Sunday, November 19, 2017

பொம்மை

பொம்மைக்கு
சோறுட்டிய குழந்தை
'வயிறு ரொம்பிடுச்சா?'
என கேட்கிறது

பக்தனின் கேள்விக்கு
பதில் சொல்லாத
கடவுள் போல்
மௌனித்து நிற்கிறது
பொம்மை

கடவுளின் மௌனத்தை
புரிந்த பக்தன் போல்
மனநிறைவுடன்
புன்னகைக்கிறது
குழந்தை.

Friday, November 17, 2017

வடு

வடு
*********

"ச்சந்த்ரூஊஊஊஊஊஊஊஊ"

இத்தனை ஜனசந்தடியில் எனக்கு அந்த  குரல் தெளிவாக கேட்டது. அவள் ஒருத்திதானே என்னை இப்படி அழைத்தவள்.
இப்போது எங்கிருக்கிறாளோ? எப்படியிருக்கிறாளோ?
அவளுக்கும் என்னைப்போல் ஓரிரு நரை விழுந்திருக்குமல்லவா? 
அவளுக்கும் என்னைப் போல் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்குமல்லவா?

சென்னையில்  அலுவலக வேலையாக வந்தவன்  வேலையை முடித்து விட்டு நடைபோட்டவனை அந்தக்குரல் என்னவோ செய்தது.

"ச்சந்த்ருஊஊஊஊ"

இப்போது குரல் மிக அருகில் தெளிவாக கேட்டது.

திரும்பிப் பார்த்தேன்.  வெண்ணிலா?  அவளேதான் எத்தனை வயதானால் என்ன? அந்தக் கன்னத்தில் உள்ள பிறை போன்ற வெட்டுக்காயத்தின் தழும்பு மறக்க முடியுமா?
*************

"இங்கப் பாருங்க உங்க பையன் என்ன பண்ணி வச்சிருக்கான்னு,புள்ளையா வளக்குறிங்க?"
எதிர்வீட்டு வெண்ணிலாவின் அம்மா  அப்பாவிடம் சண்டை பிடித்துக் கொண்டிருந்தாள்.

கன்னத்தில் ரத்தம் வடிய வெண்ணிலா அழுது கொண்டிருந்தாள். அப்பா வெளு வெளுவென்று வெளுத்து விட்டார்.

"இனிமே கிட்டிப்புல் விளையாடுவியா விளையாடுவியா?"

நான் வாங்கிய அடி கூட வலிக்கவில்லை எனக்கு. வெண்ணிலா அழுததுதான் எனக்கு வலித்தது.

அப்பாவே தன் சைக்கிளில் அவளை உட்கார வைத்து டாக்டரிடம் அழைத்துச்சென்றார்,
நான்கு தையல் போட்டார்களாம்.

மறுநாள் பள்ளிக்கு வரவில்லை அவள். இரண்டு நாள் கழித்து மெதுவாக என் வீட்டுக்கு வந்தாள்.

அம்மாதான் விசாரித்தாள்.

"இப்ப தேவலாமாடி"

"தேவலாம்  அத்த"

என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.

"சாரிடி நிலா"

"பரவால்லடா. வேனுமுன்னா செஞ்ச? நீதான் பாவம் என்னால உங்கப்பாகிட்ட அடி வாங்குன"

"பச்"

"டேய் ச்சந்த்ருஊஊ  உன் கணக்கு நோட்ட குடுறா, விட்டுப்போன கணக்குலாம் எழுதிக்கிட்டுத் தரேன்"

"ஏன்டி நிலா அவன்தான் உன் கன்னத்த பேத்தான்ல? அப்பறம் ஏன்டி அவன் கூட பேசுற? அப்பறம் உங்கம்மா திட்டுவா"

"போங்க அத்த. அம்மாவுக்கு வேற வேல இல்லை. வேனுமுன்னு யாராவது செய்வாங்களா?"

