Friday, November 17, 2017

பெண் குழந்தை

''பொட்டப்புள்ள பொறந்தா
இங்க வராதே"

விட்டு விட்டு வலிக்கும் இடுப்பு வலியை விட மாமியார் சொன்ன வார்த்தைகள் குத்தூசிகளாய் துளைத்தன
வசந்திக்கு.

"ஏன் அண்ணி இது முத புள்ள. எது பொறந்தாலும் நல்லபடியா பொறக்கட்டுமே. நம்ம கையிலியா இருக்கு?"
-இது அம்மா.

"சீர்செனத்தி செய்யக் கூட வக்கில்ல.இதுல பேச்சிக்கெல்லாம் குறைச்சல் இல்ல"

அம்மா மென்று முழுங்கினாள்.

வளைகாப்பு முடிந்து தாய் வீடு சென்றபோது மாமியார் சொன்ன வார்த்தைகள் வசந்திக்கு ஞாபகத்தில் வந்து போனது.

"இந்தாளு எங்கம்மா போய் தொலைஞ்சாரு?"

"நான்தான் உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வரச் சொன்னேன் வசந்தி"

வசந்திக்கு கணவன் தன் பக்கத்தில் இருந்தால் போதுமென்று இருந்தது.

"ம்க்கும் இப்ப  அதான் குறைச்சல்"

நர்ஸ் வந்து பார்த்து விட்டு இன்னைக்கு இராத்ரிக்குள்ள சுகபிரசவம் ஆயிடும் என்று சொல்லி விட்டுப் போனாள்..

சொல்லி வைத்த மாதிரி காலை நான்கு மணிக்கு அழகான தங்க விக்கிரகம் போல்  பெண் குழந்தை பிறந்தது.

வசந்தியின் கணவன்  தான் அப்பாவான சந்தோசத்தில் எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்துக்கொண்டிருந்தான்.

கண் விழித்த  வசந்திக்கு மாமியாரை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கவலை எழுந்தது.....

காலை விசயம் தெரிந்து ஒவ்வொருவராக பார்க்க வந்தார்கள். 

மெதுவாக எட்டுமணிக்கு மாமியார் வந்தாள். வசந்திக்கு குலை நடுங்கியது. 

" வாங்க அண்ணி"

- வசந்தியின் அம்மா ஈனஸ்வரத்தில முனகினாள்.

வசந்தியின் மாமியார் உள்ளே நுழைந்தவள்  குழந்தையைத் தூக்கி கொஞ்சினாள்.

மருமகளைப் பற்றி சம்பந்தியிடம் விசாரித்தாள்.

வசந்திக்கோ தலைச் சுற்றியது. மழை ஏதாவது வருகிறதா என வெளியேப் பாரத்தாள்.

வசந்தியின் அம்மா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

கொஞ்ச நேரத்தில் வசந்தியின் மாமியார் வெளியே சென்ற பிறகு  வசந்தியின் நாத்தனாரிடமிருந்து
போன்.

"எங்கம்மா வந்தாங்களா?"

"வந்துட்டு இப்பத்தான் வெளியே போனாங்க"

"ஏய் எப்படி நான் போட்ட பிளான்?எங்கம்மா பேத்திய கொஞ்சிருப்பாங்களே"

"ஆமாண்டி.நீ என்ன பண்ண?"

"இரண்டு பொட்டப்புள்ளைய பெத்துட்டேன்னு என்ன எம் மாமியா திட்றான்னு நான்தான் எங்கம்மாவுக்கு போன் பண்ணேன்"

"தேங்க்ஸ்டி"

"அச்சோ இதுக்காலாமா தேங்க்ஸ் சொல்வாங்க. எம் மருமவ எப்டி இருக்கா?நாளைக்கு வரேன்டி. உடம்ப பாத்துக்க"

வசந்தி  மனதிற்குள் நாத்தனாரை வாழ்த்தினாள்.

No comments:

Post a Comment