய துடிப்பவன்.
எத்தனை தடவை உங்கள நான் பிளாக் பண்ணிடுவேன் என்று மிரட்டலுக்கெல்லாம் அசைந்து கொடுக்காதவன்.

ஆனால் மிரட்டியிருக்கிறாளேத் தவிர அவனை பிளாக் செய்தததில்லை. காரணம் நாகரிகமான குறும்பான அவனுடைய பின்னூட்டங்களும் குறுங்கவிதைகளும் அவளைக் கட்டி போட்டதென்னவோ உண்மை.  இத்தனைக்கும் தன் காதலை அவன் நேரடியாக சொன்னான் இல்லை.சாடைமாடையாக பின்னூட்டங்களில் சொல்லியிருக்கிறான்.கவிதையால் உணர்த்தியிருக்கிறான். வேறு எந்த பெண்ணிடமும் நெருங்கியதில்லை. இதோ அவன் தான் அடுத்த தகவலை அனுப்பியிருக்கிறான். மொபலை திறந்தாள்

"ஹாய் பிறைநிலா காலை வணக்கம்"

பிறைநிலா - அவள் முகநூல் பெயர்.

"வணக்கம் ப்ரியன்"

"என்ன கவிதாயினிக்கு மூட் வரவில்லையோ கவிதை எழுத?"

"அதான் நீங்க எழுதிறிங்களே எனக்கும் சேர்த்து. போதாதா?"

"என்ன இருந்தாலும் கவிதாயினி எழுதுவது போல் ஆகுமோ?"

"கவிஞர் ஓவரா வழியிறாரு.தொடச்சிக்குங்க"

"பிறைநிலா எப்போது முழுநிலவாகும்?"

"இது வளராத நிலா"

"நிலவில் காலடி வைக்க முடியுமா?"

"காலை வெட்டி விடுவேன்"

"இதெல்லாம் சரியில்லை.பேசாமல் என் பெயரை மாற்ற போகிறேன்"

"என்னவென்று?"

"நிலா ரசிகன்னு"

"ரொம்ப ரசிக்காதிங்க. பிறைநிலா பிடியற்றஅரிவாள் போலவும் இருக்கும் தெரியுமா?"

"பிடி போட்டால் போச்சி"

"யாருக்கு?"

"அரிவாளுக்கு"

"கவிஞர்களுக்கு கற்பனைத்திறன் அதிகம்"

"கற்பனையை உண்மையாக்கினால் என்ன?"

"ம்.உதை விழும்.சரிங்க ப்ரியன் எனக்கு ஆபிஸ் வந்தாச்சி. பை"

"எனக்கும்தான். பை"

அந்த நிலாப்பிரியன்தான் இந்த அரவிந்த் என்று தெரியாமல் அவளும்,
தன் பக்கத்தில் இதுவரை அமர்ந்திருந்தவளிடம்தான் தான் சாட் செய்தோம் என்று அறியாமல் அவனும் அவரவர் அலுவலகங்களுக்கு பறந்தனர்.

Wednesday, February 18, 2015

கூடு என்றேன்
கெட்டியாக
கட்டிக்கொண்டாய்

எப்படி இழுத்து வளைத்து
ஒடித்தாலும் அழகாகி விடுகிறாய்
இன்று தாய்மொழிநாளாம்
நீ என் தாயன்றோ?
என்றும் சுமங்கலியாய்
வாழி

Thursday, January 22, 2015

வாழ்க்கை
வண்ணமிகு ஓவியமல்ல, புரியாத புதிராய் திகழும் மாடர்ன் ஆர்ட்ஸ்.

வாழ்க்கை
தெளிந்த நீரோடையல்ல, கரைபுரண்டோடும் காட்டாறு.

வாழ்க்கை தேசியநெடுஞ்சாலையல்ல, சுகமாய் பயணித்துச் செல்ல,
கற்களும் முட்களும் நிறைந்த காட்டுப்பாதை.

அத்தகைய காட்டுப்பாதையில் நீங்கள் நடந்ததுண்டா?

நான் நிறைய நடந்திருக்கிறேன் நடந்தும் வருகிறேன்

எனக்கு மட்டும் கால்கள் வலிப்பதேயில்லை.