வெண்ணிலாவின்  குடும்பம் எங்கள் எதிர் வீட்டில் குடிவரும் போது நான் நான்காவது படித்தேன்.
அவளும் நான்காம் வகுப்பு. அதிலிருந்து எங்கள் நட்பு வளர்ந்தது. இப்படியே எங்கள் நட்பு வளர்ந்தது பத்தாம் வகுப்பு வரை. 

ஒருநாள் அவளின் அப்பாவுக்கு வேலை மாற்றலாகி   வேறு ஊர் போக கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

வெண்ணிலா அழுது கொண்டே விடை பெற்றாள்.

"என்ன மறந்துடாதடா ச்சந்த்ருஊஊ"

****************

அதன் பிறகு இதோ என் எதிரில் மூச்சு வாங்க நின்று கொண்டிருக்கிறாள்.
அவளைப் பார்த்தால் யாரும் நாற்பது வயது பெண்மணி என்று  சொல்ல மாட்டார்கள்.
மிக அழகாகவே இருந்தாள்.

நான் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் நெற்றி வகிட்டுக் குங்குமம்
அவள் திருமணமானவள் என பறைச்சாற்றியது.

"ச்ந்த்ருஊஊஊஊ"

என் நினைவுகளை கலைத்தது அவளின் குரல்.

"என்னடா அப்படி பாக்குற.யப்பா எத்தனை வருசம் ஆச்சு உன்னைப் பாத்து"

"சரி இத்தன வருசம் கழிச்சி எப்படி என்ன நாந்தான்னு கண்டு புடிச்ச?"

"அது சஸ்பென்ஸ். அந்த ரகசியத்தை சொல்லமாட்டேன்.

ஆனா உன்னோட நடை இன்னும் மாறவே இல்லை. கொஞ்சம் சாஞ்சி சாஞ்சி நடக்குறது. தூரத்துலருந்து நீதானான்னு சந்தேகமா இருந்துச்சி. நீ திரும்புனப்ப கண்பார்ம் பண்ணிக்கிட்டேன்"

"---------------"

"ச்சந்த்ருஊஊஊஊ"

"சொல்லுடி"

"நான் பழையமாதிரியே கூப்புடுலமாமுல்ல?"

"தாராளமா. எல்லாரும் ரொம்ப மரியாத குடுத்து குடுத்து ரொம்ப கெட்டு போய்ட்டேன். நீயாவது அப்படி கூப்புடு"

"நீ மாறவே இல்லடா. ஒன்னு சொல்லட்டா?"

"சொல்லு"

" நாப்பது வயசிலும் ஹேண்ட்சம்மாத்தான் இருக்க.அப்படியே மணவறையில உக்கார வச்சா மாப்ளதான்"

"ச்சீ....போடி"

"நிசமாப்பா"

"சரி, நீ எப்டி இருக்க? எத்தன பிள்ளைங்க? உன் லைப் எப்டி இருக்கு?

"ம் நல்லாருக்கேன். இரண்டு பெண்கள். பெரியவள கட்டிக்குடுத்தாச்சி,உனக்கு?"

"இரண்டு பசங்க.படிக்கிறாங்க"

"ஒன்னு சொல்லட்டா ச்சந்த்ருஊஊ?"

"என்ன சொல்லப்போற"

"இதுக்கு மேல என் பர்சனல் லைப் பத்தி கேக்காத. நானும் கேக்கல"

"சரி கேக்கல"

"நம் இந்தியப் பெற்றோர்கள் என்ன நினைக்கிறாங்க தெரியுமா?  மகள் கண்ணுக்கு லட்சணமா இரண்டு புள்ளைய பெத்துட்டு, நல்லது கெட்டதுக்கு பட்டுப் புடவை கட்டிக்கிட்டு நகைகளை அள்ளிப் போட்டுக் கிட்டா அவ சந்தோசமா இருக்கான்னு முடிவு கட்டிடுறாங்க"

நான் அவளையே பார்த்தேன்.

"கமான் ச்ந்த்ருஊஊஊ , இன்னைக்கு என்னோட செலவுலாம் உன்னோடதுதான். பணம் நிறைய வச்சுருக்கியா?"

"ஏய் உனக்கு இல்லாததா? என்ன வேணும்?"

