Tuesday, July 14, 2020

சென்னை எக்ஸ்பிரஸ்



"ஆர் யூ அரவிந்த்?"

என்ற பெண் குரல் கேட்டு நிமிர்ந்தவன் திகைத்துப் போனான் 

"என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்?"

"வெளியே சார்ட்ல பார்த்தேன்"

"ஓ...!"

உடனே அவளிடம், ஏதோ சொல்ல துடித்தான்.

'ம்ஹூம் இப்ப வேனாம். கொஞ்சம் பழகிட்டு சொல்வோம். எடுத்த உடனே சொன்னா நல்லாருக்காது' என மனதை தேற்றிக் கொண்டான்.

அடுத்து அந்த குயில் கூவியது

"நீங்க சென்னைக்கா?"

"ஆமாங்க"

"என்ன மூடியா இருக்கிங்க? ஜாலியா இருங்க அரவிந்த்.நானும் சென்னைக்குதான்"

"உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா மேடம்?"

"அர்ச்சனா"

பரபரவென்று பேஸ்புக்கை திறந்து அர்ச்சனா வென்று டைப் பண்ணி செர்ச் கொடுத்தான் வந்து விழுந்த அர்ச்சனாக்களில் ஒன்றை தெரிவு செய்து,

இது நீங்கதானே என்று அவளிடம் காட்டினான்.

"ஆமாம்"

"அது என்ன எல்லா அர்ச்சனாக்களும் ஐபிஎஸ் படிக்கிறிங்க?"

"ஏய் யூ நாட்டி."

"போலிஸ்?"

"ஆமா, இப்ப இல்ல"

அதன் அர்த்தம் புரிந்தவனாய் ஆமோதித்தான்.

"பேஸ்புக்ல பொளந்து கட்டுறிங்க. கதை கவிதைன்னு"

"பொழுது போகனுமே"

"ஆனா என்னோட ரெக்வஸ்ட பெண்டிங்க்ல வச்சிருக்கிங்க"

"முன்னபின்ன தெரியாதவங்கள நான் சேத்துக்க மாட்டேன்"

"இப்பத்தான் தெரியுமே"

இந்த ரயில் சென்னை போக ஒருநாள் இருக்குல்ல, பாப்போம்"

இப்போது அரவிந்துக்கு அவளிடம் இன்னொரு கேள்வியை கேட்கத் தோன்றியது,பேஸ்புக்கில் கூட நண்பனாக ஏற்றுக் கொள்ளாதவளிடம் கேட்டால் சப்பென்று அறைந்தால் என்ன செய்வது என்று தோன்றியது அவனுக்கு.....

ஆனால் அவள் மற்றபடி வெகு ஸ்வராஸ்யமாகத்தான் பேசிக்கொண்டே வந்தாள். 
வழிநெடுக அவனும் அவளுக்கு தேவையான உணவுகளை வாங்கிக் கொடுத்து கர்ம சிரத்தையாக பார்த்துக் கொண்டான்.

அரக்கோணம் வந்தவுடன், தூங்கிக் கொண்டிருந்த அரவிந்தை தட்டி எழுப்பினாள் அர்ச்சனா.

"குட்மார்னிங் மேடம்"

"அப்பறம்?..,இந்தா பேஸ்புக்ல ரெக்வஸ்ட் ஓகே பண்ணிட்டேன்"

"தேங்க் யூ.....காபி சாப்பிடலாமா?"

"ஷ்யூர்"

"இன்னும் கொஞ்ச நேரத்துல பிரிய போறோம், உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லனும். இன்னொரு விசயம் கேட்கனும்"

"ம் சொல்லு"

"அடிக்க மாட்டிங்கல்ல?"

"சும்மா கேளு அரவிந்த்"

"முதல்ல சொல்றது, அடுத்து கேட்பது"

"ஓகே"

"நீங்க என் பாட்டி மாதிரியே இருக்கிங்க"

 அவன் சொன்னதை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தபடி அவன் முகத்தை இரண்டு கைகளாலும் ஏந்தியபடி அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

"டேய் படவா என்னமோ கேட்கப் போறேன்னு சொன்ன"

"அடிக்கமாட்டிங்ல்ல ?"

"ம்ஹூம்"

"உங்களுக்கு பேத்தி இருக்காங்களா?"

"படவா ராஸ்கல்., குறும்புக்காரன்டா நீ.... இரண்டு பேர் இருக்காளுங்க.....அட்ரஸ் தரேன். வீட்டுக்கு வா"

என்றாள் அறுபது வயது அர்ச்சனா ஐபிஎஸ்.

Tuesday, July 7, 2020

வணக்கத்திற்குரிய மாமியாரே...!



 செந்திலுக்கு வணக்கம் வைத்துவிட்டு  ஐயோ  இந்த கையால  அந்த நாய்க்கு வணக்கம் வேற வச்சுட்டேனே  கைய அடுப்புக்குள்ள அப்படியே  வச்சி கரிக்கு விட்டுறலாமா என்று புலம்பிய கவுண்டமணி போல் மனதுக்குள் கறுவிக்கொண்டிருந்தான் சந்துரு.