Thursday, January 8, 2015

காலையில் எழுந்ததும் ஏதோ உறுத்த மன்னிக்கவும் உறுத்தாமல் இருக்கவே கைகளைப் பார்த்தேன். விரலில் இருந்த மோதிரத்தை காணவில்லை.

நேத்து நைட் படுக்கும்போது இருந்துச்சா? சரியாக ஞாபகம் இல்லை. பாயை மெதுவாக சுருட்டினேன். காணவில்லை. எங்க போயிருக்கும்.

நைட் பாத்ரூம் போனப்ப கழண்டு விழுந்துருக்குமோ?

ஆசை ஆசையாக எனக்கு மோதிரம் வாங்கி போட்டவள் எதுவும் தெரியாமல் சமையலறையில். விசயம் தெரிஞ்சுது பேயாட்டம் ஆடுவாள்.

மெதுவாக எழுந்து பாத்ரூமில் தேடினேன். கட்டிலில் தேடுனேன். இல்லை. மெதுவாக அவளுக்கு சந்தேகம் வராத மாதிரி (அந்த பக்கம் திரும்பி யிருந்தாலும் கண்கள் பின்னாலும் உண்டு. :p)

"என்ன தேடுறிங்க?"

' கண்டுபுடிச்சிட்டா'

"ஒன்னுமில்ல. டீ கொடேன்"

"இல்ல வீட்ட அளக்குறிங்களேன்னு கேட்டேன்"

"ஆமா டேப்பு வச்சி அளக்குறேன்"

டீயை குடித்தபடி டீவி மேல கீழ எல்லா இடத்திலும் தேடினேன்.

இரண்டு பேர் முதல் எழுத்தையும் MS என பொறித்த ஒருபவுன் மோதிரம். . காணாம போச்சின்னுசொன்னா கொன்னேபுடுவா

குளித்தேன்.இட்லி கொடுத்தாள் பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பினார்கள். இட்லியை சாப்பிட்டேன்.

'அப்பாடா இதுவரை கவனிக்கல.ஒருவேளை பீரோவுல வச்சேனா?'

ஓட்டமாய் ஓடி பார்த்தேன்.ம்ஹூம்.

மொட்டைமாடிக்கு துணி காயப்போட போனேனே.
அங்கேயும் இல்லை.

இன்னைக்கு கொலை விழப்போகுது.

இருக்குற டென்சன்ல கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்தால் நல்லாருக்கும்

டீக்கடையில் பேப்பர் படித்து விட்டு திரும்ப வந்தேன்.
எல்லா வேலைகளையும் முடித்த தர்மபத்தினி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

"சாப்டுறிங்களா?"

"எத்தன தடவ சாப்புடறது?"

"ஏன் மூஞ்சி இஞ்சி தின்னமாதிரி இருக்கு?"

"நல்லாத்தானே இருக்கு?"

"மோதிரம் எங்க?"

"-----------"

"இப்புடித்தான் குடித்தனம் பண்றதா?இராத்ரி மோதிரத்த எங்க கழட்டி வச்சிங்க?"

'அப்பாடா மோதிரம் கிடைத்து விட்டது.'

"எங்க இருந்துச்சி?"

"ம்.வீடு பெருக்கி குப்பைய கொட்டப்போறேன்.அதுல கிடக்குது.இப்படி குடும்பம் பண்ணா எப்படி உருப்படும். இனிமே மோதிரம் கொடுக்க மாட்டேன்"

மறக்காமல் பீரோவில் வைத்து பூட்டினாள்.

அது என்னவோ தெரியல.
தூக்கத்துல நடக்குற வியாதி மாதிரி தூக்கத்துல மோதிரம் கழட்டும் வியாதி எனக்கு.

சிலநாள் கழித்து,

"கல்யாணத்துக்கு போகனுமே கிளம்பலயா?"

"நான் வரல.நீ போய்ட்டு வா"

"நான் மட்டும் போனா நல்லாருக்காது.கிளம்புங்க"

கிளம்பினேன்.
வீட்டை பூட்டியவள் ,

"விரல காட்டு "என.சொல்லி மோதிரத்தை மாட்டி விட்டாள்.

கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன்.

"மோதிரத்தை கழட்டு" என்றாள். கழட்டி கொடுத்ததும் மறக்காமல் பீரோவில் வைத்து பூட்டினாள்.

Sunday, January 4, 2015

"அடக்கடவுளே... காலம் கெட்டு கிடக்கு"

"என்னாச்சி?"

"இரண்டு நாளைக்கு முன்னாடி வீடு எரியிற மாதிரி கனவு கண்டேன்னு சொன்னேன்ல"

"ஆமாம்.அதுக்கென்ன இப்போ?"

"அலமேலு குட்டி வயசுக்கு வந்துட்டா"

"நாலாவது தானே படிக்கிறா"

"அதான் அக்கம் பக்கம் யாருக்கும் சொல்லாம தண்ணிய ஊத்தியாச்சி"

இப்படித்தான் தான் கண்ட கனவுகளுக்கு ஏதாவது ஒரு மேற்கோளை காட்டுவாள் என் மனைவி.

ஏறக்குறைய அவை சரியாகவே இருக்கும்

"இந்த மூலையில பல்லி கத்துனா ஏதாவது நல்ல சேதி வரும்"

"எங்க இங்கயா?"

"கைய காட்டாதிங்க"

எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு நேராக செல்ல பஸ் வசதி அதிகம் இல்லாத காலம் அது. பெரும்பாலும் ஆற்றைக்கடந்து பஸ் பிடித்து அங்கிருந்து பின் மறுபடியும் அதே ஆற்றைக்கடந்து கோவிலுக்கு போகவேண்டும். தலையச் சுற்றி மூக்கைத் தொடுவது போல.

அந்த ஆற்றங்கரையில் ஓர் அய்யனார் கோவில்.

தான் கண்ட ஒரு கனவைப் பற்றி சொன்னாள் என் மனைவி.

"கோவிலுக்கு போயிட்டு ஆத்தை தாண்டி கரையேறுனேனா? கரையிலியே அய்யானார் என்ன மறிச்சிக்கிட்டாரு.

அப்ப அய்யானாரு என்கிட்ட சொன்னாரு
இந்தாம்மா உன் வழி இங்கில்லையே அப்படியே திரும்பி போயிடு.இது என் இடம் இந்தப்பக்கம் எல்லாம் வராதே.இந்த வழியா வந்து போற என்னைக்காவது என்ன கும்புட்டு இருக்கியா?அப்படியே திரும்பி போ"

அப்ப திரும்பி பாத்தா நம்ம சாமி நிக்குது.

நம்ம சாமி சொல்லிச்சி அய்யனார்கிட்ட

"டேய் என் வீட்டு பிள்ளைடா அவ.அவள போக விடுடா.அவ வழியில்லாமத்தானே இப்படியே வரா"
இரண்டு சாமிக்கும் சண்டை. நான் பயந்து போய் கண்ணு முழிச்சிக்கிட்டேன்.

எனக்கு இதை எத்தனை தூரம் நம்புவது எனத் தெரியவில்லை.

அய்யனாரை கடக்கும் நாங்கள் அவரை கும்பிடாதது உண்மைதான்.அதுவே அவள் ஆழ்மனதுக்குள் குற்ற உணர்ச்சியாகி கனவாக வந்திருக்கலாம்.

பிறகு ஒரு தினம் நாங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு போய்விட்டு திரும்பினோம். மைத்துனன் சைக்கிளில் வந்தான். திரும்பும் போது மனைவி சொன்னாள்.

"நானும் அம்மாவும் மகனும் பஸ்ல (ஒரே ஒரு பஸ்) போறோம். நீங்க சைக்கிள்ல போங்க.போகும் போது மறக்காம அய்யானாருக்கு சூடம் ஏத்திட்டு போங்க மறக்க கூடாது" என்றாள்.

மைத்துனனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.எங்களுக்காக வந்திருந்தான்.

"டேய் தீப்பெட்டி எடுக்க மறந்துட்டன்டா" என்றேன் அவனிடம்

"மாமா,அக்கா ஒரு லூசு.அதுக்கு வேலை இல்ல.நாம போகலாம்" என்றான்.