"நீ வா உனக்கு நிறைய செலவு வைக்குறேன்.முதல்ல வயித்துக்கு"

உயர்தர ஹோட்டலில் ஒரு மசால் தோசையும் காப்பியும் சாப்பிட்டு விட்டு காச கொடுறா என்று அதிகாரம் செய்தாள்.

"அடுத்து என்னவோ?"

"வா, சொல்றேன்"

பேன்சி ஸ்டோர் ஒன்றில் நுழைந்து கைநிறைய வளையல்கள், பொட்டு கண்மை நகபாலிஷ் என்று வாங்கித்தள்ளினாள்.

"அடுத்து?"

"வா சொல்றேன்"

பிரமாண்டமான துணிக்கடையில் நுழைந்து  சிம்பிளாக காட்டன் புடவை ஒன்றை எடுத்தாள்.

அடுத்து நகைக் கடையில் நுழைந்து  ஒரு வெள்ளி மோதிரம் வாங்கிக் கொண்டாள்.

"அடுத்து என்னவோ?"

"ஐஸ்க்ரிம்"

ஐஸ்கிரிமை அவள் சாப்பிடும் போது யாரும் பார்த்தால் இவளுக்கு ஒரு மருமகன் இருக்கிறான் என்று சொல்லமாட்டார்கள். ஒரு குழந்தையைப் போல ருசித்தாள்.

"பீச்சுக்கு போலாமா?"

உடனே ஒரு டாக்சி பிடித்தேன்.

கடற்கரையில் ஒருக் குழந்தையைப் போல  அலைகளோடு விளையாடினாள். என் மீது தண்ணீரை வாரி இறைத்தாள். கடலை வாங்கி கொறித்தாள். பழங்கதைகளை பேசினாள். எழுந்தாள்

"சரி நேரமாச்சி போலாம்"

"எங்க?"

"நேரா கோயம்பேட்ல என்ன பஸ் ஏத்தி விடுற"

"எந்த ஊருக்கு?"

"அது சொல்லமாட்டேன்,திருச்சி பஸ்ல ஏத்தி விடு.போதும்.

கோயம்பேடு வந்து திருச்சி பேருந்தில் உட்கார வைத்து தண்ணீர் பாட்டிலும் சில பிஸ்கட் பாக்கட்டும் சில வார இதழ்களும் வாங்கிக் கொடுத்தேன்.

பேருந்து புறப்படும் போது  கையசைத்தாள்.நானும் கையை அசைத்தேன். பேருந்து திரும்பும் போது ஒரு பேப்பர் மடிப்பு அவள் கையில் இருந்து கீழே விழுந்தது.

'அன்புள்ள  சந்த்ரு இன்னைக்கு  ரொம்ப சந்தோசமா இருந்தேன். என் பால்ய காலத்தை மீட்டு கொடுத்ததிற்கு மிக்க நன்றி. இதுவே நம் கடைசி சந்திப்பாக இருக்கட்டும்.உன்னை வாழ்க்கையில் திரும்ப சந்திப்போமா என்று நினைத்தேன்.உன்னை சந்தித்து விட்டேன்.அது போதும் எனக்கு.

உன் குழந்தைகளுக்கு என் ஆசிகள்.என் நினைவை இ்த்தோடு அழித்து விடு.உன் மனைவியை எப்போதும் போல் சந்தோசமாக வைத்துக் கொள்.நாம் இனிமேல் எப்போதும் சந்திக்க வேண்டாம்.அது இருவருக்குமே நல்லதல்ல.  நான் எங்கு இருக்கிறேன் என் மொபைல் நம்பர் என்ன, நான் பேஸ்புக்கில் இருக்கிறேனா   என்று தேட முயற்சிக்க வேண்டாம் பை.

இப்படிக்கு, உன் தோழி நிலா'.

