இன்னும் சற்று நேரத்தில்
உலகம் அழியப்போவது போல
ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி ஓடிக்கொண்டிருந்தனர்
பலூன் காரன் கையில் இருந்த ஊதிய பலூன்கள்
அவிழ்த்து விட்டால் பறந்துவிடுவோம் என்பது போல் ஆர்ப்பரித்தன
பலூனையே முறைத்தபடி
இருந்தது
காய்கறிக் கடையில் வெண்டைக்காயின்
முனை ஒடித்து போட்டபடி
பேரம்பேசிய தாயின் இடுப்பில் இருந்த
குழந்தை ஒன்று.
சாராய நெடியில் நாளைய உலகம் நம் கையில் என்பது போல் பிதற்றினர் இருவர்
தேநீர் கடையின் வாசலில்
தேநீரை உறிஞ்சியபடி சிலர்
இத்தனைபேர் மத்தியில்
நின்றபடி,
"ஏ அயோக்கியனே திரும்பிப் பார்"என்றேன்
நாலைந்து பேர் திரும்பிப் பார்த்தனர்.
"ஏ குடிகாரா" என்றேன்.
இரண்டு குடிமகன்களும் திரும்பிப் பார்த்தனர்.
"ஏ திருட்டுப் பயலே"
என்றேன்
ஏழெட்டு பேர் ஏக காலத்தில்
திரும்பினர்.
"ஏ மனிதனே திரும்பிப் பார்"
என்றேன்.
ஒருவரும் திரும்பிப் பார்க்க வில்லை
ஊதிய பலூனின் நூலை
கையில் பிடித்தபடி
அம்மாவின் இடுப்பில் இருந்த குழந்தை என்னைப் பார்த்து புன்னகைத்தது
No comments:
Post a Comment