"ஆர் யூ அரவிந்த்?"
என்ற பெண் குரல் கேட்டு நிமிர்ந்தவன் திகைத்துப் போனான்
"என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்?"
"வெளியே சார்ட்ல பார்த்தேன்"
"ஓ...!"
உடனே அவளிடம், ஏதோ சொல்ல துடித்தான்.
'ம்ஹூம் இப்ப வேனாம். கொஞ்சம் பழகிட்டு சொல்வோம். எடுத்த உடனே சொன்னா நல்லாருக்காது' என மனதை தேற்றிக் கொண்டான்.
அடுத்து அந்த குயில் கூவியது
"நீங்க சென்னைக்கா?"
"ஆமாங்க"
"என்ன மூடியா இருக்கிங்க? ஜாலியா இருங்க அரவிந்த்.நானும் சென்னைக்குதான்"
"உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா மேடம்?"
"அர்ச்சனா"
பரபரவென்று பேஸ்புக்கை திறந்து அர்ச்சனா வென்று டைப் பண்ணி செர்ச் கொடுத்தான் வந்து விழுந்த அர்ச்சனாக்களில் ஒன்றை தெரிவு செய்து,
இது நீங்கதானே என்று அவளிடம் காட்டினான்.
"ஆமாம்"
"அது என்ன எல்லா அர்ச்சனாக்களும் ஐபிஎஸ் படிக்கிறிங்க?"
"ஏய் யூ நாட்டி."
"போலிஸ்?"
"ஆமா, இப்ப இல்ல"
அதன் அர்த்தம் புரிந்தவனாய் ஆமோதித்தான்.
"பேஸ்புக்ல பொளந்து கட்டுறிங்க. கதை கவிதைன்னு"
"பொழுது போகனுமே"
"ஆனா என்னோட ரெக்வஸ்ட பெண்டிங்க்ல வச்சிருக்கிங்க"
"முன்னபின்ன தெரியாதவங்கள நான் சேத்துக்க மாட்டேன்"
"இப்பத்தான் தெரியுமே"
இந்த ரயில் சென்னை போக ஒருநாள் இருக்குல்ல, பாப்போம்"
இப்போது அரவிந்துக்கு அவளிடம் இன்னொரு கேள்வியை கேட்கத் தோன்றியது,பேஸ்புக்கில் கூட நண்பனாக ஏற்றுக் கொள்ளாதவளிடம் கேட்டால் சப்பென்று அறைந்தால் என்ன செய்வது என்று தோன்றியது அவனுக்கு.....
ஆனால் அவள் மற்றபடி வெகு ஸ்வராஸ்யமாகத்தான் பேசிக்கொண்டே வந்தாள்.
வழிநெடுக அவனும் அவளுக்கு தேவையான உணவுகளை வாங்கிக் கொடுத்து கர்ம சிரத்தையாக பார்த்துக் கொண்டான்.
அரக்கோணம் வந்தவுடன், தூங்கிக் கொண்டிருந்த அரவிந்தை தட்டி எழுப்பினாள் அர்ச்சனா.
"குட்மார்னிங் மேடம்"
"அப்பறம்?..,இந்தா பேஸ்புக்ல ரெக்வஸ்ட் ஓகே பண்ணிட்டேன்"
"தேங்க் யூ.....காபி சாப்பிடலாமா?"
"ஷ்யூர்"
"இன்னும் கொஞ்ச நேரத்துல பிரிய போறோம், உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லனும். இன்னொரு விசயம் கேட்கனும்"
"ம் சொல்லு"
"அடிக்க மாட்டிங்கல்ல?"
"சும்மா கேளு அரவிந்த்"
"முதல்ல சொல்றது, அடுத்து கேட்பது"
"ஓகே"
"நீங்க என் பாட்டி மாதிரியே இருக்கிங்க"
அவன் சொன்னதை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தபடி அவன் முகத்தை இரண்டு கைகளாலும் ஏந்தியபடி அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
"டேய் படவா என்னமோ கேட்கப் போறேன்னு சொன்ன"
"அடிக்கமாட்டிங்ல்ல ?"
"ம்ஹூம்"
"உங்களுக்கு பேத்தி இருக்காங்களா?"
"படவா ராஸ்கல்., குறும்புக்காரன்டா நீ.... இரண்டு பேர் இருக்காளுங்க.....அட்ரஸ் தரேன். வீட்டுக்கு வா"
என்றாள் அறுபது வயது அர்ச்சனா ஐபிஎஸ்.
No comments:
Post a Comment