பேருந்து என் கண்களில் இருந்து மறைந்து போனது.
*****************

பேருந்தில் பயணித்த வெண்ணிலா தன் மொபைல் எடுத்து பேஸ்புக்கை திறந்து அதில் சந்திரசேகரன் சுப்ரமணியன் என்ற பேஸ் புக் பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளையும் அறியாமல் சந்திரசேகரனின் புரபைல் பிக்சரை அவளது விரல்கள் ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது. அவள் உதடுகள்
'சந்த்ரூஊஊஊஊஊ' என்று முணுமுணுத்தன.

முற்றும்.

*எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு சந்த்ரூவும் எல்லா ஆண்களுக்குள்ளும் ஒரு வெண்ணிலாவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

-மகா

பெண் குழந்தை

''பொட்டப்புள்ள பொறந்தா
இங்க வராதே"

விட்டு விட்டு வலிக்கும் இடுப்பு வலியை விட மாமியார் சொன்ன வார்த்தைகள் குத்தூசிகளாய் துளைத்தன
வசந்திக்கு.

"ஏன் அண்ணி இது முத புள்ள. எது பொறந்தாலும் நல்லபடியா பொறக்கட்டுமே. நம்ம கையிலியா இருக்கு?"
-இது அம்மா.

"சீர்செனத்தி செய்யக் கூட வக்கில்ல.இதுல பேச்சிக்கெல்லாம் குறைச்சல் இல்ல"

அம்மா மென்று முழுங்கினாள்.

வளைகாப்பு முடிந்து தாய் வீடு சென்றபோது மாமியார் சொன்ன வார்த்தைகள் வசந்திக்கு ஞாபகத்தில் வந்து போனது.

"இந்தாளு எங்கம்மா போய் தொலைஞ்சாரு?"

"நான்தான் உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வரச் சொன்னேன் வசந்தி"

வசந்திக்கு கணவன் தன் பக்கத்தில் இருந்தால் போதுமென்று இருந்தது.

"ம்க்கும் இப்ப  அதான் குறைச்சல்"

நர்ஸ் வந்து பார்த்து விட்டு இன்னைக்கு இராத்ரிக்குள்ள சுகபிரசவம் ஆயிடும் என்று சொல்லி விட்டுப் போனாள்..

சொல்லி வைத்த மாதிரி காலை நான்கு மணிக்கு அழகான தங்க விக்கிரகம் போல்  பெண் குழந்தை பிறந்தது.

வசந்தியின் கணவன்  தான் அப்பாவான சந்தோசத்தில் எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்துக்கொண்டிருந்தான்.

கண் விழித்த  வசந்திக்கு மாமியாரை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கவலை எழுந்தது.....

காலை விசயம் தெரிந்து ஒவ்வொருவராக பார்க்க வந்தார்கள். 

மெதுவாக எட்டுமணிக்கு மாமியார் வந்தாள். வசந்திக்கு குலை நடுங்கியது. 

" வாங்க அண்ணி"

- வசந்தியின் அம்மா ஈனஸ்வரத்தில முனகினாள்.

வசந்தியின் மாமியார் உள்ளே நுழைந்தவள்  குழந்தையைத் தூக்கி கொஞ்சினாள்.

மருமகளைப் பற்றி சம்பந்தியிடம் விசாரித்தாள்.

வசந்திக்கோ தலைச் சுற்றியது. மழை ஏதாவது வருகிறதா என வெளியேப் பாரத்தாள்.

வசந்தியின் அம்மா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

கொஞ்ச நேரத்தில் வசந்தியின் மாமியார் வெளியே சென்ற பிறகு  வசந்தியின் நாத்தனாரிடமிருந்து
போன்.

"எங்கம்மா வந்தாங்களா?"

"வந்துட்டு இப்பத்தான் வெளியே போனாங்க"

"ஏய் எப்படி நான் போட்ட பிளான்?எங்கம்மா பேத்திய கொஞ்சிருப்பாங்களே"

"ஆமாண்டி.நீ என்ன பண்ண?"