சரி போகலாம் என்றேன் அரைமனதாக.

மிகச்சரியாக கோவிலின் வாசலில் நன்றாக போய் கொண்டிருந்த சைக்கிள் சறுக்கி விட்டு இரண்டு பேரும் கீழே விழுந்துவிட்டோம்.

இதை எத்தனை பேர் நம்புவீர்கள்?

மேலே உள்ளது எங்கள் குலதெய்வம் கோவிலில் நான் எடுத்தப் படம்

சனிக்கிழமை இரவே சொல்லிவிட்டான் ராகவன் மனைவி சுந்தரியிடமும் பிள்ளைகளிடமும்,
அமிர்தம் அத்தை நாளைக்கு வரன்னு சொல்லியிருக்காங்க. அவங்க கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். போற வரைக்கும் கொஞ்சம் பாத்து நடந்துக்குங்க.

"இதையே எத்தன தடவ சொல்லுவிங்க?எல்லா பொருளும் அதது இடத்துல இருக்கனும். டீவி போடக்கூடாது குழந்தைங்க விளையாட கூடாது. குழந்தைகள் அடம் பண்ணாம பதவிசா இருக்கனும், பொண்ணுனா அடக்க ஒடுக்கமா இருக்கனும்.நாம இருப்போம் குழந்தைங்க இருப்பாங்களா?"

"இரண்டு நாளோ மூன்று நாளோ. அப்பறம் போய்டுவாங்க. அதுவரைக்கும் எனக்காக ப்ளீஸ்"

சலிப்புடன் நகர்ந்தாள் சுந்தரி.

ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே எல்லாப் பொருளும் ஒழுங்கு படுத்தப்பட்டன

குழந்தைகள் தயார் படுத்தபட்டார்கள்.

ஓடி ஆடி விளையாடிய குழந்தைகளை ஒரு இடத்தில் உட்கார சொன்னால் உட்கார்வார்களோ?

நாடகம் பார்க்கா விட்டால் சுந்தரிக்கு தலை வெடித்து விடும்.அவளால் முடியுமோ?

ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் சுந்தரி சாவகாசமாக எழுந்திருப்பாள்.
மனைவியை எதிர்பார்க்காமல் ராகவன் அன்று எல்லா வேலைகளையும் செய்வான்

ஆம்பிளை அடுப்படி பக்கம் போக கூடாது என்பாள் அமிர்தம்
கொஞ்சம் அல்ல நிறைய பழைமை வாதி.

எதிலும் ஒரு நேர்த்தி இருக்கனும் உக்காந்தா குத்தம் நிமிர்ந்தா குத்தம் சொல்பவள்.

'பேருதான் அமிர்தம். மொத்தமும் விசம்'.-மனதிற்குள் கருவினாள் சுந்தரி.

ஞாயிற்றுக்கிழமை டானென்று எட்டு மணிக்கு வந்து இறங்கினாள் அமிர்தம்.

வழக்கமாக அந்த நேரத்திற்கு வீடே இரண்டுபடும் காபி தம்ளர்கள் ஆங்காங்கே கழுவாமல் நிற்கும். ராகவன் குளித்து விட்டு தலை துவட்டிய ஈரத்துண்டு கட்டிலில் கிடக்கும்.

குழந்தைகளின் பொம்மைகள் காலில் இடறும்.

சுந்தரி அவைகளை எல்லாம் சாவகாசமா ஒழுங்கு படுத்துவாள். இன்று அவைகளை எல்லாம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள். காரணம் அமிர்தம் வரப்போகிறாள்.

இதோ அமிர்தமும் வந்து இறங்கினாள்

பூரணக்கும்ப மரியாதை மட்டும் இல்லாமல் வரவேற்பு தடபுடலாக இருந்தது.

சுந்தரி அவளை கவனித்தாள்.முன்னெல்லாம் கடுகடுன்னு இருக்கும் முகம் இப்போது கனிவாக.

அமிர்தம் வீட்டை நோட்டம் விட்டாள்.

சுந்தரி கொடுத்த இட்லியை தின்றுவிட்டு காபியை குடித்தவள் கிளம்பி விட்டாள்.

