Friday, December 19, 2014

அது கிராமத்து பண்ணை வீடு

சுற்றிலும் வயல்கள் நடுவில் இரண்டு கூரை வீடுகள். வீட்டிற்கு அருகிலியே பெரிய பெரிய பாறை கிணறுகள்.மழைநாட்களில் வரப்புகளில் நடந்து கொண்டே கிணறுகளின் தண்ணீரை காலால் எத்தலாம்.

தாறுமாறாய் உள்ளே குதித்தால் பாறை குத்தி கிழித்து விடும்.

கவலை போட்டுத்தான் தண்ணீர் இறைப்பார்கள் வயல்களுக்கு.

பாறையின் இடுக்குகளில் குபுக் குபுக் என தண்ணீர் கொட்டுவது ரம்மியம்.

இடை இடையே நெளியும் பாம்புகளை கண்டால் பவ்யம்.

அந்த வீடுகளில் காசு பணம் இருக்க வழியில்லை. மூட்டை மூட்டையாக கம்பும், சோளமும், நெல்லும் , எள்ளும், வெல்லமும்-(அப்போதெல்லாம் சர்க்கரை ஆலைகள் ஏது?)
அடுக்கப் பட்டிருக்கும்.

திருடர்கள் அந்த வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

அந்த வீட்டில் உறுப்பினர்கள் அதிகம். வயதுக்கு வந்த பெண்கள்(என் சித்திகள்), குழந்தைகள்(மாமா பிள்ளைகள்)
,புதிதாய் கல்யாணம் செய்த சின்னமாமி வரிசையாக தூங்கி கொண்டுருந்தார்கள்.

திருடன் வந்ததும் முதலில் விழித்தது என் நடு சித்தி.

என்ன செஞ்சாங்க தெரியுமா?

கண்ண கெட்டியா மூடிக்கிட்டாங்க

திருடர்கள் சோற்று பானையை கூட விட வில்லை.
அந்த வீட்டில் அடுப்பு எப்பவும் அனையாது.
கம்பஞ்சோறு , சோளசோறு பெரிய பானையில் ஆக்குவாங்க வயல்களில் வேலை செய்பவர்களுக்காக.

அந்த வீட்டிற்கு யார் எப்போது போனாலும் பசியாறலாம்.

அந்த பானையை கூட விடவில்லை வந்தவர்கள்

மறுநாள் திருடர்கள் யாரென்று தெரிந்து என பெரிய மாமா அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்.

உடன்படிக்கையின் சாராம்சம்:

இனி எங்கள் வீட்டில் திருட கூடாது
வருடம் ஒரு முறை உங்களுக்கு காணிக்கை கொடுக்கப்படும். காணிக்கை என்றால் பணம் அல்ல. விளைப் பொருட்கள்.

அதன் பிறகு அவர்கள் அங்கு திருட வர வில்லை.

கொஞ்ச நாள் கழித்து சித்தி சொன்னாங்க

"எனக்கு திருடங்க வந்தது தெரியும்"

"ஏன்டி சத்தம் போடல?"

"என்ன கொன்னுபுட்டானா?"

Friday, December 5, 2014

இன்று கார்த்திகை தீபமாமே
எனக்கொன்றும்
புரியவில்லை
மாலையும்
மயக்குகிறது
கொஞ்சம்
விளக்கிடேன்
ஒளி பரவட்டும்
அகத்திலும்
புறத்திலும்.

Tuesday, December 2, 2014

உன் முதல் நகர்த்தலிலேயே
என் ஆட்டம் களை கட்ட
துவங்கி விடுகிறது.

உதிர்த்துக் கொண்டே
இருக்கிறாய்
கோர்த்துக் கொண்டே
இருக்கிறேன்
உன் வார்த்தைகளை,
உதிர்ந்து போவது
நான் என்பது
அறியாமல்.
****-***********
******************

கசங்கிய காகிதம்
சொல்லிச் செல்கிறது
கசந்த நட்பு
புதுப்பிக்க முடியாதென்று.
***************

குபேரமூலையில்
பணப்பெட்டியை
வை, அடுக்கடுக்காய்
பெருகும் என்றார்.

நானும் அடுக்கி வருகிறேன்
அடகு கடை ரசிதுகளை.

********-**-******-*-*-*-*
**-*--**********************