"இரண்டு பொட்டப்புள்ளைய பெத்துட்டேன்னு என்ன எம் மாமியா திட்றான்னு நான்தான் எங்கம்மாவுக்கு போன் பண்ணேன்"

"தேங்க்ஸ்டி"

"அச்சோ இதுக்காலாமா தேங்க்ஸ் சொல்வாங்க. எம் மருமவ எப்டி இருக்கா?நாளைக்கு வரேன்டி. உடம்ப பாத்துக்க"

வசந்தி  மனதிற்குள் நாத்தனாரை வாழ்த்தினாள்.

Thursday, February 16, 2017

உண்மைகள் விற்கும் வியாபாரி

உண்மைகள் விற்கும்
வியாபாரி ஒருவன்
தெருவில் கூவியபடி சென்று கொண்டிருந்தான்

எதற்கும் அஞ்சாறு உண்மைகளை
வாங்கிப் போட்டால் நல்லதென்று
அழைத்தேன்.

விலையை சொன்னான்
விலையதிகம் என்றேன்
குறைத்தால் கட்டுப்படியாகாதென்றான்

எல்லாம் பழையபொருள் என்றேன்
கிடைப்பதற்கரியதென்றான்

துருவேறி விட்டதென்றேன்
துருவேறினாலும் உருமாறாதென்றான்

கடைசியாய் என்னவிலையென்றேன்
முதலிலிருந்தே ஒரேவிலைதான் என்றான்

விற்காத பொருளை ஏன் தூக்கி
சுமக்கிறாயென்றேன்
வேறொன்றும் தெரியாதென்றான்

பொய்களை விற்கிறாயா
தூக்கி சுமக்க தேவையில்லை
என்றேன்
பழக்கமில்லை என்று சொல்லி
நடையை கட்டினான்

உன் பெயரென்ன என்றேன்
மனசாட்சியென்று சொல்லி
மறைந்து போனான்.

Thursday, August 4, 2016

கலிகாலம்

சமஸ்கிருத நூல்களிலிருந்து....