  பெண் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து இப்படித்தான்  நிலைகொள்ளாமல் தவித்தான்.  அக்கா அம்மா தங்கை   இப்படி எல்லோரும் 
' பொண்ணுக்கு என்னடா குறைச்சல் ஏன்டா இந்த பொண்ண வேணாங்குற'
 என்று கேட்டதிற்கு பதில் சொல்ல முடியாமல்   தவித்தான்.

" நல்லாத்தான்டா பொண்ணு பாக்க வந்த உனக்கென்னடா ஆச்சி? ஏன் பிடிக்கலங்குற "  - அக்கா 

" டேய் நிறைய வரன் தட்டிப்போய் இந்த பொண்ணு அமைஞ்சிருக்குடா,  பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு எல்லாத்துக்கும் உன்னப்பிடிச்சிப்போச்சாம்டா சரின்னு சொல்லுடா - அம்மா

அவனுக்கும் பெண்ணைப் பார்த்தவுடன் பிடித்து தான் இருந்தது.. ஆனால்?

" டேய் பொண்ணோட அம்மா போன் பண்ணாங்கடா அவங்களுக்கு என்ன சொல்றது இப்ப. உன் முடிவுதான் என்னா ஏன் வானாங்குற சொல்லித் தொல மொதல்ல" 
அப்பா கிடுக்கிப்பிடி போட்டார்.

" பொண்ணோட அம்மா என்ன சொன்னா..... ங்க  அப்பா?"

" மாப்பிள்ளைக்கு பொண்ண பிடிச்சிருக்கான்னு கேட்க சொன்னாங்க. சீக்கிரம் முடிவை சொல்லுங்க. வேற இரண்டு இடத்திலிருந்து பொண்ணு கேட்டு வந்திருக்காங்க அப்படின்னாங்க"

" யோசனை பண்ணி சொல்றேம்பா"

" இன்னும் என்ன அண்ணா  யோசனை? " தங்கை

" இப்பவே காரணத்தை சொல்லு"-  அக்கா

'எப்படிச் சொல்லி இவர்களுக்கு புரிய வைப்பது? '

நழுவப் பார்த்தான்.

" சொல்லிட்டு போடா" 
அப்பா கர்ஜித்தார்

அப்பாவை பற்றி தெரியும்.
கோபம் வந்தால் அவ்வளவுதான்.

" டேய் எதா இருந்தாலும் மறைக்காம சொல்லுடா"- அம்மா

" இல்லம்மா பொண்ணோட அம்மா இருக்காங்கல்ல?"

" ஆமா ரம்யா  அவளுக்கென்ன?  உனக்கு நல்ல மாமியார் கிடைச்சிருக்காங்கடா"

" ஐயோ ரம்யா என்னோட மாமியார்னு  சொல்லாதிங்க சகிக்கல"

" பின்ன எப்படி, அவளோட பொண்ண கட்டுனா அவ உனக்கு மாமியார் தானே? என்ன வயசு கொஞ்சம் கம்மியா இருக்கா அதுக்கென்ன?"

" ஐயோ எங்கூட ஒன்னா படிச்சவலாம் எனக்கு மாமியாரா?"

" என்னது ரம்யா உங்கூட படிச்சாளா?"

" ஆமாம்மா, படிக்கிறப்ப  செம  கிண்டல் பண்ணுவேன். என்னக்கண்டாலே அலறி அடிச்சிக்கிட்டு ஓடுவா"

"அடக்கடவுளே, அதான் வேணாங்குறியா?"

" இப்ப சொல்லு, அவளப்போய் சாரி அவங்களப்போய் எப்படி என் மாமியார்ன்னு சொல்றது?"

" சரி சின்ன மாமியாருன்னு சொல்லிக்க"

" சின்ன மாமியாரா?"

" ஆமா,   அவளோட  அக்காப்பொண்ண நீ  கட்டுனா அவ உனக்கு சின்ன மாமியார்தானே?"

" அப்ப பொண்ணு பார்க்க போனப்ப வார்த்தைக்கு வார்த்தை என்னோட பொண்ணு என்னோட பொண்ணுன்னு சொன்னாளே"

" அது உன்ன சீண்ட... எப்படிலாம் அவள  கிண்டல் பண்ணியாம் அவளே எல்லாத்தையும் சொல்லிட்டா. அப்பறம்    தன்னோட அக்காப்பொண்ணுக்கு உன்னை  மாப்பிள்ளையா சஜஸ்ட் பண்ணது  அவளேதான்.
பொண்ணுக்கு அந்தப்பக்கம் உக்காந்து இருந்தவங்கதான் பொண்ணோட அம்மா.  உனக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கத்தான்  தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல... சரி சரி  சின்ன மாமியாரை மரியாதையா பேசு நான் அவங்களுக்கு தகவல் சொல்லிடுறேன்"

" மொதல்ல அந்த ரம்யா நம்பர கொடும்மா அந்த ரம்யாவ ஒரு வழி்பண்றேன்"

" டேய் பொண்ணோட நம்பர கேட்டாலும் ஒரு லாஜிக் இருக்கு. மாமியாரோட நம்பர கேக்குறான் பாரு ..... போய் வேலைய பாருடா" 
என்றபடி அக்கா நொடித்து விட்டுப்போனாள்.