ஜோல்னாப் பை கடவுள்
--------------------------
"இன்னும் ஒரு டிக்கட் யாருப்பா எடுக்கல.டிக்கேட் டிக்கேட்"
என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜோல்னாபைக் காரனை சந்தேகமாகப் பார்த்தேன்.
'இவன் டிக்கட் எடுத்தமாதிரியே தெரியலயே'
"அலோ பிரதர் டிக்கட் எடுத்தாச்சா?"
"நான் டிக்கட் எடுக்கத்தேவையில்லை"
' ஓ...ஓசிக் கிராக்கியா?'
"நான் ஒன்றும் ஓசிக்கிராக்கி இல்லை" என்றான் அழுத்தந்திருத்தமாக
என் மனதில் நினைத்ததை எப்படி படித்தான்?
"என்னால் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளமுடியும்."
"உளவியியல் படித்துள்ளீரோ?"
"நானே கற்பிப்பவன்.கற்க அவசியமில்லை"
"சர்தான்.சார் யாருங்க?"
"உன்னையும் மண்ணையும் படைத்தவன்"
"அப்டின்னா?"
"கடவுள்"
"எந்த கடவுள்? ஏசுவா?அல்லாவா? பாடிகாட் முனிஸ்வரர்ரா?"
"சாத்தான் வந்து தன்னை சாத்தான் என்றால் நம்புகிறீர்கள்.கடவுளை நம்ப மறுக்கிறீர்கள்"
"சரிவுடு நம்பனும் அவ்ளதானே? நம்பிட்டேன்"
"நான் கடவுள் என்று நிருபிக்க என்ன செய்யவேண்டும்?"
"தாபாரு பளீர்னு வெயில் அடிக்குது. பொட்டு மேகம் கூட இல்ல. இப்ப மழை வரவை பாக்கலாம்"
அடுத்த நிமிடம் இருள் கவிந்து மழை கொட்ட தொடங்கியது.
ஷட்டர்கள் இறங்கி விடப்பட்டன
வைப்பர்கள் கண்ணாடியைத் தழுவி தழுவி தண்ணீரை வழித்தெறிந்தன.
"மந்திரவாதியோ?"
சிறிது அச்சத்துடன் பார்த்தேன் அவனை.
பேருந்து மழைத்தண்ணீரை வாரி இறைத்தபடி விரைந்து கொண்டிருந்தது.
"யோவ் டிக்கட் எடுத்தியா? டிக்கட்ட காமி"
-தூங்கிக் கொண்டிருந்த பரட்டைத்தலையை எழுப்பிக்கொண்டிருந்தார் கண்டக்டர்.
என் பக்கத்தில் இருந்த ஜோல்னாபை காரனை/ரை பயமுடன் பார்த்தேன்.
"வெளியே போவோமா" என்று கேட்டார்
அவர் சொல்வதை புரிந்து கொள்வதற்குள் நாங்கள் இருவரும் பேருந்திற்கு வெளியே நின்றோம்.
பேருந்து நிற்காமல் போய்க்கொண்டே இருந்தது.
"இப்ப எதுக்கு கடவுளே என்னை வெளியே தூக்கி கிட்டு வந்தே?"
"சும்மாதான். என்னை கடவுள்னு நம்புறியா?"
"நம்பித்தானே ஆகனும்."
"நல்லது"
"எல்லாம் சரி நீ கடவுள்தானே.ஏன் இந்த சனங்கள கொத்து கொத்தா கொல்ற? இப்ப பாரு நேபாள்ல பூகம்பம். நல்லவன்லாம் திடீர் திடிர்னு சாகுறான்"
"எல்லோரையும் அப்படியே வைத்தால் பூமி தாங்காது மகனே"
"இம்மாம் பேசுறியே.என்னை ஏன் இந்த பாடு படுத்துற?"
"ஏன் நீ சந்தோசமா இல்லையா?"
"கிழிஞ்சுது.நான் படுற பாடு எனக்குத்தானே தெரியும்"
"உன் பிரச்னை என்ன? பணமா?"
"யோவ் குடும்பஸ்தனுக்கு எத்தனை பணம் இருந்தாலும் பிரச்னை தீராது."
"அது நீங்களாகவே தேடிக்கொள்வது"
"யோவ் ஒன்னு செய்வோமா நாம இரண்டு பேரும் தொழிலை மாற்றிக்கொள்வோமா?"
"என்ன சொல்கிறாய்?"
"இன்னைக்கு தேதி 1 அடுத்த ஒன்னாம்தேதி வரைக்கும் என்னைப்போல உருமாறி என் குடும்பத்தை கவனி.நான் ஒரு மாசத்துக்கு உலகத்தை கவனிச்சுக்கிறேன்"
"சரி. பேச்சு மாற மாட்டியே. இம்மாம் பெரிய உலகத்தையே நிர்வாகம் பண்றேன். உன் சின்னஞ்சிறிய குடும்பத்தையா என்னால் நிர்வாகம் பண்ண முடியாது. என் சக்தி முழுவதும் உனக்கு அளிக்கிறேன்"
அடுத்த வினாடி கடவுள் என் உரு எடுத்து இருந்தார்.
"யோவ் கடவுளே ஒரு ரெக்வஸ்ட்."
"என்ன?"
"என பொண்டாடி பத்ரம்யா"
"ஹாஹாஹாஹா"
பெரிதாக சிரித்தார்.
"சரி இப்போது நீதான் கடவுள் என்னை உன் வீட்டில் கொண்டு போய் விடு. ஒருமாதம் கழித்து இதே இடத்தில் சந்திப்போம்"
அவரை என் வீட்டில் கொண்டுபோய் விட்டு விட்டு கடவுள் தொழிலை பார்க்க போனேன்.
சரியாக ஒருமாதம் கழித்து மீண்டும் அதே இடத்தில் நாங்கள் சந்தித்தோம்.
"யப்பா என்ன ஆளவிடு. உன் குடும்பத்தை என்னால கவனிக்க முடியாது.நான் கடவுளாவே இருக்குறேன். உன் கால தொட்டு கும்புடனும்யா. எப்டியா குடும்பத்த சமாளிக்கிற?
"ஹாஹாஹாஹா"