கலிகாலத்தில்....
~~~~~~~~~~~~~~

தர்மம், சத்தியம், ஆச்சாரம்,பொறுமை,தயை, ஆகியவை தினமும் நாசமடைந்து கொண்டே இருக்கும்.
நல்லகுணம் மேண்மை ஆகியவற்றுக்கு பணமொன்றே சாட்சியமாகும்.

நியாய விவகாரங்களில் வெற்றி தோல்வி செல்வத்தை பொறுத்தே அமையும்.

ஒருப் பெண்ணும் ஆணும் கணவன் மனைவியாக வாழ்வது ஆசையைப்ப பொறுத்தே அமையுமேத் தவிர, வேறு எந்த காரணத்தையும் கொண்டு இருக்காது.

வர்த்தகத்தில் ஏமாற்றுவேலையே முக்கிய அம்சமாக உருவெடுக்கும்.

பூணுல் ஒன்றைத்தவிர வேறு எதுவும் பிராமணனுக்கு அடையாளமாக இருக்காது.

நிறைய பேசுவன் பண்டிதன் என போற்றப்படுவான்.

பேராசை கொண்டவர்களும் கருனையற்றவர்களும் திருடர்களின் குணத்தை கொண்டவர்களும் ஆட்சியாளர் ஆவார்கள்.

இம்மாதிரி குணங்களை கொண்ட கலி முற்றும் போது தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்த பகவான்  அவதரிப்பார்.

#ஸ்ரிமத் பாகவதம்

Tuesday, May 19, 2015

சங்கிலி

"சுந்தரி, இனிமே நீ அந்த சங்கிலியோட சுத்துறத பாத்தேன் தொலைச்சுடுவேன் தொலைச்சி. ச்சே...ச்சே கருமம் அந்த தெருப்பொறுக்கியோட கொஞ்சறதும் குலாவுறதும் எனக்கு சுத்தமா பிடிக்கல"

"அதுல என்னப்பா தப்பு? உங்களுக்கு பிடிக்கலன்னா போங்க, எனக்கு பிடிச்சிருக்கு"

"பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு எம்புத்திய...., அதிலும் நான் இல்லாத நேரம் பாத்து உன் பெட்ரூம் வரைக்கும் வந்துருக்கான் அந்த தெருபொறுக்கி நாய்"

"அப்பா அவன திட்டாதிங்க எனக்கு பொல்லாத கோபம் வரும்"

"ஓஹோ அந்த நாய்க்காக பெத்த அப்பனயே எதுத்து பேசுறியாமா?"

"அப்பா அவன் நாய்தான். ஆனா அவன் இல்லன்னா என்னால பாதுகாப்பா ஆபிஸ் போய்ட்டு வரமுடியாது. அதோட அவன் தெருவுல கிடக்கிறத எதுவும் திங்க மாட்டான். நம்ம வீட்ல கூட நான் தட்டுல போட்டாதான் திம்பான். அவன் வந்த வந்ததிலிருந்து திருட்டுபயம் கம்மியாடிச்சி"

அவள் சொல்வதை புரிந்து கொண்டதை போல் நன்றியுடன் வாலை ஆட்டினான் சங்கிலி.

"எப்படியாவது தொலைங்க.நான் ஆபிஸ் போறேன்"

கேட்டதை கொடுக்கும் தேவதை

எனக்கோ பெருங்கவலை.எத்தனை உழைத்தாலும் என்னால் பெரும்பொருள் சேர்க்க முடியவில்லையே என.

என் விருப்பத்தை கேட்டதை கொடுக்கும் தேவதையிடம் முறையிட்டு அழுது புலம்பி விட்டு அப்படியே உறங்கிப் போனேன்.

உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தவன் என் பக்கத்தில் மரவுரி கிடப்பதை கண்டேன்.

'செல்வத்தை வேண்டினால் மரவுரி கிடைக்கிறது. தேவதையின் மேல் கோபம் கொண்டேன்.

சிறிது நேரம் கழித்து தேவதையின் விருப்பம் இதுதான் போலும்
என மன நிம்மதியடைந்து மரவுரியை உடுத்திக்கொண்டு காட்டிற்கு கிளம்பினேன். அங்கே ஓர் ஆசிரமம் அமைத்து தவம் செய்ய ஆரம்பித்தேன்.

முதலில் காய் கனி உண்டவன் காலப்போக்கில் சருகுகளை உணவாக கொண்டேன். பின் வெறும் காற்றை மட்டும் உணவாக கொண்டேன். பின் காற்றில்லாமல் கூட வாழ பழகினேன்.

உள்ளத்தில் பேரானந்தம் கிட்டியது.

என் தவ வலிமையும் அதிகமாயிற்று.
இப்போது நான் கேட்டது எல்லாம் கிடைக்கும். ஆனால் எதுவுமே எனக்குத் தேவையில்லை.

என் முன் அந்த தேவதை தோன்றினாள்

தேவதை எனக்கு செல்வம் கொடுக்கவில்லை என்ற கோபம் இப்போது இல்லை.அதைவிட வலிமையான மனஅமைதி கிடைத்தது குறித்து மகிழ்ந்தேன்....

"இப்போது சொல் . செல்வம் வேண்டுமா?" - தேவதை கேட்டாள்.

"வேண்டாம் தாயே.அதை விட மனஅமைதி எனும் பெரும் செல்வம் கிடைத்திருக்கிறது"

தேவதை மறைந்தாள்

கனவுலகிலிருந்து நனவுலகுக்கு மீண்டேன்.

பக்கத்து வீட்டு குழந்தை அம்மாவிடம் இன்னொரு சாக்லேட் கேட்டு அடம்பிடித்தான்.

அம்மா பொறுமையாக அடம் பிடிக்கும் குழந்தையை கையிலெடுத்து சாக்லேட் கொடுக்காமல் குழந்தைக்கு பால்சோறு ஊட்டினாள்.

குழந்தை சோற்றை தட்டிவிட்டு அழுதான். அன்னை அழும் குழந்தையின் முதுகில் இரண்டு வைத்தாள்.

குழந்தை வாயை மூடிக்கொண்டு இல்லை இல்லை வாயைத்திறந்தபடி சாப்பிட ஆரம்பித்தான் பால்சோற்றை.

‪#‎நான்‬ படித்த கதையை கொஞ்சம் மாற்றி....