"நான் வரேன் ராகவா"

"நாங்க ஏதாவது தப்பு பண்ணிட்டோமா?ஏன் அத்தை அதுக்குள்ள கிளம்புறிங்க?"

"இல்ல ராகவா.சந்தோசமா கிளம்புறேன். நல்லா கவனிச்சிங்க."

சுந்தரிக்கு சந்தோசம்.அப்பாடா தொலைஞ்சுது சனி.

"நான் போய்ட்டு வரேன் சுந்தரி"

"ம்."

வழக்கம் போல் வீடு தலைகீழானது.

மறுநாள் திங்கட்க் கிழமை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு ராகவனை வேலைக்கு அனுப்பி விட்டு கிடப்பது கிடக்க சுந்தரி டீவி முன்னால் உட்கார்ந்தாள்.

வாசலில் யாரோ மணி அடித்தார்கள்.
கதவை திறந்தால் அமிர்தம்

சுந்தரிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

இப்படி கிழவி சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிக்குதே.

"வாங்கம்மா வாங்க"

அமிர்தம் உள்ளே வந்தாள்

காபி தம்ளர்கள் ஆங்காங்கே
அடுப்படியில் கழுவாத பாத்திரங்கள் குவிந்தபடி ஒருப்பக்கம் துவைக்க வேண்டிய துணிகள்.
இதையெல்லாம் சாவகாசமா ஒழுங்கு படுத்துவாள் சுந்தரி.

அவளும்தான் என்ன செய்வாள்?காலையில் எழுந்து சமைத்து பிள்ளைகளை தயார் படுத்தி பள்ளிக்கு அனுப்பி விட்டு புருசனையும் அனுப்பி விட்டு கொஞ்சம் உடல் அலுப்பு போக டீவி முன்னால் உட்கார்வாள்.

இவையெல்லாம் அமிர்தம் அம்மாவிற்கு சுத்தமாக பிடிக்காது.

அவசர அவசரமாக அனைத்தையும் ஒழுங்கு படுத்தினாள் சுந்தரி.

"சுந்தரி இங்க வா.அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். ஒரு டம்ளர் காபி மட்டும் கொடு"

காபி போட்டு எடுத்து போகையில் அமிர்தம் அழுது கொண்டிருந்தாள்.

"என்னம்மா ஆச்சி.ஏன் அழறிங்க?நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?"

"இல்லம்மா. நீ எதுவும் தப்பு பண்ணல. ஒரே ஒரு மகனை என் பக்கத்துல வச்சிக்க முடியாத பாவி நான். தொட்டதிற்கெல்லாம் குத்தம் குறை. மகன் கூட மருமக சிரிச்சி பேசுனா வயிறு எரியும்.எங்க நம்ம கிட்ட இருந்து மகன பிரிச்சுடுவாளோன்னு பயம் அதனாலையே அவ மேல ஏதாவது குத்தம் சொல்லிக்கிட்டே இருப்பேன். அவளும் பொறுத்து பொறுத்து என் பிள்ளையை எங்கிட்ட இருந்து பிரிச்சுட்டா. அதுமட்டும் இல்ல நம்ம சொந்தக்காரங்க எனனைப்பார்த்தாலே பயந்து நடுங்குவாங்க. இதெல்லாம் இப்பத்தான் புரியுது. எத்தனை காசு பணம் இருந்தும் என்ன? ஆதரவா பேச ஒரு மனுசாள் இல்லை.அவரும் எப்பவோ போய் சேர்ந்துட்டார். இதுக்குலாம் காரணம் நான்தான். குற்றங்குறைகளை அனுசரிச்சி போகாதது. குழந்தைங்க கிட்ட கூட எரிஞ்சு விழுந்துருக்கேன்.நேற்று கூட எனக்கு பயந்துதானே இருந்திங்க? பயமுறுத்தியோ மிரட்டியோ யாரும் யாரையும் மாத்த முடியாது.அதான் நான் உடனே கிளம்பி விட்டேன்."

சுந்தரிக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.அவள் கண்ணீரை தொடைத்து விட்டாள்.

"அழாதிங்க அம்மா.இனிமே நீங்க எங்கயும் போக வேண்டாம்.எங்க